Tuesday, February 14, 2012

அண்மைக்கு BOO என்ற அழகன்



எங்கோ படித்தது, வளர்ப்பு மிருகங்களுக்கு நீங்கள் எந்தளவு இடம் தருகிறீர்கள் என்ற பட்டியலில் இருந்தவை அனைத்துமே நாங்கள்செய்துக் கொண்டு இருக்கிறோம்.

“இனி” >உங்களுக்கு நினைவு இருக்கலாம். நாலு மாதங்களுக்கு முன்பு
வீட்டு வாசலில் ஏழெட்டு குட்டி பிள்ளைகள் ஊர்வலம் போய் கொண்டு இருந்தன.
சத்தம் கேட்டு பார்த்தால் ஒரு பையனின் கையில், உள்ளங்கை சைசில்
வெள்ளை வெளேர் என்று உயிரை கண்ணில் தேக்கிக் கொண்டு, பாதி
உயிரில் எங்களைப் பார்த்தது “BOO” . சரி, நம் “இனி” க்கு தோஸ் ஆச்சு
என்று ஃபூ வை அழைத்து வந்தோம்.

பாவம், யாரோ கொண்டு வந்து பார்க்கில் போட்டு இருக்கிறார்கள். ஒரு
நாள் முழுதும் கதறி இருக்கிறது. நாலைந்து நாள் குட்டி, ஒரு கிளாஸ்
பாலை நக்கி நக்கி குடித்தது.
“இனி” போல் இல்லை, மகா வால். நடக்கவே தெரியாது, துள்ளி துள்ளி
ஓட்டம்தான்.
ஹூம், குடும்பம் பெரிதாகிறது 

Sunday, October 30, 2011

ஒரு நாள் ஒருபொழுது

ரயில் சூரத் நகரின் பிளாட்பாரத்தில் நுழைவதைப் பார்த்ததும் படேல், பாலாஜியை இழுத்துக்கொண்ட ஓடினான்.

“பர்ஸ்ட் கிளாஸ், ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட் படேல்!” கத்தினான் பாலாஜி.

”ஹாங் சாப், இங்க எல்லாமே அன்-ரிசர்வுடுதான் , ஏசி கோச்சில் மட்டும் கூட்டம் ஏறாது, உள்ளே வாங்க” கூட்டத்தில் புகுந்து, முதல் வகுப்பு பெட்டியில்ஏறியவன், “ஹட், ஹட்” என்று ஜன்னல் ஓர இருக்கை ஆளை எழுப்ப, அவன் பயந்து எழுந்தான்.

“ஆப் பைட்டியே சாப்” என்றவன், சூட்கேஸை இருக்கையடியில் தள்ளிவிட்டு
“ நீஙக பேன்ட்ரால எறங்கிடுங்க. ஏர்போர்ட்ல டிராப் பண்ண சர்மா வந்துடுவான்” என்றுக் கத்திக் கொண்டே நகர தொடங்கிய ரயிலில் இருந்து குதித்தான் படேல்.

கண்ணால் எண்ணினான் பாலாஜி. இருக்கைகளில் நெருக்கி அடித்துக் கொண்டு பதினாறு பேர்கள் .தரையில் வரிசையாய் மூன்று பெண் குழந்தைகள். எதிரில் அப்பிள்ளைகளின் தகப்பன் போல, அவன் கையில் மூன்று வயதிருக்கும் ஒரு ஆண் குழந்தை. அப்பனின் சட்டை காலரை சவைத்துக் கொண்டு இருந்தது. நைலான் புடைவையில் முகத்தில் முக்காடு இட்ட மனைவி.

அடுத்து பளபளவென்று சிவப்பு சட்டையணிந்திருந்தவன், ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை, பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தலையை சீவிக் கொண்டு இருந்தான். முகம் , கையில் எல்லாம் முண்டு முண்டாய் இருந்தது, ஏதோ தோல் வியாதிப் போல, தலை ஊறல் எடுக்கிறது, அதற்கு பரபரவென்று சீவிக் கொள்கிறான் போல்! பாலாஜிக்கு குமட்டியது.

ஜன்னல் ஓர இருக்கையில் கண்ணை மூடிக் கொண்டு நாமம் போட்ட சாமியாரும், அவர் காலடியில் சிஷ்ய பையனும்!

சூரத்தில் இருந்து வழக்கமாய் காரில் மும்பை சென்று, சென்னைக்கு விமானம்
பிடிப்பது, கனமழை காரணமாய் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அவசரத்துக்கு கிடைத்த ஆறு மணி நேர முதல்வகுப்பு பயணம்,


சட சட வென்று மேலிருந்து ஏதோ விழ திடுக்கிட்டுப் பார்த்தால் சீட்டு கட்டு சீட்டுகள். மேல் பார்த்தில் வரிசையாய் ஆண்கள் உட்கார்ந்திருந்தனர். பாலம் போல , எதிர் எதிர் பர்த்துக்களில் கால்களை வைத்துக் கொண்டு, காலின் குறுக்காய் பேப்பர் விரித்து, சூடாய் ஆட்டம் நடந்துக் கொண்டு இருந்தது.

இந்தியில் என்ன சொல்வது என்று தெரியாமல் நிமிர்ந்துப் பார்த்து முறைத்தான் பாலாஜி.

“மாப் கீ ஜீயே ” என்றவர்கள் மேற் கொண்டு பேச, சிவப்பு சட்டைக்காரனும் ஏதோ கேட்டான்.

“ஹிந்தி தோடா தோடா மாலும் ” என்றான் கொஞ்சம் தயக்கமாய்.

“நம் தேசிய மொழி தெரியாதா?” என்று அவன் கேட்க , அருகில் இருந்தவர்களும் பேச ஆரம்பித்தார்கள். பாலாஜியின் அருகில் இருந்தவன், “ நீங்கள் மதராசியா ? ” என்றுக் கேட்டான் ஆங்கிலத்தில்.

சுனில் சட்டர்ஜி, அட்வகேட் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பாலாஜி தன் பெயரை சொன்னதும், சிவப்புசட்டைக்காரன், திருப்பதி பகவான் கா நாம்! என்றான் பக்தி பரவசத்துடன்.

