Friday, March 08, 2013

அம்மா- வாழ்வதின் பெயர் வாழ்க்கை


எல்லாரும் சொன்னோம் ஆனால் அம்மா கேட்கவில்லை. திரும்ப திரும்ப ஓரே பல்லவி. எனக்கு ஆபரேஷன் வேண்டாம், அதற்கு பிறகு ரேடியேஷன், கீமோதொரபி பற்றிக் கேள்வியும்பட்டிருக்கிறேன், எல்லாம் ஆண்டு அனுபவித்தாச்சு, இனியும் ஆபரேஷன் செஞ்சி அறைகுறையாய் ஏழு எட்டுஆண்டுகள் வாழ்வதைவிட, என் இஷ்டம்போல் ரெண்டு மூணு வருஷங்கள் வாழ்ந்துவிட்டு போய் சேருகிறேன், அப்பாவையும் வைத்துக்கொண்டு உங்களுக்கு எல்லாம் கஷ்டம் “ என்றார். மார்பக புற்றுநோய், இரண்டாம் நிலை. எங்களாய் எதுவும் பேச முடியவில்லை, அம்மாவை நினைத்து நினைத்து தூக்கம் வர மறுத்தது. என்ன செய்வது? அங்கங்கு விசாரித்ததில் ஆபரேஷன் பண்ணிட்டு வாங்க, மேற்கொண்டு பரவாம இருக்க, ஆயுர்வேதம், சித்த வைத்தியம் செய்கிறோம் என்றார்கள். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. இப்படியே ஒரு வாரம் போனது. சென்னை கேன்சர் இன்ஸ்ட்டீயூட் சாந்தா அவர்களை பார்த்தாகிவிட்டது. ஆபரேஷன் ஓரே தீர்வு என்று சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் எல்லா டெஸ்டும் எடுத்தாகிவிட்டது. இப்ப வேண்டாம் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது? பேசாமல் இருந்தால் சரியில்லை, இப்படியே விட முடியாது. நாளைக்கு திரும்ப அதே மருத்துவமனைக்கு சென்று மீண்டும் ஆரம்பிப்போம் என்றார் என் கணவர். இதை அம்மாவிடம் சொன்னதும், கண்ணை இருட்டிக்கிட்டு வருது என்று அப்படியே படுத்துவிட்டார். சிறிது நேரத்தில் கண்முழித்தவர், “என்னை இப்படியே விட்டு விடுங்கள்” என்று கதறிவிட்டார். எனக்கு என்ன செய்து என்றே தெரியவில்லை. துளசியிடம் சொல்லி என்பெயர் குறிக்காமல், விஷயத்தை எழுதுங்கள், ஏதாவது வெளிச்சம் கிடைக்குமான்னு பார்ப்போம் என்றேன். அது இது தான். அதே நேரம் என் அத்தை (அப்பாவின் சின்ன தங்கை) போன் செய்தார். மயிலாப்பூர் கச்சேரி ரோட்டில் வெங்கட்நாராயணா ஆயுர்வைத்தியசாலை இருக்கு, அங்கு இப்படி ஒரு பேஷண்டுக்கு ட்ரீட்மெண்ட் தந்தாங்களாம். விசாரித்து பார்” என்றார். கூகுளின் உதவியால் போன் நம்பர் பிடித்து, போன் செய்து டாக்டரிடம் பேச வேண்டும் என்றேன். விஷயத்தைச் சொன்னதும், அவர் பேஷ்ண்டை அழைத்து வர வேண்டாம், அவருடைய ரெகார்ட்ஸ் மட்டும் கொண்டு வாங்க, நான் பார்த்துவிட்டு சொல்கிறேன்” என்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு நான் கிளம்பும்பொழுது, அம்மா நானும் வருகிறேன் என்று அடமாய் வண்டியில் ஏறிக் கொண்டார். எங்கள் நேரம் வந்ததும் உள்ளே போனோம். அம்மாவின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். நான் சொன்னது அனைத்தையும் கேட்டார். சரி செய்திடலாம் என்று ஒற்றை வார்த்தை சொன்னார். அம்மாவின் முகம் மலர்ந்தது. நோயைப் பற்றி நினைக்க வேண்டாம், சாதாரணமாய் உங்கள் வேலைகளைப் பாருங்கள், அதற்காக ஸ்ரெயினும் பண்ணிக்காதீங்க, பழம், காய், கீரை சாப்பிடுங்கள், காய்,கீரை வேகவைத்து, புளி அதிகமில்லாமல் சாப்பிடுங்கள். மனசை ரிலாக்சாய் வைத்துக் கொள்ளுங்கள் கோவில் குளம் என்று