ஆள் ஆளுக்கு பெருமாளைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

சி.சட்டை “உங்களுக்கு தெரியுமா? அங்க சாமி தரிசனம் செய்ய பணம் கொடுத்தால்தான் அனுமதிப்பார்கள். சாமியை பார்த்துவிட்டு, மொட்டையும் போட்டுக் கொள்ள வேண்டும்” அவன் அளக்க அளக்க, அப்படியா என்று கூட்டம் வாயை பிளந்தது. அடபாவிகளா, எப்படி எல்லாம் கதைக் கட்டுகிறார்கள், பாலாஜிக்கு அப்படி எல்லாம் இல்லை என்று மறுத்துப் பேச தோன்றியும் பேசவில்லை.


கீழே உட்கார்ந்திருந்த சிறுமி ஒன்று எழுந்திருந்து சுற்று முற்றும் பார்த்துவிட்டு, ஏதோ சொன்னது, தந்தையானவன் சும்மா உட்காரு என்று டப் என்று தலையில் அடித்தான். அவன் மடியில் உட்கார்ந்திருந்த மகன், கையை நீட்டி அக்காளின் தலையில் திரும்ப திரும்ப அடித்துவிட்டு சிரித்தது.

சிறுமி பரிதாபமாய் அம்மாவைப் பார்த்தது. எந்த வித உணர்வும் இல்லாமல்
அம்மா பேசாமல் இருந்தாள். அச்சிறுமி அழ ஆரம்பித்தது. குழந்தை அக்காளின் மண்டையை தட்டுவதை நிறுத்தவில்லை. அப்பன் ரசித்துக் கொண்டு இருந்தான்.

மூத்த சிறுமி சட்டென்று தம்பியின் கையைப் பிடித்து நிறுத்தினாள். தங்கையை எழுப்பி, கழிவறை பக்கமாய் சென்றாள்.

பாலாஜிக்கு சுந்து மாமா பெண் வேணி நினைவு வந்தது. இதோ இந்த பெண்ணைப் போல, ஆறேழு வயசிலும் அப்படி ஒரு பொறுப்பு, முழு பரிட்சை லீவுக்கு ஊருக்குப் போனால் அப்படி ஒரு கரிசனமாய் பார்த்துக் கொள்வாள். ஈரோட்டில் கட்டிக் கொடுத்துள்ளதாய் அம்மா சொன்னாள், எவ்வளவோ வருஷம் ஆச்சு! அவள் தம்பி பாலா சென்னை போர்ட் டிரஸ்ட்டில்தானே இருக்கிறான். போன் நம்பர் கேட்டு பேச வேண்டும்.

அடுத்த ஸ்டேஷனில் அந்த் குடும்பம் இறங்கியது. இன்னும் நான்கைந்து பேர்கள் உள்ளே நுழைந்தனர். தாகம் வாட்டியது. தன்ணீர் குடித்தால் பாத்ரூம் போக வேண்டி இருக்கும், அது என்ன அழகில் இருக்கிறதோ?

காலில் ஏதோ குறுகுறுக்க பார்த்தால் மூன்று நாலு வயது இருக்கும் சின்ன பையன். . ஒரு அழுக்கு துணியாய் தரையை பெருக்கிக் கொண்டு இருந்தது. கொஞ்சம் பூனை கண்கள், நல்ல நிறம்,கொழு கொழு கன்னம், இன்னும் பால் மணம் மாறாத முகம்.

இத்துண்டு குழந்தை. மனம் நெகிழ்ந்து, பத்து ரூபாயை தாளை நீட்டினான். ஜன்னல் ஓர இருக்கை என்பதால் அக்குழந்தை குனிந்து பெருக்கும்பொழுது, அதன் கை அவனின் முன்பக்கம் பட காலை நகர்த்தினான். சில நொடிகளில் மீண்டும் பட, அதே நேரம் பாலாஜியின் கண்கள் அக்குழந்தையை நோக்க வாயை குவித்து சைகை செய்தது.

பதட்டத்துடன் பாலாஜி உடம்பை நகர்த்த முயல, சிவப்பு சட்டைக்காரனின் கைகள் கொத்தாய் அக்குழந்தையின் முடியை பிடித்தது. டபடபவென்று அடிக்க, என்ன என்ன என்ற விசாரிப்புகளும், சி.சட்டைக்காரனின் விளக்கங்களும் தொடர தர்ம அடி என்று பின்னி எடுத்தார்கள்.

வேண்டாம் வேண்டாம் என்று கத்தினான் பாலாஜி. பக்கத்து சீட் அட்வக்கேட் சுனில் எல்லாரையும் விலக்கி அக்குழந்தையை போக சொன்னான். முகம் வீங்கி, உதட்டில் ரத்தம் கசிய அக்குழந்தை, அடுத்த ஸ்டேஷன் வர, ஏறக்குறைய பிளாட்பாரத்தில் வீசப்பட்டது.

அக்குழந்தை சட்டையை தட்டிக் கொண்டு எழுந்து பாலாஜியைப் பார்த்தது, அந்த வெற்றுப் பார்வை கூரான கத்தி அடிவயிற்றில் இறங்குவதைப் போல இருந்தது. கடவுளே என்று கண்களை மூடிக் கொண்டான் பாலாஜி.

.
“இதுங்க எல்லாம் ஒரு கூட்டம், கொஞ்சம் சபலப்பட்டு போனீங்கன்னா அவ்வளவுதான். ஒதுக்குப்புறமாய் கத்தியோட கூட்டமா இருப்பாங்க, எல்லாத்தையும் புடுங்கிட்டுதான் விடுவாங்க” மேலிருந்து ஒரு குரல்.

“ இந்த அடி எல்லாம் அதுங்களுக்கு பழக்கம். இன்னும் நல்லா நாலு போட்டு இருக்கணும். இந்த வயசுல..” ஒரு கெட்ட வார்த்தை வாயில் இருந்து உதிர்ந்தது

“பசிக் கொடுமை, உங்களுக்கு புரியாது “ சுனில் சொன்னதும்

”. துர்காஷ்டமிக்கு பத்து நாட்கள் உபவாசம் இருப்பேன். ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதம் தான். பசின்னா எனக்கும் தெரியும்.” சி.சட்டை சொல்ல கூட்டம் ஆமோதித்தது.