உங்களை எங்கேஜ் செய்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் சொன்னார வாசலில் தன்வந்திரி கோவில், அம்மா சுற்றிக் கொண்டு இருக்கும் பொழுது, டாக்டர் அறைக்கு நான் மட்டும் சென்றேன். அவர், “ ஆரம்ப கட்டம் என்பதால் ஆபரேஷனுக்கு நானும் சிபாரிசு செய்கிறேன். ஆனால் இப்படி பயப்படுவதால், அதுவே அவருக்கு கேடாக ஆகலாம், பார்க்கலாம் மருந்து எப்படி வேலை செய்கிறது என்று சொன்னது நவம்பர், 2011 அன்று. ஆயிற்று கிட்டதட்ட பதினைந்து மாதங்களுக்கு மேல். அம்மா நன்றாக இருக்கிறார். கட்டியும் நன்கு கரைந்து உள்ளது. மருந்து பாதி, அம்மாவின் எதற்கும் அலட்டிக்காத விசேஷ குணம் பாதி. இதோ அம்மாவின் ஒரு நாள் :-) காலை சின்ன சின்ன வேலைகள், பூஜை, சுலோகம், துளசிக்கு தண்ணி விடுதல் போன்று! காலை சாப்பிடும் முன்பு ஒரு கவளம் சாதம். காக்கா , குருவிக்கு!. குருவி மட்டுமில்லை, இங்கு விதவிதமாய் பறவைகள் வருகின்றன. அம்மாவுக்காக காலை எட்டு மணிக்கு ரெடியாய் காத்திருக்கும். பிறகு தினமலர் படித்தல் வாரமலர் குறுக்கெழுத்து புதிர்கட்டம் நிரப்புதல், குரோஷா போன்று கைவேலைகள். இப்பொழுது துண்டுதுணிகள், ஒரு பெரிய பை நிறைய இங்கிருக்கும் ஒரு டெயிலரம்மாவை பிடித்து வாங்கி வந்து சின்ன சின்னதாய் கட் பண்ணி பேட்ச் ஓர்க் பண்ணுகிறாராம், இப்பதான் ஆரம்பித்துள்ளார். பிறகு ஏதாவது பத்திரிக்கை படித்துக் கொண்டே ஒரு சின்ன தூக்கம். மதியம் இரண்டு சீரியல்கள். மாலை வீட்டு எதிரிலேயே பார்க்கில் நாலு ரவுண்டு. பிறகு தன் வயதொத்த பெண்களுடன் கொஞ்சம் அரட்டை. பிறகு அங்கேயே இருக்கும் வேதபுரீஸ்வருக்கு ஒரு ஹலோ! நாய் என்றால் அலறி ஓடும் அம்மாவை ஃபூவும், இனியும் மயக்கிவிட்டன. தங்களை தடவிக் கொடுக்காமல் தாண்டி போகவிடாது. போதாக்குறைக்கு “ஜில்லிக்கா” என்ற பூனை காலை மாலை பாலுக்கு வந்துவிடும். அம்மாவின் புடவை நுனியை இழுத்து ஏதாவது போடேன் என்றளவுக்கு பெட். தான் தொட்டியில் வைத்த புதினாவை ஆய்ந்து என்னிடம் தந்து, நாளைக்கு சட்னி அரைத்துவிடு என்று ஒரு ஆர்டர். மாலை, இருக்கும் பூவை எல்லாம் பறித்து வேதபுரீஸ்வரருக்கு ஒரு மாலை. சனிக்கிழமைகளில் துளசியை பறித்து அனுமாருக்கு மாலை. காம்பவுண்ட் வால் கிட்ட ஒரு சின்ன சிமிட்டு தொட்டி இருந்தால் நல்லா இருக்கும், மாடுங்க தண்ணிக்கு அலையுதுங்க. என்னால சின்ன பக்கெட்டில்தான் தண்ணி வைக்க முடியுது என்று எங்களிடம் ஒரு அங்கலாயிப்பு. கோவில் இருந்து, ஆறரை மணிக்கு வீட்டு வந்தால் என்னிடம் பேசிவிட்டு, சீரியல் பார்க்க ஆரம்பித்தால், ஒன்பதரை வரை ஓடும். சாமிபடம் பக்கத்தில் பெரிது பெரிதாய் ரெண்டு கவர்கள் என்னமா இது என்றால் சிவராத்திரி வருதில்லே, இந்த வீபூதியை, சின்ன சின்ன ஜிப் பேக்கில் போட்டு குடுன்னு குருக்கள் சொன்னார் என்றார். என்னமோ செய் என்று ஆசிர்வதித்தேன். ************** இன்று மகளிர்தினம், வயதானப்பிறகு எப்படி வாழ வேண்டும், நோயை எதிர்க்கும் மனபக்குவம் , தைரியம், வாழ்வை ரசித்தல், சுறுசுறுப்பு என்று அம்மாவிடம் இருக்கும் நல்லவைகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

Sunday, February 10, 2013

டோண்டு சார்- இன்னும் வாழ்ந்திருக்கலாம்

டோண்டு அவர்களை சமீபத்தில் (இந்த வார்த்தை என்னைப் போன்ற மூத்தபதிவர்களுக்கு எங்கள் வாழ்நாள் முழுக்க டோண்டு நினைக்க வைத்து விடும். )ஐந்துமாதங்களுக்கு முன்பு துளசி வீட்டு விசேஷத்தில் சந்தித்தேன், துளசிக்கு அவரை அடையாளம் தெரியவில்லை, டோண்டு என்றதும், என்ன ஆச்சு இவருக்கு என்று மாய்ந்துப் போனார். என்ன சார் உடம்புக்கு என்றதும் கேன்சர்! ஆபரேஷன் ஆயாச்சு, நான்கு லட்சம் ரூபாய் இதுவரை செலவாகியிருக்கு, ஆனால் ஆபரேஷனுக்கு பிறகான ரேடியேஷனும், கீமோதொரபியும் கொடுமையாய் இருக்கு என்றார் அவரால் அதிகம் பேச முடியவில்லை. கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தவர், “ உங்க தைரியத்தை பாராட்டுகிறேன்” என்று ஆரம்பித்தார். நான் கொஞ்சம் முழிக்க, “ போலி டோண்டு பிரச்சனையில் கடைசியில் அவன் மன்னிப்பு கேட்டதும், மன்னிக்க மாட்டேன் என்றீர்களே அதைச் சொன்னேன் " என்றார். சட்டென்று மனசுக்குள் ஒரு ஆயாசம் . எத்தனை வருஷம் ஆச்சு, இன்னும் அந்த குப்பைகளை மனசில் போட்டு உழப்பிக் கொண்டு இருக்கிறாரே என்று தோன்றியது. அன்றைய மனநிலையில்,” சிலவற்றை என்றைக்கும் மன்னிக்க முடியாது என்று டோண்டு பதிவில் பதில் சொல்லியிருந்தேனாம். எனக்கு அவர் சொல்லும்பொழுதுகூட நினைவுக்கு வரவில்லை. அந்த ஆபாச தாக்குதலில் பெரும்பாலான பதிவர்கள் பாதிக்கப்பட்டனர். நானும் உட்பட அன்றைய பெண் பதிவர்கள் பெயரில் ஆபாச பதிவுகள் தொடங்கப்பட்டன. ஓரிரு பெண்பதிவர்கள் இணையத்தில் இருந்து விலகினர். மற்றவர்கள் வேதனைப் பட்டோமே தவிர, அதை பெரியதாய் கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் டோண்டு சாரால் அதை மறக்கமுடியவில்லை. இத்தனை வருடம் கழித்து என்னிடம் அதே விஷயத்தைஆரம்பிக்கிறார் என்றால், எவ்வளவு மனசில் போட்டு குழப்பிக் கொண்டு இருந்திருக்க வேண்டும்? ஓவர் ஸ்ரெஸ் புற்று நோய்க்கு ஒரு காரணமாக சொல்லுகிறார்கள். அறுபதுகளில் இருந்தவருக்கு மரணம் சீக்கிரம்தான். பல விஷயங்களை போகிற போக்கில் , தனக்கு சரி என்று தோன்றுவதை பட்டவர்த்தமாய் சொல்லிக் கொண்டு இருந்தவர், விவாதங்களுக்கு சளைக்காதவர், தடம் மாறினால் போடா ஜாட்டன் என்று சொல்லியதை இந்த விஷயத்திலும் மனப்பூர்வமாய் சொல்லியிருந்தால், இன்னும் வாழ்ந்திருக்கலாமோ என்று மனசு அங்கலாய்க்கிறது. மனித மனம் விசித்திரமானது, தமிழ் இணைய வாசகர் வட்டம் உங்களை மிகவும் மிஸ் பண்ணுகிறது டோண்டு சார் :-(