சுனில், “ உபவாசம் முடிந்ததும், உணவு உங்களுக்கு தயாராய் இருக்கும்.ஆனால் அடுத்த் வேளை சோறு நிச்சயம் இல்லாதப் பொழுது, ஒரு துண்டு ரொட்டிக்காக, கொலைக்கூட நடந்திருக்கு தெரியுமா?

பாலாஜி கண்களை மூடிக் கொண்டான். திரும்ப திரும்ப அந்த குழந்தையின் முகம். ஏதாவது செய்யணும். டோஸ்ட் மாஸ்டர்ஸ் கிளப்பில் பார்த்த சுரேந்தர் நினைவுக்கு வந்தான். அவனும் அவன் மனைவியும் சேர்ந்து பாலவாக்கம் பக்கம் அனாதை குழந்தைகளுக்கு ஸ்கூல், ஹாஸ்டல் நடத்துவதாக சொன்னாரே, மாச சம்பளத்துல ரெண்டு பர்சண்ட் தந்தா என்ன? நித்யா ஒத்துக்குவாளா? ஏதாவது செய்யணும்

அந்தேரி !அடுத்தது பான்ட்ரா ஸ்டேஷன். யாரோ சொல்வது காதில் விழுந்ததும் கண்களை திறந்தான். கூட்டம் குறைந்திருந்தது.

”இப்படியும் ஒரு உலகம் இருக்கு என்று உனக்கு ஆச்சரியமாய் இருக்கு இல்லையா?” எதையும் கண்டுக்காமல் இருந்த சாமியாய் அழகாய் ஆங்கிலத்தில் கேட்டார்.

“கடவுள் மேலே நம்பிக்கையே போயிடுச்சு. அந்த குழந்தை என்ன பாவம் பண்ணியது?” பாலாஜியின் குரல் நடுங்கியது.

சாமியார் தலையை தலையை ஆட்டிக் கொண்டிருந்தார். சில நொடிகளுக்கு பிறகு, ”நாங்கள் நாசிக் போக வேண்டும். உன்னால் உதவ முடியுமா?” கேட்டதும், கையில் கிடைத்த தாள்களை அவரிடம் நீட்டினான் பாலாஜி.

“பகவத் கீதை படி. உன் எல்லா கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் அதில் பதில் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொண்டார்.

பிளாட்பாரத்தில் இறங்கியதும், டிரைவர் வேகமாய் வந்து பெட்டியை எடுத்துக் கொண்டான்.

அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த சிஷ்ய பிள்ளை, “பகூத் அச்சா மகராஜ்! பதில் சொல்ல தெரியவில்லை என்றால் கீதை படின்னு சொல்லிட்டு கண்ணை மூடிக் கொள்வது” கிளுகிளுவென்று சிரித்தது.

அவன் முதுகில் செல்லமாய் தட்டி, “ சுப்.., பத்மாஷ்! ஏக் சில்லம் தய்யார் கரோ செண்ட்ரல் போவதற்குள் ஒரு இழுப்பு இழுக்கணும்” என்றார் பாபா.

செல் அடித்தது. நித்யா! “அஸ்வின் புனா கிரிகெட் ட்ரோணமெண்டுக்கு செலக்ட் ஆயிருக்கான். கோச் இனி, நல்ல ப்யூச்சர் இருக்குன்னு சொன்னார்.

“வாவ்! கிரேட் நீயூஸ் அஸ்வின் எங்கே? ” உற்சாகமாய் விவரம் கேட்க ஆரம்பித்தான்.

“கொஞ்சம் இருங்க, கோச் கூட பேசிக்கிட்டு இருக்கான். அப்புறம் இன்னொரு விஷயம், அஸ்வின் பிரண்ட்ஸ் பார்ட்டி வேணும்னு கேக்கராங்களாம். பாவம் குழந்தையும் ரொம்ப ஆசைப்படுகிறான்” நித்யா சொன்னதும்,

“ என்ன நித்தி, நம்ம குழந்தைக்கு செலவு பண்ணாம, எதுக்கு சம்பாதிக்கிறது? இன்னைக்கு நைட்டே ஒரு கிராண்ட் பார்ட்டி அரேஜ் பண்ணிடு. ஹோட்டல் எதுன்னு அஸ்வின் சாய்ஸ்க்கு விட்டுடு. செலவு பத்தி யோசிக்காதே! என்னோட ஐசிஐசிஐ டெபிட் கார்ட்டை யூஸ் பண்ணிக்கோ, நான் ஆறு மணிக்கு சென்னை ஏர்போர்ட்டில் இருப்பேன்.” என்று உற்சாகமாய் சொல்லிக் கொண்டு இருந்தவன், முகம் மாறியது. மூணு நாலு வயது இருக்கும் பெண் குழந்தை, இடுப்பில் மூக்கொழுக்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு சின்ன கையை பாலாஜியைப் பார்த்து நீட்டியது.

*****************************

வம்சி சிறுகதைப் போட்டி- 2011 க்கு எழுதியது.



.