Sunday, October 21, 2012

1 shop.co.in

1 shop.co.in சென்ற மாதக்கடைசியில் ஒரு நாள் நாழிதழுடன் ஒரு விளம்பர துண்டு சீட்டு. நீங்கள் எப்படி பொருள்களை வாங்குகிறீர்கள் என்று. அதில் இருந்ததுதான் இந்த தலைப்பு. முயற்சி செய்துப் பார்க்கலாமே என்றுப் பார்த்தால், மாச மளிகை சாமான்களை வாங்க மிக மிக செளகரியமாய் இருக்கிறது இந்த இணைய மளிகை கடை 1 shop.co.in அந்த இணைய முகவரியில் பதிவு செய்ததும், பின் கோட் வைத்து, வீட்டு அருகில் இருக்கும் பெரிய கடையுடன் லிங்க் செய்து விடுகிறது. எனக்கு கிடைத்தது நீல்கீரீஸ்” நான் அந்த பக்கம் போகும்பொழுது அங்கும் சாமான் வாங்குவது உண்டு. அதனால் அங்கு விற்கும் பொருள்களின் தரம் பற்றி தெரியும், விலை நாம் வாங்கும்பொழுது பட்டியலில் வருவதால் அதைக் குறித்தும் குழப்பமில்லை. இதில் மிக மிக நல்ல விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு பொருளுக்கும், பல பிராண்டுகளின் விலைப்பட்டியலும் கணிணி திரையில் வருகிறது. நாம் விலையையும், தரமான பிராண்டையும் பார்த்து தேர்வு செய்யலாம். நாம் கடையில் ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்ப்பது இயலாத காரியம். வீட்டில் இருந்தே கணிணி மூலம் ஆர்டர் செய்யும்பொழுது, நேரமும் மிச்சமாகிறது. வேலையும் சுலபமாகிறது. வேறு ஏதாவது தேவையா என்று கடையில் இருந்து தொலைபேசியும் வருகிறது. அவர்களின் பட்டியலில் இல்லாததை அப்பொழுது சொல்லிக் கொள்ளலாம், நீங்களும் முயற்சி செய்துப் பாருங்களேன்.