Labels:

Wednesday, March 02, 2011

இமை மூட மறுக்கும் இரவுகள்

”இரவு” என்ற தலைப்பில் மதுமிதா அவர்கள் பல எழுத்தாளர்களின் படைப்புகளை தொகுத்துள்ளார்.இரவு - இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும்' சந்தியா பதிப்பக வெளியீடாக ஜனவரி 2011, புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

1. லதா ராமகிருஷ்ணன்
2. அ.முத்துலிங்கம்
3. அசோகமித்திரன்
4. ந. தேவி
5. குறிஞ்சிச் செல்வர் கொ.மா. கோதண்டம்
6. நாகூர் ரூமி
7. ச. விஜயலட்சுமி
8. வைதீஸ்வரன்
9. க. மோகனரங்கன்
10. தி. சுபாஷினி
11. கலாப்ரியா
12. எம். ரிஷான் ஷெரீப்
13. உமா ஷக்தி
14. ராஜ்ஜா
15. இந்திரா பார்த்தசாரதி
16. சக்தி ஜோதி
17. பாவண்ணன்
18. நரசய்யா
19. இளம்பிறை
20. சித்தன் ப்ரசாத்
21. எஸ். ஷங்கர நாராயணன்
22. தமிழ்நதி
23. நாஞ்சில் நாடன்
24. இரா. முருகன்
25. அரங்கமல்லிகா
26. தமிழ்மகன்
27. பூ.அ. ரவீந்திரன்
28. ஜெயந்தி சங்கர்
29. ஆல்பர்ட்
30. சேவியர்
31. ராமச்சந்திரன் உஷா
32. நாகரத்தினம் கிருஷ்ணா
33. ச. தமிழ்ச்செல்வன்
34. கவின் மலர்
35. பாஸ்கர் சக்தி
36. அண்ணாமலை
37. மதுமிதா

அதில் நான் எழுதியது.

இமை மூட மறுக்கும் இரவுகள்

இரவு நேரங்களில் ஜன்னல் ஓர இருக்கையில் எதிர்காற்று முகத்தில் சிலுசிலுக்க பேரூந்து பயணங்கள், அந்த இருளில் தூரத்தில் தெரியும் சிறு மின்விளக்குகள், எந்த செயற்கை வெளிச்சமும் படாத பாலைவன கரிய இருளில் ஆகாயத்தில் ஒளிவிட்ட கோடிக்கணக்கான நட்சத்திர கூட்டங்கள், தெருவிளக்கில்லாத மலைப்பாதையில் முழு நிலவொளியில் அனைத்தும் கருப்பு வெள்ளையாய் கண்ட காட்சிகள், தூக்கம் வரும்வரை காதருகில் ஒலிக்கும் இளையராஜாவின் ஆரம்பக்கால பாடல்கள், அமைதியான இரவில் மனத்துக்கு பிடித்தவர்களுடன் மெல்லிய குரலில் இனிய பேச்சுக்கள், பனி விழும் இரவுகளில் யாருமற்ற தெருக்களில் ஒரு சிறு நடை, நிலா வெளிச்சத்தில் அலை கடல் என்று இரவின் அழகையும், அமைதியையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

சிற்றின்ப போதையில் இன்பம் களிக்கும் போகிக்கும், உடல் உபாதையில்
அவதிப்படும் ரோகிக்கும், தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என எண்ணும் யோகிக்கு இரா தூக்கம் கிடையாது என்பார்கள் ஆனால் சாதாரணர்களின் வாழ்க்கையிலும் தூக்கம் வராத இரவுகள் சகஜம்.

உறவுகளில் சலசலப்பு, பொருளாதார நெருக்கடி, குழந்தைகளின் நோய்,
நட்பு உறவுகளுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட தீடீர் சோகங்கள் , மனதைப் பாதித்த திரைப்படம் , செய்திதாளில் வாசித்த கொடூர சம்பவங்கள் என இராதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் நிறைய இருக்கின்றன.

தலைக்கு மேல் பிரச்சனை வந்தால் நாத்திகனும் கடவுளை தேடுவான் என்றாராம் கவிஞர் கண்ண தாசன். கடவுள் என்ற கருத்தாக்கத்திலேயே நம்பிக்கை இல்லாவிட்டாலும், கடவுள் என்ற சொல் பிரச்சனைகள் தலைக்கு மேல் போகும் போது நினைவுக்கு வரத்தான் செய்யும். ஆனால் என்ன வேண்டுவது, யாரை வேண்டுவது என்று மனம் கேள்விகள் கேட்க ஆரம்பிக்கும்.

அப்படி கடவுளை நம்பி வேண்டுதல், பிராத்தனை செய்பவர்களுக்கு நினைத்தது நடந்து விடுகிறதா என்ன என்று குதர்க்கமாய் தோன்றும்.

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளின் தாக்கத்தில் எதுவும் புரியாமல் அடுத்து என்ன நடக்கும் என்ற பயத்தில் கழித்த இரவுகளில் தான் வாழ்க்கையின் நிலையாமை, அபத்தங்கள் புரிய தொடங்கும். மனம் உள் நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும்

ஆனால் இன்றுவரை மறக்க முடியாத இரவு ஒன்று உண்டு. குழந்தையின்
உயிருக்கே ஆபத்தான நோய் என்றுச் சொல்லப்பட்ட அந்த நாள். தூங்க வேண்டும் என்ற நினைவே இல்லாமல், அழவும் திரணியற்று அப்படியே அமர்ந்திருந்தேன்.
நல்ல வேலையை விட்டு விட்டு, பொருளாதார மேம்பாடுக்காக வெளி நாட்டு
வேலைக்கு கணவர் சென்று ஒரு மாதம்தான் இருக்கும்.

பக்கத்தில் என் குழந்தை ஆழ்ந்த தூக்கத்தில் ! சிகிச்சையின் வீரியத்தை மூன்று வயது குழந்தை எப்படி தாங்கும்? நோயில் இருந்து மீள எந்த கடவுளுக்கு எப்படி பிராத்திப்பது ? மகன் ஹூமாயூன் உயிர் காக்க, பாபர் தன் உயிரை தருவதாய்
பிராத்தித்தாராம். என் கடமைகள் பாக்கி இருக்கிறதே , என் உயிரை விட
முடியாது. அதற்கு பதில் எனக்கு விருப்பமான ஒன்றை விடுகிறேன், குழந்தை
பிழைத்து வர வேண்டும். நாலா பக்கங்களிலும் கன்னா பின்னாவென்று
எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருந்தன.

அன்று காலையில் பார்த்த நோயின் தாக்கத்தில் சோர்ந்திருந்த எல்லா குழந்தைகளின் முகங்களும் வரிசையாய் நினைவுக்கு வந்தது. எப்படி என் குழந்தை மட்டும் பிழைக்க வேண்டும் என்று வேண்டுவேன். பால் கன்னம் மாறாமல், கையில் கழுத்திலும் பலவித வேண்டுதல் கயிறுகள் கட்டப்பட்ட அந்த தெலுங்கு குழந்தை என் மகன் போலவே இருந்தான். கண்ணீர் ததும்பிய அத்தாயின் முகம் நினைவு வந்தது. அந்த குழந்தையும் நோயில் இருந்து மீள வேண்டும். இல்லை இல்லை காலையில் பார்த்த எல்லா குழந்தைகளும் பிழைத்தெழ வேண்டும். இப்படி வேண்டுவது எல்லாம் அந்த துக்க நேரத்திலும் அபத்தமாய் தோன்றியது.

கேள்விகள் தந்த குழப்பங்களில் அந்த ராஜகுமாரன் நினைவுக்கு வந்தான்.

நோய், துர்மரணம், வறுமை , முதுமை இவற்றை எல்லாம் பார்த்து வாழ்வில்
நிலையாமை புரிந்து தன் சுக வாழ்வை துறந்தானே, அவன் சொன்னதுதான். ஏற்றுக் கொள் வாழ்க்கை என்றால் இன்பமும், துன்பமும் சேர்ந்ததுதான் !

அவனின் அமைதியான முகம் மனக்கண்ணில் தோன்றியது. மனம் மெல்ல மெல்ல அமைதியடைந்தது. யதார்த்தத்தை மனம் ஏற்றுக் கொண்டது. ஒரு வார விடுமுறையில் குழந்தையைப் பார்க்க சென்னைக்கு வருகிறேன் என்ற கணவரை குழந்தை இன்னும் ஏங்கி போய் விடுவான் வர வேண்டாம் என்று சொல்லி விட்டேன் .

மருத்துவரோ எனக்கு இருக்கும் அனுபவத்தில் நோய் வாய் பட்ட குழந்தைகள் சோர்ந்து போகும் உன் மகனோ சுறுசுறுப்பாய் இருக்கிறான், நன்றாக சாப்பிடுகிறான் அவனுக்கு ஒன்றும் இருக்காது என்று தைரியம் கொடுத்தார்.

அடுத்து எடுக்கப்பட்ட சோதனைகளில் என் மகனுக்கு பயப்படும்படி எந்த நோயும் இல்லை என்று தெரிய வந்தது. ஆனால் கண்காணிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு செல்லும்பொழுது, அந்த தெரு வந்ததும் குழந்தை அழ ஆரம்பித்து விடுவான் மூன்று மாதங்களுக்கு பின்பு சென்றப்பொழுது அந்த தெலுங்கு குழந்தை இறந்துப் போனது தெரியவந்தது.
வாழ்க்கையில் சில ஏன் எதற்கு என்ற சில கேள்விகளுக்கு விடையே இல்லை.
கண்ணதாசன் சொன்ன அந்த வரிகள் என்வகையில் பொய்த்துப் போயின. அவ்விரவில் இருந்து மெல்ல மெல்ல முழு நாத்திகவாதியாய் மாறத் தொடங்கினேன்.


---------------------------------------------
ராமசந்திரன் உஷா
சென்னை

Labels:

Friday, February 25, 2011

"இனி" என்னும் அழகி


ஒரு மாலை இள வெய்யில் நேரம். வாசல் மணி மண்டையை உடைக்கும் அளவிற்கு ஒலிக்க, கதவை திறந்தால் என் சீமந்த புத்திரி கையில் ஒரு அட்டை பெட்டியுடன் நின்றிருந்தாள். கீங் கீங் என்று சத்தம் உள்ளே குட்டியூண்டு நாய் குட்டிகள் மூன்று இருந்தன. ஐயோ என்ன அழகு என்று ஆவலுடன் பார்க்க, உள்ளிருக்கும் தாய் விழித்துக் கொண்டு, “என்னடி இது?” என்றுக் கோபமாய் கேட்டே(ன்) ள்.

"பாவம்மா, மொத்தம் ஆறு குட்டிகள். ரெண்டு கார்ல அடிப்பட்டு செத்துடுச்சு. ஒன்னை நேத்து ஒருத்தர் அடாப்ட் பண்ணிட்டாரு. நீ பயப்படாதே! ப்ளூ கிராஸ்ல சொல்லியிருக்கேன். இன்னும் என்னோட பிரண்ட்ஸ் எல்லார் கிட்டையும் சொல்லியிருக்கேன். அது வரை இதுங்க இங்க இருக்காட்டும்” என்றுச் சொல்லிக் கொண்டே, பால்கனி பக்கம் போனாள்.

மூன்றும் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டும், பிறகு அழகாய் கட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்தன. அழகு எல்லாம் கொஞ்ச நேரம் தான். மூன்றும் கழிவுகளால் பால்கனியை நாற அடித்துக் கொண்டு இருந்தன. வீடு முழுக்க அங்கங்கு நனைத்து வைக்க, என்னால் சமாளிக்கவே முடியவில்லை.

அதற்குள் அடுக்குமாடி குடியிருப்பில் பிராணிகளை வளர்க்க கூடாது என்று சொல்லப்பட, மூன்றும் பழையப்படி தெருவில், அதன் தாயிடம் விடப்பட்டன். ஆனால் ஓரே வாரத்தில் இரண்டு ஆண் குட்டிகள சுவீகாரம் போய்விட, பாவப்பட்ட பெண் ஜென்மம் அனாதையாய் தவிக்கிறேன் என்றுச் சொல்லிக் கொண்டு ”இனி” எங்கள் வீட்டில் நுழைந்தது.

நாளொருமேனியும் பொழுதுதொரு வண்ணமுமாய் எங்கள் செல்லக்குட்டியாய் ஆனது. மாதாமாதம் தடுப்பூசி என்ன, வகை வகையாய் விளையாட்டு சாமான், பால், செரிலாக்ஸ் என்று ஓரே அமர்களம்.

இதன் லூட்டி மீண்டும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தில் விவாதிக்கப்பட்டு, எங்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டது.