Thursday, September 06, 2012

ரா.கி. ரங்கராஜன் படைப்புகளில் என் நினைவலைகள்


எங்கள் வீட்டு பரணில் இருந்த பைண்ட் புத்தகங்களில் ஒன்று மோகினி எழுதிய “அடிமையின் காதலி” இந்த மோகினி தான் குமுதம் புகழ் ரா.கி.ரங்கராஜன் என்று பின்பு தெரிந்தது. எனக்கு தமிழ் வாசிக்க தெரிந்த நாளில் இருந்து பல முறை படித்ததால் ஏறக்குறைய வரிக்கு வரி மனப்பாடம்  ஆனால் இப்புத்தகம் காணாமல் போயே வருட கணக்காகிவிட்டது. ஐம்பது கடைசி அல்லது அறுபதுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கல்கி , போடு போடு என்றுப் போட்டுக்கொண்டு இருந்தப்பொழுது, குமுதம் எஸ்.ஏ.பி “நீரும் சரித்திர தொடர் எழுதேன் என்று சொன்னதும், தொடர்கதையின் தலைப்பையும் அவரே சொன்னாராம், பிறகே கதை எழுதப்பட்டதாம், எங்கோ ரா.கி.ரா சொன்னதாய் நினைவு. கொஞ்சம் பொன்னியின் செல்வன் வந்தியதேவன் பாணியில் நாயகன் காஞ்சிபுரத்தான், (கடைசி வரையில் அவன் காஞ்சிபுரத்தானே- பெயர் கிடையாது) அவன் காதலி அடிமை பெண் தாமரை. சென்னை/ அதாவது சென்னப்பட்டினம் ஆங்கிலயர்களின் ஆட்சி மெல்ல விரிவரைய ஆரம்பித்த காலம். அடிமை வியாபாரம் செய்யும் பெரிய பெத்து, அவர் மகள் தெய்வநாயகி. பச்சோந்தி வளர்க்கும் பாதிரியார், அதன் பெயர் மோசஸ் என்று நினைவு. செஞ்சி கோட்டை, திருமலை நாயகர் காலத்து மூக்கறு யுத்தம் பற்றிய குறிப்பு என்று போகும், ஆனால் மிக மிக சுவாரசியமாய், அந்த கால சென்னை/ சென்னப் பட்டின விவரங்கள் சரியாய் இருக்கும். ஆனால் தமிழில் வெளியான சரித்திர நாவல்கள் லிஸ்ட் போடும் இலக்கியவாதிகள் என்றும் இப்புதினத்தைச் சேர்த்ததாய் எனக்கு தெரிந்து இல்லை  அடுத்து கிருஷ்ணகுமார் என்ற பெயரில் ரா.கி.ரா எழுதிய புரபசர் மித்ரா,மற்றும் மீண்டும் தேவகி படித்த நினைவு. இதில் மீண்டும் தேவகி, மிக த்ரிலீங்காய் இருக்கும். ஓசோ தாத்தா என்ற கேரக்டர். குட்டி சாத்தான் மாதிரி. இருட்டு அரையில் தேவாங்கு போல, சில நூறுவருடமாய் வாழும் ஒரு மாந்தீரிகவாதி. இதை இங்கு பதியும்பொழுது ஆச்சரியமாய் இருக்கிறது, நகைச்சுவையா, ஆங்கில மொழிப்பெயர்ப்பா (ஷிட்னி ஷெல்டன் கதைகள், பட்டாம்பூச்சி இத்தியாதிகள்) வினோத்தின் செம்ம ஸ்மார்ட்டாய் சினிமா செய்தி தரும் பாணி, (அப்போது எனக்கு டீன் ஏஜ்) சரித்திர நாவல்கள், (நான் கிருஷ்ணதேவராய் , நான் படித்ததில்லை), அமானுஷ்ய கதைகளா அல்லது சினிமாவின் அவரின் பங்களிப்பு என்ற இந்த அஷ்டவாதிக்கு அவர் வாழ்நாளின் என்ன அங்கீகாரம் கிடைத்தது? புரபசர் மித்ரா மற்றும் என் கடைசி வரிகளின் அங்கலாய்ப்பு இதோ இங்கும்.

Tuesday, August 28, 2012

நீங்க நான் ராஜாசார்

நம் ஊருக்கு திரும்பியதும் நான் செய்ய நினைத்த வேலைகளில் ஒன்று, ஒரு டிரான்சிஸ்டர் வாங்க வேண்டும் என்பது. வழக்கமாய் தரமான, நியாயமான விலை கடை என்றால் என்னுடைய தேர்வு “விவேக்” தான். சரி வாங்கிடலாம் என்றுப் போனால், டிரான்சிஸ்டர் எல்லாம் வருவதே இல்லை மேடம் என்று வாயால் சொல்லிவிட்டு, எம் பி 3 பிளேயர், ஐபாட் என்று உலகமே முன்னேறிக்கிட்டு இருக்கு, இப்ப போய் டிரான்சிஸ்டராம் என்று கண்ணால் சொல்லி முடித்தான். சைனா மேக் கிடைக்கும் மேடம்என்று அவன் தந்த மேலாதிக்க தகவலை ஓரே வரியில் நிராகித்தேன். நாங்க எல்லாம் சைனா பொருள்களை வாங்குவதில்லை என்றேன் உறுதியுடன். டிரான்சிஸ்டர், டிரான்சிஸ்டர் என்று அலைந்ததில், ஒரு மின்னணு கடையில், சோனி இம்போர்டட் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் ஆகும்என்றார். அங்கிங்கு சுற்றியதில் ஒன்றும் தேறவில்லை. சரி, அந்த சோனியே வாங்கி தொலைக்கலாம் என்று திரும்ப அந்த கடைக்கு நுழையும்பொழுதும் ஞானோதயம் ஏற்பட்டது, தானிக்கு தீனீக்கு பேர் ஏமி என்று  இத பாருங்க மேடம், நூத்தி முப்பது ரூபாய் சைனா மேக் என்று அழகாய் கையடக்கமாய் காட்டிய ஒன்றை மீண்டும் தேடிப் பிடித்து கொள்கையை எல்லாம் ஏறக்கட்டிவிட்டு, அதே டிரான்சிஸ்டரை எடுத்து வந்தேன். ஆயிற்று, கடந்த ஒரு வருடமாய் இரவு காதோரம் பண்பலை 98.3 ரேடியோ மீர்ச்சியில் “நீங்க நான் ராஜா சார்” கேட்டுக் கொண்டே தான் தூக்கம். மற்ற அலைவரிசைகள் என்ன நிகழ்ச்சிகள் என்றுக்கூட பார்க்க தோன்றுவதில்லை. பதினென் வயதுகளில் மனம் கவர்ந்த பாடல்கள், அதை தாண்டி அன்றைய எம்.எஸவி க்கோ இன்றைய ஹாரீஸ், ரகுமான் இசையிலோ மனம் ஒன்ற மறுக்கிறது. நிகழ்ச்சி நடத்தும் செந்தில் அதீதஆங்கிலமும், அலட்டலும் இல்லாமல் இயல்பான பேசுவது நன்றாக இருக்கிறது. அதே சரவணன் மீனாட்சி ஈரோ! பல அற்புத பாடல்களை இன்று கேட்டும்பொழுது, ராஜா , மலேஷியா வாசுதேவனுக்கு பல அருமையான பாடல்களை பாட வாய்ப்பு தந்திருக்கிறார். போன வாரம் (23-8-2012)நண்டு படத்தில் வரும் “அள்ளி தந்த பூமி அன்னையல்லவா” கேட்டதும் மனசு அப்படியே பின்னோக்கி ஓடியது. இதைவிட அமைதியான , சுகமான தூக்கத்துக்கு மருந்து இருக்கா என்ன? வளையோசை கல கல வென என்று எஸ்பிபி ஆரம்பிக்க, “கொஞ்சம் பெரிசாய் வையேன்” என்று பக்கத்தில் குரல் கேட்டது. அமலா  அந்தகால மனம் கவர்ந்தவ நாயகி, மலரும் நினைவு வந்திருக்கும்  “ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு” லதா பாட அடிசக்கை பாடல் யாரு நம்ம வாலியாக்கும்  பி.கு இளையராஜா ஸ்பெஷல் வானொலி இணையத்தில் கேட்க http://tunein.com/station/?stationId=166196 இணைப்பு அனுப்பிய பாலராஜன் கீதாவுக்கு நன்றி

Thursday, April 12, 2012

படிப்பும் விடுதலைக்கான அறிவும்- மருதையன்




காதில் விழும் ஒரு சொல்லும், கண்ணில் படும் சில வரிகளும் நாளையே
புரட்டிப் போட்டுவிடுவது அவ்வப்பொழுது நம் எல்லாருக்கும் நிகழ்வதுதான். இன்று காலையில் வந்த ஜூனியர் விகடனில் படிப்பும் விடுதலைக்கான அறிவும் என்ற மருதையன் என்பவர் எழுதிய புத்தகத்தின் மதிப்புரை வாசிக்க நேர்ந்தது.

“மிகச் சிறந்த இசையாகவே இருந்தாலும், அதை ரசிக்கும் காதுகள் இல்லை என்றால், அவர்களுக்கு அவை வெறும் ஒலிதான்” என்ற மார்க்ஸின் மேற்கோளுடன் தொடங்கியிருக்கிறார் மருதையன்.