தனி வீடு கட்டிக் கொண்டு இருப்பதால் "இனி" யை அங்குக் கொண்டுப் போய் விட்டு விட்டோம். மே மாதத்திற்குள் வீடு தயாராகிவிடும், அதுவும அங்கு சமர்த்தாய் இருக்கிறது. அங்கு வேலை செய்யும் பதினெட்டு இருபது வயதில் இரண்டு பையன்கள் அதை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். வாரா வாரம் சனி, ஞாயிறு இங்கு வந்து விடுகிறது. நானும் அவ்வப் பொழுது அங்குப் போவதால் ஒரு பிரச்சனையும் இல்லை.

"இனி" என்று குரல் கொடுத்தால் போதும். அப்படியே தாவி வந்து நக்கி, கடித்து மேலே விழுந்து ஓரே புரளல்தான். என்னமோ அதன் மொழியில் கீ கூ என்று எனனை விட்டு விட்டு போய் போய் விட்டாய் இல்லையா என்றும் புலம்பல்.

பயங்கர வால், தெருவில் பெரிய பெரிய நாய் போனாலும் எலி மாதிரி இருந்துக் கொண்டு அவைகளைப் பார்த்து குலைக்க வேண்டியது. அவைகளை துரத்த வேண்டியது என்று ஓரே லூட்டி.

இப்பொழுது எல்லாம் வெள்ளி மாலை எப்பொழுது வரும் என்று நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம் :-)

Labels:

Friday, January 21, 2011

முழு நேர எழுத்தாளினி ஆகிறாள் ஏகாம்பரி

ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த ஏகாம்பரியை சிறிது யோசனையுடன் நோக்கினார் அவள் கணவன்.

’’நானும் ரெண்டு நாளாய் பார்க்கிறேன், ஓரே யோசனையாய் இருக்கே? என்ன விஷயம்? ஏதாவது புதுசா எழுதப் போகிறாயா? ‘ என்றுக் கேட்டதும் நீண்ட பெருமூச்சு விட்டு விட்டு “ஆமாங்க, ஆனா.. பிரச்சனை அது இல்லைங்க. நா முழு நேர எழுத்தாளர் ஆகலாம்னு இருக்கேன்’’ என்றாள்.

அவள் சொல்வது புரியாமல், “ என்ன சொல்றே? நீ என்ன வேலைக்கா போறே? வீட்டூல தானே இருக்கே?” குழப்பமாய் கேட்டார்

’’அதுதாங்க, வீட்டுல இருக்கிறதால, வீட்டு வேலை சமையல் கடைக்குப் போவது, பிள்ளைங்க பாடம்ன்னு நிறைய டைம் வேஸ்ட் ஆகுது. அதனால...

“அதனால....” கொஞ்சம் வேகமாய் கேட்டார் மிஸ்டர் ஏகாம்பரி.

மீண்டும் நீண்ட பெருமூச்சு. கொஞ்சம் பீடிகையுடன் ஆரம்பித்தாள் ஏகாம்பரி,

“எழுதுவது என்பது விளையாட்டான விஷயம் அல்ல. அது ஒரு தவம். இந்த வேலைகள் எல்லாம் என் சிந்தனைகளை குறுக்கிடுகின்றன. பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் எப்படி எழுதி புகழ் பெறுகிறாங்க தெரியுமா? இருபத்திநாலு மணி நேரமும் ஆன்மாவையும் உடலையும் வருத்தி எழுத்திலேயே கவனம் செலுத்துவதாலத்தான் உலகமே அவங்களைப்
பாக்குது’’ என்றாள்

‘’ சரி, அதுக்கு என்ன? காலைல நாங்க எல்லாரும் கிளம்பிட்டா திரும்ப வர சாயந்தரம் ஆயிடுது. இனிமேலே நா வரும்பொழுது காயி, சாமான் எல்லாம் வாங்கிக்கிட்டு வந்துடரேன். பசங்களையும் அவுங்க அவுங்க வேலையை செய்ய டிரெயின் செய்யலாம்” என்றார்
கணவன்.

ஏகாம்பரி பதில் சொல்லவில்லை.

கொஞ்சம் கலவரத்துடன் அவளைப் பார்த்தார்.

“கிடைச்ச பொழுதுல எழுதுவது எப்படி தவமாகும்? இனி மேலே வீடு, குடும்பம் எல்லாம் நீங்க பார்த்துக்குங்க. முழு மூச்சாய் எழுத்துல கவனம் செலுத்தி ஒரு சாகித்ய அகாதமியாவது வாங்குவது என் லட்சியம் என்றாள் தீர்மானமாய்.

‘என்ன விளையாடுறீயா? ஆபீஸ் வேலை எல்லாம் யார் பார்க்கிறது? என்றார் கடுப்புடன்.

இதோ பாருங்க. பல எழுத்தே தவமாய் இருக்கும் பிரபல எழுத்தாளர்களோட மனைவிகள் வேலைக்கும் போறாங்க, வீட்டு வேலையும் செய்யிராங்க, குழந்தை குடும்பத்தையும் க்வனிக்கிறாங்க. எழுத்தில் சாதிக்கும் ஆண் எழுத்தாளர்களை அவர்கள் மனைவிகள் எந்த பொறுப்பும் தராமல் பூவை போல உள்ளங்கையில் வைத்து தாஙகுவதால, சாதனை புரிவது அவர்களுக்கு சுலபமாய் இருக்கு. பெண்கள் செய்யும்பொழுது, ஒரு பெண் எழுத்தாளர் வாழ்வில் சாதிக்க, கணவர் நீங்க ஏன் இந்த தியாகங்களை செய்யக்கூடாது?

ஏகாம்பரியின் ஆணி தரமான பேச்சைக் கேட்டு திகைத்துப் போன கணவர் என்ன சொல்வது ஏது சொல்வது என்று அறியாமல் உலக நாயகனைப் போல வாயை திறந்து திறந்து மூடினார்.