பள்ளியிலும், கல்லூரிகளிலும் படிப்பதும் இலக்கியவாதிகள் படிப்பதும் வெறும் காரியவாதப்படிப்புகள் என்றவர், எதற்காக படிக்கிறீர்கள் என்ற கேள்வியை நம் முன்பு வைக்கிறார். இந்த கேள்வி காலையில் இருந்து என் மனதில் சுழன்றுக் கொண்டு இருக்கிறது.

பலமுறை நான் எண்ணியதுதான் வியந்தது படித்தவர்களின் சிறுமை தனம் படிப்பு இவர்களுக்கு என்ன சொல்லிதந்தது ? கல்வியோ அல்லது இலக்கியமோ ஏன் சக மனிதத்தை மதிப்பதில்லை? அதற்கு விடையாய் கட்டுரையில் வருகிறது, கலை, அரசியல், பொருளாதாரம், இலக்கியம், ஆய்வு இவைகளில் ஆழ்ந்த படிப்பு சமூக அக்கறையையும், ஆளுமையையும் வளர்க்கும் என்கிறார்.

ஒரு புத்தகத்தை வாசிக்காமல், விமர்சனத்தைப் படித்து மட்டும் அந்நூலினை பற்றி எழுதுவது தவறுதான். ஆனால் படிப்பது பிடிக்கும் என்றால் எதைப் படிக்கிறீர்கள்? எதற்காக படிக்கிறீர்கள் என்ற வரிகளே இந்த பதிவு போட தூண்டியது.

நான் என்ன படிக்கிறேன் – பொழுதுப் போக்க படிப்பதில்லை.

ஏன் படிக்கிறேன் – இந்த கேள்விதான் மனதில் சுற்றிக் கொண்டு இருக்கிறது. வாழ்க்கையை புரிந்துக் கொள்ள படித்துக் கொண்டு இருக்கிறேன். அப்படி என்ன புரிந்துக் கொண்டேன் என்றால் அது என்ன அவ்வளவு சுலபமானதா என்ன :-)

Wednesday, April 04, 2012

கார்ட்டூனிஸ்ட் கேசவ்வின் “சரணாகதி”


என் வீட்டு சாப்பாடு அறை ஒரு பக்க சுவரில் மாட்ட புத்தனின் படம் ஒன்றை தேடிக் கொண்டு இருந்தேன். உண்மையில் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும், ஆனால் இந்த உருவம் என்று சொல்ல இயலாத அருவ படம் கண்ணில் படவேயில்லை. கிடைத்தால் இல்லையா விலையைப் பற்றி அடுத்து கவலைப்பட முடியும்?

ஒருநாள் ஏதாவது படிக்க தேறுமா என்று அம்மாவின் புத்தக குவியலை நோண்டியதில், பழைய சக்தி விகடன் கிடைத்தது. அதில் இருந்த இந்த ஓவியம் கண்ணை விட்டே அகலவில்லை. இன்று வந்த சக்தி விகடன் அட்டை படத்திலும் அதே ஓவியம்.



கார்ட்டூனிஸ்ட் கேசவ் என்ற பெயர் தான் நான் பார்த்தவரையில் இந்து
நாளிதழில் அரசியல் கார்ட்டூன் மட்டுமே! ஆனால் இந்த ஓவியம் மட்டுமில்லாமல் அவர் பிளாக்கில் பார்த்தால் அத்தனையும் அற்புதம்.

வெகு நாட்களாய் கண்ணில் கருணை பொழியும் புத்தனின் ஓவியத்தைத் தேடிக் கொண்டு இருக்கும்வேளையில் இப்படம்.


ஆன் லைனில் விகடன் குழும இதழ்களுக்கு சந்தா கட்டியுள்ளதால், தேடிப் பிடித்து என் கணிணி வால் பேப்பரில் போட்டுக் கொண்டு விட்டேன். இந்த ராமனும், அனுமனும் வித்தியாசமாய் இருக்கிறார்கள் இல்லையா?.

புத்தனின் அதே கருணை பார்வை, கொஞ்சம் வயதானதுப் போல தோற்றம் தரும் அனுமனின் பூரண சரணாகதியும். இதோ உங்கள் பார்வைக்கு

மானசீகமாய் சுவரில் படத்தை ஏற்றி விட்டேன். நிஜபடம் என்று சுவரில் ஏறும்? கேசவ் அவர்களிடம் கேட்க வேண்டும்.