“நா முடிவா சொல்லிட்டேன். எங்கம்மா அடுத்த வாரம் கண் ஆபரேஷனுக்கு வராங்க. நீங்க லீவ் போட்டுட்டு அவங்களை கவனிச்சிக்கோங்க. எழுந்திருங்க காலை சமையலுக்கு இப்பவே காய் நறுக்கி வெச்சிட்டா ஈசியா இருக்கும்... வாஷிங் மெஷின்ல ராத்திரியே துணிப் போட்டு வெச்சிட்டா, காலைல மெஷின ஆன் பண்ணிடலாம் ஏகாம்பரி சொல்லிக் கொண்டே போக,

‘’ இதோ பாரு, இதெல்லாம் ஓவரு..’’ குரல் கம்ம அவர் ஆரம்பிக்க, “ எந்த ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண்ணின் தியாகம் இருக்கும். நான் வெற்றி பெற நீங்க பின்னால் இருக்கக்கூடாதா?” என்று பக்கத்தில் உறங்கிக் கொண்டு இருந்த கணவரைப் பிடித்து உலுக்க, நல்ல உறக்கத்தில் இருந்த கணவர் அலறி அடித்துக் கொண்டு எழுந்தவர் தன்னை சமாளித்துக் கொண்டு, ஏகாம்பரி ஏகாம்பரி என்று உலுக்கப்பட்ட ஏகாம்பரி கண் விழித்தாள்.

என்ன ஏதாவது கனவா? உளறிக்கிட்டு இருந்தே? கையில புக்கை வெச்சிக்கிட்டே தூங்கிட்டே “ என்ற கணவனிடம், ‘’ஆமாங்க, அவள் விகடன் படிச்சிக்கிட்டு இருந்தேனா அப்படியே கண் அசந்துடுச்சு. என்னமோ கனா கூட வந்துச்சு “

நல்ல கனவா கெட்ட கனவா என்றுக் கேட்ட கணவனைப் பார்த்து "தெரியலேயே” என்றாள் நாயகன் கமலைப் போல!

***********************************************************************************

டிஸ்கி: கதையும் அதில் வரும் பாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனை

Labels:

Sunday, January 16, 2011

புத்தக கண்காட்சி 2011ல் நான்

அல்வா கடையைப் பார்த்த சிறுமி போல, நாக்கு ஊற எனக்கு நானே ஆயிரெத்தெட்டு கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாலும், வெகு விரைவில் அவை எல்லாம் நீர்த்து விடும் என்பது சரித்திர உண்மை :-)

மதுமிதா தொகுத்த இரவு என்ற எழுத்தாளர்களின் இரவு குறித்த அனுபவம், கதை, கவிதை தொகுப்பை சந்தியா பதிப்பகம் ஸ்டாலில் கலெக்டர் சகாயம் வெளியிட்டார். பல பிரபலங்களும் என்னை போன்ற அபிரபலமும் எழுதியிருக்கிறோம். அருமையான வாசிப்பு அனுபவத்துக்கு நான் காரண்டி. வாங்குங்கள் :-)

அடுத்து சிங்கப்பூர் ஜெயந்தி சங்கர் எழுதிய தூரத்தே தெரியும் வான் விளிம்பு நிர்மலா வெளியிட, நான் பெற்றுக் கொண்டேன்.

முதலில் கிழக்கு பக்கம் போனோம். வாசலிலேயே பாரா, பிரசன்னாவும் உட்கார்ந்திருந்தானர். யாரோ கிழக்கில் எழுத்தாளர்களுக்கு முப்பது சதவீத தள்ளுப்படி என்றுக் கொளுத்திப் போட அப்படியா என்றால் பிரசன்னா அது கிழக்கு எழுத்தாளர்களுக்கு என்றான். அடுத்த தடவை கிழக்கில் எழுதியவர்களை பிடித்து அவங்க மூலம் நாலு புத்தகம் வாங்கணும் என்று
நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

பொதுவாய் புத்தகம் வாங்க நான் வைத்திருக்கும் அளவுக்கோல், உண்மையான
வாசகர்கள் கொடுக்கும் மதிப்புரைத்தான். வாங்கிவிட்டு காசுக்கு தண்டம் என்று
புலம்பியது மிக குறைவு. கிழக்கில் பார்த்த உலோகம் விமர்சனம் இன்னும்
வாசிக்கததால் அதை வாங்கவில்லை. நிர்மலா அதுவும் ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு வாங்கினார். முதல் பாகம் நான் சென்ற வருடம் வாங்கிவிட்டேன். இவை இரண்டையும் நிர்மலாவிடமிருந்து இரவல் வாங்கிப் படிக்க வேண்டும்.அங்கு மருந்து மட்டும் வாங்கினேன்.

தமிழினி பதிப்பகத்தில் நாஞ்சில்நாடனும், இராஜேந்திர சோழனும் இருந்தார்கள். அவர்கள் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு, வழியில் ஞாநியைப் பார்த்தோம். ஞாயிறு கேணி கூட்டம் நினைவுப்படுத்தினார். என்னால்தான் போக இயலவில்லை.

இந்த வருட எங்கள் மொத்த ப்ர்சேஸ் பட்டியல்.

மருந்து- புனத்தில் குஞ்ஞப்துல்லா
வெள்ளெருக்கு- கண்மணி குணசேகரன்
வெட்டு புலி- தமிழ் மகன்
மிதவை- நாஞ்சில் நாடன்
தலைகீழ் விகிதங்கள்
என்பிதலனையும் வெய்யில் காயும்
சதுரங்க குதிரைகள்
ஆழிசூழ் உலகு-ஜோ.டி.குரூஸ்
சென்னையின் கதை- கிளீன் பார்லோ
சுபாங்கம்- மதுமிதா
எக்ளிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்- சாரு நிவேதிதா
இராசேந்திரசோழனின் குறுநாவல் தொகுப்பு
இதைத் தவிர வெளியிட்டு காப்பி இலவசமாய் கிடைத்தது ஜெயந்தி சங்கரின்
தூரத்தே தெரியும் வான் விளிம்பு இத்துடன் என் பர்சேஸ் ஓவர்.

ஸ்டால் ஸ்டாலாய் பார்க்கவில்லை. மனதுக்குள் ஒரு லிஸ்ட் .அடுத்த வருடம் ஒவ்வொரு ஸ்டாலாய் நுழைந்து, நன்கு பார்த்து ஒன்றொன்றாய் ஆராய்ந்து வாங்க வேண்டும்.

மறுநாள் பிள்ளைகளுடன்!
Brahmin& Non – Brahmin by M.S.S.Pandian
Motururcycle diaries இவை இரண்டும் என்னுடைய சாய்ஸ்
Serious Men- Manu Joseph
The best of Franz Kafka – selected short stories
Bhagrt singh –The jail notebook and other writing
Bhagat singh on the path of liberation
Makers of modern India –Ramachandran guha
Theatre of the street
இதைத் தவிர ஒரு மெடிக்கல் டிக்னரி.

நல்ல நல்ல புத்தகங்கள் வாங்க வீட்டில்
எல்லோருக்கும் விருப்பம் உண்டு. ஆனால் அதை பத்திரப்படுத்துவது தான் ஒரு இல்லத்தரசியின் தலைவலி.

Labels:

Wednesday, December 15, 2010

தமிழிசை பாடல்கள், & பெங்களூர் சுப்பு லஷ்மி

ஒளரங்கசீப் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட இசை பிரியையான என் அம்மாவுக்கு இருந்து இருந்து அறுபது சொச்ச வயதில் பாட்டு கற்றுக் கொள்ள முடிவெடுத்து வீட்டுபக்கத்தில் இருந்த பெங்களூர் சுப்புலஷ்மி என்ற பாடகியிடம் பாட்டு கற்றுக் கொள்ள சேர்ந்தார். சுமார் ஒருவருடங்கள்தான் கற்றுக் கொள்ள முடிந்தது.

அப்பொழுது அந்த அம்மாளுக்கு வயது எழுபதுக்கு மேல். எம்.எஸ் சுப்புலஷ்மி
அவர்களின் செட். கொஞ்சம் ஆண்மை கலந்த கணீர் என்று அபூர்வமான குரல். தொழில் ரீதியான போட்டி அரசியல், தன்னை சென்னையில் வளர விடவில்லை என்றுச் சொல்லி வருத்தப்பட்டார்.

பாபநாசம் சிவம் அவர்களின் கந்தா வா வா, கா வா வா என்ற பிரபல பாடல் அவர் பாட கேட்டு, அதே ஒள. பரம்பரையில் உதித்த நானே மெய் மறந்துப் போனேன்.

என் அம்மாவுக்கு இனிமையான குரல் வளம். முன்பு எல்லாம் நவராத்திரி வந்தால் பாட சொன்னால் கூச்சபடாமல் பாடிவிட்டு வருவது வழக்கம்.

பாட்டுகிளாசில் குஞ்சுகுளுவனுங்களுடன் வகுப்பு ஆரம்பித்தது. அம்மாவின் ஆர்வத்தைப் பார்த்து சரளி வரிசை எல்லாம் வேண்டாம், நேராய் பாட்டாய் கற்று தருகிறேன் என்று சொல்லி நூறுபாடல்கள் வரை கற்று தந்திருக்கிறார். அம்மா அவைகளை நாட்குறிப்பில் பாடல்கள் எழுதியது யார், ராகம், தேதி என்று வரிசையாய் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

நேற்று இசைவிழா பற்றி பேச்சு எழுந்ததும், இன்னும் தமிழ் பாடல்கள் அதிகம் பாடப்படுவதில்லை என்றுச் சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது பெங்களூர் சுப்புலஷ்மி அம்மாள் பற்றி பேச்சு திரும்பியது.

அம்மா, அவ்ரிடம் கற்றுக் கொண்ட மிக அபூர்வமான தமிழ்பாடல்கள் இருபது இருபத்திஐந்து இருக்கும். எழுதி வைத்திருந்த டைரியும் , டேப் செய்து வைத்திருந்த பாடல்களையும் தேடி தருகிறேன் என்றுச் சொல்லியிருக்கிறார்.

சிலபாடல் வரிகள் நினைவிருந்த வரையில்- அம்மா சொல்லக் கேட்டு,

திருட்டு குலத்தினிலே, வேலேந்தும் தெய்வத்தை
கண்டெடுத்தேன், அவன் உருட்டல் மிரட்டெல்லாம்
நமக்கோர் உண்மை விளக்குதம்மா (திருட்டு)

ஜாதி பேதம் அறியா ஷண்முகன்
ஜாதிக்கெல்லாம் தலைவன்
கொள்ளை அடிக்கும் தொழில்
உள்ளத்தைக் கொள்ளை அடிக்கும் தொழில் (திருட்டு)

முழுக்க கிடைத்ததும் அனைத்தையும் இங்கு வலையேற்றுகிறேன்.

முருகன், கண்ணன், சிவன், அம்மன், பெருமாள் என்று அனைத்து கடவுள்கள் மேலும் தமிழ் பாடல்கள்.

இன்னும் ஒரு பாட்டு முழுக்க முழுக்க பழனி முருகனுக்கு கும்மி பாட்டில் அபிஷேக ஆராதனை.

இன்னும் ஒரு பாட்டில்,

வேலெடுத்து ஏன் நடந்தாய்? வடிவேலவா என்ற பாட்டில் குழலை மாற்றி திரு கோடு கண்டாய் நாட்டில் என்று ஒரு வரி. பழனியில் குழலை- முடியை எடுத்துவிட்டு,
திரு கோடு- என்றால் கோடு- மலை (திரு செங்கோடு)

கபாலீஸ்வரர் மேல் ஒரு பாடல். அதில் ஒரு வரி கடற்கரையில் மயிலாய்
உன்னை பூஜித்த மாதா கற்பகாம்பிகை நாதா ( ஆக கபாலீஸ்வரர் கோவில்
கடற்கரையில் இருந்திருக்கிறது)

இப்படி அந்தக்காலங்களில் தமிழ் பாடல்களை இசைத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். சென்னையில் இசை விழா என்று ஆரம்பித்த பிறகு தமிழ் ஒதுக்கப்பட்டு தெலுங்கு, வட மொழிக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு (சென்னை வாழ் தெலுங்கர்களின் டாமினேஷன் ?)

Labels: