Saturday, January 26, 2019

test

testing

Friday, March 10, 2017

கொனாரக் மகாலஷ்மி - சிறுகதை

    வலம்  3-2017   இதழில் வெளியான சிறுகதை  




                                  கொனாரக் மகாலஷ்மி

 ஹொரா எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம்  தாமதமாய் வந்தது. நாலு நாள் பயணம் என்பதால் லக்கேஜ் அதிகமில்லை.  சின்ன சூட்கேசை  சீட்டுக்கு அடியில் தள்ளிவிட்டு நிமிரும்பொழுது, “ எதுக்கு தனியாய் டிரெயின்ல போகணும், பேசாம பிளைட்டுலேயே போயிருக்கலாம் என்று முணுமுணுத்தவரை பார்த்து,. “ நானூத்தி நாற்பத்தி நாலாவது தடவை இந்த ஒரு வாரத்தில் சொல்லியாச்சு”  நான்  சிரித்துக்கொண்டே  சொன்னதைக்  கேட்டு ஒரு முறை முறைத்தார்.

யாரோ அழைப்பது கேட்டு திரும்பினால் ஓய்வுப் பெற்ற   அலுவலக சகா  அசோக்.

‘” என்ன மேடம் எங்க பயணம்” என்றவரை கணவருக்கு அறிமுகம் செய்துவிட்டு, புவனேஸ்வர்ல  ஒரு கான்ஸ்பரன்ஸ். அதுதான் “ நான் முடிக்கும் முன்பு “ நீங்க பிளைட்டுலேயே போயிருக்கலாமே, எலிஜீபிலிட்டி இருக்குமே” என்றதும், “ இவளுக்கு ரெயில் ஜேர்ன்னிதான்  பிடிக்கும் …” என்று ஆரம்பித்த கணவரை , “ நீங்க கெளம்புங்க, “ என்றேன்.

சரி வரேன். ரொம்ப சுத்தாதே, பார்த்து ஜாக்கிரதை என்று சொல்லி இறங்கவும், ரயில் கிளம்பியது.

எதிர் சீட்டிலேயே திரு, திருமதி  அசோக். சாப்பாட்டு மூட்டையை ஜன்னல் ஓரத்தில் இரண்டு சீட்டுக்கும் நடுவில் இருந்த சின்ன மேடையில் வைக்க போனேன்.

அங்க வைக்காதீங்க. ஸ்வாமி வைத்திருக்கேன், எங்க போனாலும் பூஜையை விட மாட்டேன் என்றார் திருமதி அசோக்.
அழகாய் டவல் விரித்து வானிட்டி பேக் மாதிரி ஒன்று உட்கார்ந்திருந்தது. நான் என் சாப்பாட்டு மூட்டையை சீட்டில் வைத்தேன்.

“  நா பிளைட்டுல போகலாம்ன்னு எவ்வளவோ சொன்னேன் இவர் கேட்கல’ புலம்பலாய் ஆரம்பித்தாள்  திருமதி அசோக்.
“இல்லே மேடம், குரூப்பா புவனேஸ்வர், கல்கத்தா போறோம். நாம மட்டும் பிளைட்டுல போனா நல்லா இருக்குமா?   இன்னைக்கு நைட்டு கிளம்பினா நாளைக்கு நைட்டு போய் சேர்ந்திடலாம்”

கொஞ்ச நேரம் பழைய நண்பர்களை பற்றி பேசிவிட்டு படுக்கையை பிரித்துப் போட ஆரம்பித்தனர்.

நான் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன்.  காதில் எம் பி 3 பிளேயரில்  இளையராஜா.
 திருமதி. அசோக் ஏதோ சொல்வதுப் போல் இருந்தது, ஹெட் போனை எடுத்ததும்,
“ அது என்ன டிரெயின்ல போவது ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னீங்க?  திரும்ப திரும்ப என்ன வர போகுது ‘ என்றவளிடம், “ பச்சை பசேல்ன்னு ஆந்திரா நெல்லு வயல், கோதாவரி, சில்கா ஏரின்னு எனக்கு எத்தனை பார்த்தாலும் அலுக்காது” என்றேன்.
என்னமோ சரி என்பதைப் போல தலை அசைந்தது. அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல், “கோதாவரின்னு ஒரு தெலுங்கு படம். அதை பார்த்துல இருந்து கோதாவரி நதி இன்னும் பிடிச்சிப் போச்சு”


“ பக்தி படம் தானே? நம்ப மாதிரி கிடையாது.  ஆந்திரால  பக்தி  அதிகம். கோதாவரி நதிக்கரை கோவில்கள்  ன்னு பக்தி மலர்ல படிச்சிருக்கேன்.

“இல்லே இல்லே இது சும்மா ஃபீல் குட் மூவி. கதை முழுக்க கோதாவரி நதியில் நடக்கும்.” என்றவள், அங்கத்தான் ஹீரோவை மீட் பண்ணுவா என்பதை சொல்லாமல் விட்டு விட்டேன்.

“ சினிமா எல்லாம் போறதேயில்லை. .  என்னமோ இன்னைக்கு சிவராத்திரிதான்’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு படுத்துக்கொண்டார் அந்த அம்மையார்.

 விளக்குக்கள் அணைந்தன.  ஜன்னல் ஓர இருக்கை. இருட்டில் தூரத்தில் தெரியும் வெளிச்ச புள்ளிகள். இதமான ஏசி குளிர். காதில் எஸ்.பி.பி “ இது மெளனமான நேரம்’ என்று குழைய ஆரம்பித்தார்.

தாலாட்டு போல ரயில் ஆட்டத்தில் நல்ல தூக்கம். ஏதோ கோவில் மணி சத்தம் , பாட்டு சத்தம் கேட்டது,

கண்விழுத்துப் பார்த்தால் நடு நாயகமாய் திருமதி. அசோக், வானிட்டி பேகுக்கு  தீபாரதனை காட்டிக்கொண்டு இருந்தாள், சுற்றிலும் ஏழெட்டு பேர்கள்.

மெல்ல எழுந்து பல் தேய்த்துவிட்டு வந்தால், உலர் பழங்கள் பிரசாதமாய் கிடைத்தன.

“ பர்ஸ்ட் ஏசில குளிக்க நல்ல வசதி. டவல், சோப் எல்லாம் தராங்க. எங்க குரூப் ஆளுங்க அங்கேயும் ரெண்டு பேர் இருக்காங்க, குளிச்சதால் பூஜை பண்ண முடிந்தது” என்றார் மாமி பெருமையாய்!

 மூன்றாம் வகுப்பு  ஏசியில் பஜனை நடக்கிறது என்று கிளம்பி போனவர் ஒரு மணி நேரத்தில், ஒரு நாலைந்து பேருடன் வந்தார்.
ஒரு வர் கையில் இருந்த லேப் டாப்பை சீட்டில் வைத்தார்.   ஜன்னல் சீலைகள், பர்த் சீலைகள் இழுக்கப்பட்டு  இருட்டாக்கப்பட்டது. முந்தின நாள் சீரியல்கள் ஓட தொடங்கின.  நல்லவேளையாய் சைட் பர்த் ஆசாமியும் எட்டிப் பார்க்க  , அவரை என் சீட்டில் உட்கார சொல்லிவிட்டு, வெளியே  அவர் இடத்தில் அமர்ந்தேன்.

 நானும் ஜன்னல் ஓர காட்சிகளில் , இளையராஜாவுடன் ஐக்கியம் ஆனேன்.

மறுநாள் முழுக்க கான்ஸ்பரன்ஸ் ஓடியது. அடுத்த நாள்  காலை பத்து மணிவாக்கில் பல நாள் கனவான கொனாரக் போய் சேர்ந்தேன். முன் மண்டபம் தாண்டி போனதும் திரை விரிந்தது போல பிரமாண்டம். அப்படியே வாய் அடைத்துப் போனேன்.  முன் மண்டபம் முழுக்க நாட்டிய நங்கைகள். வித வித போஸ்கள். மெயின் சூர்ய தேவன் கோவில் முழுக்க  திருக்குறளின் மூன்றாவது பால். கொனாரக்கின் பிரபல சூரிய சக்கரங்கள்.

  எது கை, கால் என்று தெரியாமல் ஒரு அற்புத சிலை. பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுது, எப்படி மேடம் இருக்கீங்கன்னு திருமதி.அசோக்  அருகில் வந்து சிலையை கூர்ந்து நோக்கியவள், மகா லஷ்மி என்று தொட்டு கும்பிட்டாள்.

மகா லஷ்மிக்கும் இந்த போஸ்க்கும் ஒரு ஒற்றுமை கூட என் கண்ணில் படவில்லை. முணங்கலாய், ‘ இது மகா லஷ்மி இல்லேயே” என்று சொன்னேன்.

‘’ நீங்க வெளி மண்டப சிற்பங்கள் பார்த்தீங்களா, ரெண்டு கை , ரெண்டு கால் இருக்கும். அதெல்லாம் நம்ம மாதிரி சாதாரண மனுஷனுங்க. இங்கப்பாருங்க, நாலு கை , சுவாமி சிலைன்னா இப்படித்தான் கைங்க இருக்கும்” என்று விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது அவங்க  குரூப் ஆளுங்க போல நாலைந்து பேர் வர , திருமதி அசோக் ,” மகா லஷ்மி”  சிலையை காட்டினாள். சில பெண்கள் பக்தியுடன் தொட்டு  கும்பிட ஒரு மாமா மட்டும் டவுட் கேட்க, அதிக கையிருந்தால் ஸ்வாமி சிலை என்று எடுத்துச் சொன்னாலும், அந்த மாமா எந்த உணர்வும் காட்டாத முக பாவத்துடன் சட்டென்று இடத்தை விட்டு  நகர்ந்தார்.

அதே சமயம், நாலு வட நாட்டு பெண்மணிகள் வந்ததும், அதே மகாலஷ்மி புராணம் ஓட்டை ஹிந்தியில் சொல்லப்பட்டது. பய பக்தியுடன் கைகளை உயர தூக்கி அவங்க பாணியில் வணங்க தொடங்க, வெடித்து வரும் சிரிப்பை கஷ்டப்பட்டு வேகமாய் இடத்தை விட்டு அகர்ந்தேன்.

செல் அடித்தது.  எடுத்தவுடன் சிரிக்க தொடங்கினேன்.

என்ன விஷயம் என்றுக் கேட்டவரிடம்  “இங்கே  ஒரு  Erotic pose. கை எது கால் எங்கேன்னு தெரியலை  எங்கூட டிரெயினில் வந்தாளே, மிஸஸ் அசோக், அவ வந்து ஒரு  சிலையை பார்த்து மகா லஷ்மின்னு கன்னத்துல போட்டுக்கிறா, அதுக்கு ஒரு எக்ஸ்பிளனேஷன் தந்தா பாருங்க,… முடிக்க முடியாமல் சிரிக்க தொடங்கினேன்.

நீ சொல்லுவது எதுவும் புரியலை. ஒண்ணு சிரிச்சிட்டு சொல்லு, இல்லே சொல்லிட்டு சிரி’ என்றார்.

விளக்கமாய் சொன்னதும், பாவம் விடு,  ‘  Ignorance is bliss.என்றார்.

ஆமாம், இந்த இன்னெசெண்டும் அழகுதான். எந்த வித கேள்வியும் மனசுல வராம அப்படியே ஏத்துக்குவதும்  ஒரு கிப்ட்தான். தொந்தரவு இல்லை பாருங்க”

உன்ன மாதிரியா கண்டதையும் படிச்சிட்டு மூளைய குழப்பிக்க வேண்டியது, சரி   சரி கிளம்பு, மணியாச்சு,  இப்ப கிளம்பினா சரியா இருக்கும்,’ என்றவரிடம்,
வாட்ஸ் அப்புல அந்த படம் அனுப்புறேன், பாருங்களேன்.

 வேணா வேணாம்,  கேமிரா கொண்டு போனே இல்லே, அந்த மகாலஷ்மி நானும் தரிசிக்கிறேன்.  குளோசப் நாலு எடுத்துக்கிட்டு வா, கை கால் எங்கேன்னு கண்டுப்பிடிக்கலாம், நாமும் டிரை பண்ணலாம் “ என்றதும்,
“ அய்யே போதுமே, வைங்க போனை ‘ என்றேன்

                                                        ****************************
ராமசந்திரன் உஷா
சென்னை








Sunday, February 26, 2017

ஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல்- 11
30-1-17 இன்று பயணத்தின் கடைசி நாள்.
அதிகாலை குளிரில் கடற்கரையில் உலாவ சென்றேன்.
ஒரு செல்லக்குட்டி ஓடி வந்து மேலே விழுந்து, நமஸ்காரம் எல்லாம் பண்ணியது.
பெயர் என்னவென்றதற்கு ஓஜூ மாதிரி சொன்னார். நான் பீஜூ வா என்றதும் பதறி அடித்துக்கொண்டு இல்லே இல்லேன்னு அலறினார்.
அவர் அலறியதற்கு காரணம் சில நொடிகளில் புரிந்தது ;-)
காலை நேராய் கொனாரக் போய் சேர்ந்தோம். முன் மண்டபம் முழுக்க, நாட்டிய தாரகைகளின் வித விதமான சிலைகள்.
அப்படியே பார்த்துக்கொண்டு வந்தவள், எதிரில் தெரிந்த சூரிய கோவிலைப் பார்த்து அப்படியே நின்று விட்டேன்.
இப்படி ஒரு பிரமாண்டம், அழகு நான் எதிர்ப்பார்க்கவில்லை. சில நிமிடங்கள் எதுவுமே தோணாமல் அப்படியே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
24 சக்கரங்கள் எண்ணற்ற பாலியல் சிற்பங்கள் , விசித்திரமான கோணங்களில், பார்த்துக்கொண்டு வந்ததில் இந்த சிலை கண்ணில் பட்டது.
புருஷன் சாமியாராய் போகிறான் போல, முதல் மனைவி போகாதே என்று கெஞ்சுகிறாள். சின்ன வீடு, வேட்டியை பிடித்து இழுக்கிறது- இது என் புரிதல் :-)
பன்னிரெண்டரை வரை அங்கேயே இருந்தோம்.
அங்கிருந்து மதிய உணவு முடிந்து பூரி ஜெகந்நாதரை தரிசிக்க மீண்டும் கிளம்பினோம். அங்கு தினமும் மாலை கொடியேற்றுவார்களாம் அதைப் பார்க்க.
நான் உள்ளே சந்நதிக்கு செல்லவில்லை ;-)
மெயின் கோபுரம் 214 அடி.எட்டு அங்குல உயரம். எந்த வித பிடிமானமும் இல்லாமல், நாளும் ஒரு ஆள் ஏறி பழைய கொடியை எடுத்துவிட்டு புது கொடியை ஏற்றுவானாம்.
என்னமோ மனம் முழுக்க பதைப்பதைப்பு. இதெல்லாம் தேவையா என்று. ஒரிசா புயலுக்கும், அதீத மழைக்கும் பிரபலம். அந்நேரம் என்ன செய்வார்கள்? வழுக்கி விழுந்தால் என்ன ஆகும்?
இன்சூரன்ஸ் எல்லாம் இருக்குமா என்று ஒரு வித ஒவ்வாமையுடன் பார்த்துக்கொண்டு பக்கத்தில் மாட்டியவர்களிடம் புலம்பிக்கொண்டு இருந்தேன்.
இன்னும் ஒரு ஆள் ஏறிக்கொண்டு இருந்தான். அவன் இடுப்பிலும் மூட்டை. முதலில் ஏறிய ஆள், ஏற்றியது பெரிய கொடிகள்.
இரண்டாவது ஆள், இடுப்பில் மூட்டையுடன் ஏறி அதே மூட்டையுடன் இறங்கினான். அந்த கொடியை வீட்டில் வைத்தால் மிக நல்லது, செல்வம் பெரும் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா.....
ஒரிஜினல் கொடி, அரசியல், செல்வாக்கானவர்கள் வீடுகளுக்கு போகும், இந்த முக்கால் அடி டூப்ளிகேட் ( மத அபிமானிகள் மன்னிக்க) நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அங்கிருந்து கிளம்பி புவனேஸ்வர் வந்து, ரயில் பிடிக்க சென்றோம்.
24ம் தேதி இரவு கிளம்பி, 31 மாலை வீடு வந்தாச்சு. சில புதிய நண்பர்களை மறக்கவே முடியாது. தினமும் பஸ்ஸில் ஓரே சீட்டில் வந்த உஷா, சின்ன பிள்ளைகள் மாதிரி ஓர சீட்டுக்கு சண்டை, ஓடி வந்து ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு, இடத்தை பிடித்தது. வயது மறந்துப் போனது.
நேரத்துக்கு நேரம் ஸ்னாக்ஸ் சப்ளை செய்த ராஜாராமன், என் ரூம் மேட் வசந்தா மேடம் என்று
சொல்லிக்கொண்டே போகலாம்.
மீண்டும் ரயிலில் சுவாமிநாதன் அவர்களின் குடும்பத்துடன் நன்கு பொழுது போனது.
யுக புருஷன் என்று புத்தனை சொன்னப்பொழுது,
மாமல்ல புரம் குகைக்கோவிலான ஆதி வராக மண்டப கல்வெட்டில் புத்தன் ஒன்பதாவது அவதாரமாய் குறிப்பிட்டு இருக்கிறது என்றார்.
தியாகராஜர், தினமும் பாடும் தீன ஜனாவன திவ்ய ராம கீர்த்தனையில் புத்தரும் வரார் என்று மாமி - திருமதி . சுவாமிநாதன் சொன்னார்.
31ம் தேதி பயணம் இனிதாய் முடிந்தது. கல்வெட்டு, தொல்லியல் எல்லாம் எனக்கு புதிய சப்ஜெட்டுகள். எனக்கு தந்த கையேட்டில் இருந்து மொழிப்பெயர்த்து போடுவதில் எனக்கு விருப்பமில்லை. அடுத்த பயணத்தில் ஒழுங்காய் நானே குறிப்பெடுத்து எழுத முயலுகிறேன். இன் ஷா அல்லா ;-)
- முற்றும்-



ஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் 10
மறுநாள் காலை லிங்க ராஜா கோவிலுக்கு கிளம்பினோம். பிரம்மாண்டமான கோவில். செல் போன், கேமிரா, தோல் பொருட்கள் அனுமதியில்லை.
நிறைய சிறு தெய்வங்களுக்கு சந்நிதிகள். வழிப்பாட்டு தலம். நல்ல கூட்டம். ஓரளவு சுத்தமாக இருந்தது.
உள்ளே நுழைந்ததும் நடுவில் சிவலிங்கத்தை சுற்றி நிறைய பக்தர்கள் அவர்களின் கைப் பிடித்து இழுக்கும் பூஜாரிகள். நிஜமாகவே இடது கையை கெட்டியாய் பிடித்து இழுத்த பூஜாரியை இரு இரு அல்லது வேண்டாம் என்று சொல்வதுப் போல வலது கையை ஆசிர்வாதம் செய்வது போல சொன்னதும், நல்லவேளையாய் கையை விட்டு விட்டு அடுத்த ஆளை பிடிக்க போனான்.
இந்த ஆசிர்வாத சைகையால் அன்று தப்பித்தேனே தவிர இரவு நன்றாக மாட்டினேன்.
அன்றிரவு பூரி ஜெகந்நாதரை தரிசிக்க போனப் பொழுது, சாமி முன்னால் நின்றிருந்த பூஜாரி தன் முன்னால் இருந்த நீள டேபிள் போன்ற அமைப்பில் பெரிய பெரிய கிண்ணம் வைத்து அதில் காசை போடும்படி கத்திக்கொண்டு இருந்தான்.
பார்க்க ஆபாசமாய் இருந்தது. நானும் அதே வலது கை ஆசிர்வாதம் செய்துப் போல கையாட்டிவிட்டு நகரும்பொழுது, அங்கு பக்தர்களுக்கு ரெண்டு குச்சியால் தலையில் அடித்து ஆசிர்வாதிப்பார்கள்.
என் முறை வரும்பொழுது, ஓரளவு நன்றாக தலையில் அடி விழுந்தது.
நானும் வலிக்கலையே என்று வடிவேலு பாணியில் மனதில் நினைத்து, அவனைப் பார்த்து சிரித்துவிட்டேன்.
என்னை பக்கத்தில் இருந்த இன்னொரு பூஜாரியிடம் கோபமாய் ஏதோ சொன்னான்.
போடான்னு வெளியே வந்தேன்.
பூரி கதை பிறகு :-)
லிங்கராஜா கோவில் சிலைகளும் அற்புதம். எல்லா கோவில்களிலும் பிள்ளையார், மிக அழகான காதல் ஜோடிகளாய் பரமசிவன், பார்வதி. நடராஜர், மயில் வாகன, சேவல் கொடியோன் இருந்தார்கள்.
தமிழ் கடவுளாய் முருகன் மாறியது எப்பொழுது?
மதிய சாப்பாடு முடிந்ததும் , அசோகரின் கல்வெட்டான,
Edicts of Asoka பார்க்க போனோம்.
கல்வெட்டு படிக்கப்பட்டது. நாங்கள் இருந்த இடத்தின் அருகில் தான் கலிக்கத்து போர் நடந்திருக்கிறது.
காலசக்கரத்தில் அப்படியே பின்னால் போனதுப் போன்ற உணர்வு.
அங்கிருந்து பூரிக்கு கிளம்பினோம். வழியில் ஒரு ஆர்டிஸ்ட் வில்லேஜ்.
கிராமத்து வீதியில் நடக்கும்பொழுது ஒரு வீட்டு வாசலில் ஒரு பூனைக்குட்டியை கட்டிப் போட்டு இருந்தார்கள்.
என் ஓட்டை ஹிந்தியில் இதை ஏன் கட்டி போட்டு வைத்திருக்கிறீர்கள் என்று உள்ளே படம் வரைந்துக் கொண்டு இருந்த ஆளை கேட்டேன்.
அம்மா பூனை இறந்துவிட்டது, இது ஓடுகிறது என்றான்.
இந்த மாதிரி செல்லங்கள் வளர்ப்பவர்கள் சீக்கிரம் நண்பர்கள் ஆகிவிடுவார்கள் :-)
அவன் பூனை மகாத்மியங்களை சொல்ல ஆரம்பிக்க இன்னொரு பெண் வந்தாள்.
அதுக்கு பேர் சூட்டும்படி சொன்னதும், ''லட்டூ" என்று சொன்னதும் அவளுக்கு மகா குஷி.
நான் என் வீட்டு செல்லங்கள் கதையை ஆரம்பித்ததும், அவள் நாய் வளர்த்து அது செத்துப் போன சோக கதையை சொன்னாள்.
உள்ளே இருந்த ஆளும், இந்த பெண்ணும் ஒரு வார்த்தைக் கூட தங்கள் கலைப் பொருட்களை வாங்கவோ, பார்க்கவோ கூட சொல்லவில்லை.
புவனேஸ்வர் வந்த நாள் முதல் சாப்பிட்ட கத்திரிக்காய் சுவை பிடித்துப் போய் ஹோட்டல் தோட்டக்காரனை தேடினேன். விதைக்கிடைக்குமா என்று!
ரிசப்ஷனில் விசாரித்தால் அவன் பத்து மணிவாக்கில் வந்து ஐந்து மணிக்கு கிளம்பிடுவான் என்று சொல்லி நாங்க விதை அவனை வாங்கி வர சொல்கிறோம் என்று மிக உறுதியாய் வாய் வார்த்தையில் சொல்லி காற்றில் விட்டார்கள்.
காலை இரவு விசாரித்து விசாரித்து ஓன்றும் பயனில்லை. பஸ் டிரைவரை கேட்டால், அது உள்ளே கடைகளில் கிடைக்கும், அங்கெல்லாம் பஸ்ஸில் போக முடியாது என்று சொல்லிவிட்டான்.
இந்த ஆர்ட்டிஸ் வில்லேஜ் வரும்வழியில் ஒருவன் விதை கடை பரப்பியிருந்ததைப் பார்த்துவிட்டேன்.
திரும்பும்வழியில் போய் விசாரித்தால் கத்தரிக்காய் தவிர பல விதைகள் இருந்தன, :-(
வெள்ளரியும், கொத்தமல்லி விதையும் வாங்கினேன்.
அங்கிருந்து பூரி ஜெகந்தாதரை தரிசிக்க கிளம்பினோம். அந்த அடி வாங்கின கதைத்தான் மேலே இருக்கிறது.
புகைப்படம் Vallabha Srinivasan
எனக்கு பின்னால் இருக்கும் கதவருகில் ஒரு ஆள் இருக்கிறான் :-)
Image may contain: 1 person, sitting

ஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் 9
முந்தின பாகங்களை படித்துவிட்டு வாருங்கள். எனக்கே மறந்துப் போயிடுச்சு ;-)
அன்று மதிய உணவுக்கு பிறகு Khandagiri, Udayagiri க்கு கிளம்பினோம்.
கண்டகிரி மட்டுமே ஜெயின மதத்தை சார்ந்தது. வழக்கம் போல் அழகான சிற்பங்கள். சித்திரம் வரைவதுப் போல, ஒரு சம்பவத்தை அடுத்து அடுத்து சிலையாய் செதுக்கியிருந்தார்கள்.
அங்கிருந்த Kharavel Inscription படிக்கப்பட்டது.
அங்கிருந்து எதிர் புறம் இருந்த கண்டகிரி க்கு சென்றோம். அங்கு எக்க சக்க கூட்டம். எங்கு பார்த்தாலும் குரங்குகள். போகும் வழி எங்கும் வாழைப்பழ தோலிகள்.
நான் பார்க்க பார்க்க கூடை கூடையாய் வாழைப்பழங்கள் மேலே போய் கொண்டு இருந்தன.
அங்கிருக்கும் குரங்குகளுக்கு வாழைப்பழம் கொடுப்பது ஏதோ பிராத்தனைப் போல, ஆள் ஆளுக்கு வாங்கி தந்துக்கொண்டு இருந்தார்கள்.
எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள். நம் நாட்டு சரித்திர மேன்மையை பறைசாற்றும் இடத்தை எவ்வளவு முடியுமா அவ்வளவு நாஸ்தி செய்துக்கொண்டு இருந்தார்கள்.
அத்துடன் அன்றைய பயணம் முடிந்தது.
படங்கள் நன்றி திரு.V.K.Srinivasan

ஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் 8
ரத்னகிரியில் இருந்து உதயகிரிக்கு கிளம்பினோம். பஸ் நின்ற இடத்தில் இருந்து மலையை நோக்கி ஒருகிலோ மீட்டருக்கு நடந்தோம்.
கண்களில் விரிந்த காட்சி அற்புதம். வெய்யில் குறைந்த மாலை நேர வானம் ஒளிர பச்சை மலை பின்னணியில் உதயகிரி புத்தத்தின் எச்சங்கள்.
சின்னதாய் ஒரு புத்தனுக்கு ஒரு கோவில். வெளிப்பக்கங்களில் அழகிய சிலைகள்.
ஒரு நாள் கழிந்தது.
மறுநாள் ராஜாராணி கோவில். அற்புதமான சிலைகள். என்னிடம் நல்ல கேமிரா இருந்தும், அதை ஏன் சுமக்க வேண்டும் என்று எடுத்துக்கொண்டு போகவில்லை. அதை விட பெரிய பிரச்சனை, எதை எடுக்க எதைவிட, அவ்வளவு இருக்கிறது. கண்களால் பார்ப்பதே போதும்>
மிக மிக அழகான சிலைகள் பார்க்க,@ Tamil Heritage Trust பக்கத்துக்கு போகவும்.
அங்கிருந்து Bhaskaresvara கோவிலுக்கு போனோம். ASI கீழ் வருவதால் பிரமாண்ட புல் வெளி, பூக்கள் என்று இருந்தது. மற்றப்படி கோவிலில் என்ன பார்த்தேன் என்று நினைவில்லை.
அடுத்து Satrughneswara கோவில்.
கோவில்களை பற்றிய முழுவதுமான விவரங்கள் நான் தரவில்லை. காரணம் நான் செய்த தவறு சிலபடங்கள் எடுத்து, செல் போனில் சின்னதாய் குறிப்பு எழுதிக் கொண்டது போறவில்லை.
அடுத்த முறை இப்படி சென்றால், ப்ரிபேரேஷன் டாக் நடக்கும்பொழுதே, சின்னதாய் நோட் புக் போட்டுக்கொண்டு ஒரு பக்கம் அவர்கள் சொல்வதை எழுதிக்கொண்டு, மறுபக்கம் பார்க்கும் பொழுது நோட்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பார்க்கலாம் அடுத்த விசிட் பொழுது இன் ஷா அல்லா :-)
அடுத்து மியூசியம் பார்க்க கிளம்பும்பொழுது நான் ஷாப்பிங் செய்ய, மியூசியமை சாய்ஸ்ஸில் விட்டு விட்டேன்.
மகள் ikat ஓரிசா புகழ் கைத்தறி வாங்கி வர சொன்னாள். பொதுவாய் அவள் எதுவும் கேட்கிற டைப் இல்லை.
மிக அருமையான, அப்படி நைஸ் ஹேண்ட் லூம் மெட்டிரீயல் பார்த்ததேயில்லை. மூணு டாப்ஸ்க்கு மட்டும் துணி எடுத்தேன்.
அப்படியே பார்த்துக்கொண்டு வரும்பொழுது, பட்ட சித்ரா புடவை என்று சொல்லிக்கொண்டு இருந்ததைப் பார்த்து அப்படியே நின்று விட்டேன்.
பட்டு கட்டாத / வாங்காத பாலிசியை சீட்டிங் செய்துவிட்டு, டஸ்ஸர் சில்க் என்று சொன்னதையும் கேட்டுக்கொண்டு< பட்ட சித்ரா என்ற வார்த்தைக்கு மயங்கி வாங்கியே விட்டேன்.
தங்கியிருந்த ஹோட்டல் ரிசப்ஷனியும் அது பட்ட சித்ரா என்றாலும் இல்லைன்னு டாங்க.
போகட்டும், 'உங்களுக்கு நல்லா இருக்கும்" என்ற உத்திரவாதம் தரப்பட்டதால் மனதைத் தேற்றிக்கொண்டேன்.
லஞ்சு முடிந்து கண்டகிரி, உதயகிரி ( வேறு ஒன்று) கிளம்பினோம்.
படங்கள்
1- உதயகிரி,
2- ஊஞ்சல் ஆடும் சிறுவன் அ சிறுமி- விரல்களைப் பாருங்கள்.
3-பச்சை மலை பேக்ரவுண்டில் அழகிய கோவில்
4- ராஜா ராணி கோவில் வாசலில் "ராணி ":-)
5- பட்ட சித்ரா புடைவை
6- ராஜாராணி கோவிலில் எருமை வாகனத்தில் எமன்

ஓடிசா- ஒரு நுனிப்புல் அலசல் -7 ( சில புகைப்படங்கள்)
1- லலிதகிரியில் தலை துண்டிக்கப்பட்ட புத்தர் :-(
2- லலிதகிரியில் புத்தத்தின் மிச்சங்கள்
3- அங்கிருந்த சின்ன மியூசியம் வாசலில் செல்லக்குட்டிகளுடன்.
4- பாலை மரம்
5- மியூசியத்தில் எடுத்தேனா என்று நினைவில்லை. அழகிய வஜ்ரபாணி
6- ரத்னகிரி நுழைவாயில் , கிளிக்கி பார்க்கவும், மிக நுணுக்கமான கல்லில் கலை வண்ணம்.
7- அங்கிருந்த புத்தன். பத்தடி உயரம் இருக்கும்
8- அங்கிருந்த ஒரு சிற்பம்
9- நுழைவாயிலில் நுழைந்ததும் எதிரில் பிரமாண்ட புத்தர். சுற்றிலும் திறந்த வெளி அரங்கு. அரங்கின் பக்கங்களில் சிற்பிகளின் கை வண்ணம்
LikeShow More Reactions
Comment

ஓடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் -6
அடுத்த நாள் இரவு நல்ல தூக்கம் என்றாலும் இந்த மைக்ரேன் , சைனஸ் வலி வந்து விட்ட மறுநாள் உடம்பு மிக டல் ஆயிடும்.
தலைவலி தேவலை என்றாலும் முகம் வெளுத்து இருந்தது.
காலையுணவாய் நாலு பிரட் டோஸ்ட் , ஒரு ஐம்பது கிராம் அளவில் வெண்ணெய். கால் கிளாஸ் சூடாய் காபி. மதியம் வரை எதுவும் சாப்பிடவில்லை. வலியும் இல்லை.
இன்று முழுக்க பார்த்தது புத்த சமய இடங்களான
லலிதகிரி, ரத்னகிரி, உதய கிரி.
காலசக்கரத்தில் பின்னே பயணித்ததுப் போல ஒரு அனுபவம். புத்தன் என்றுமே என் மனம் கவர்ந்தவன். யுக புருஷன்.
லலித கிரி - ரெண்டு மணி நேரம் பஸ்ஸில் போன நினைவு. அடுத்த முறை,ஆசானைப் போல் லேப் டாப் எடுத்துப் போய் அன்றன்றே அனுபவங்களை தட்டிப் போட்டு விட வேண்டும் :-)
ஆனால் படுக்கையில் படுத்தால் அஞ்சு நிமிஷத்தில் தூக்கம் அத்தனை அலச்சல், நடை.
அங்கேயே ஒரு சின்ன மியூசியம் இருந்தது. கொஞ்சம் சிலைகள் இருந்தன.
சுவாமிநாதன் சார், அங்கிருந்த மரங்களை பற்றி நிறைய சொன்னார்.
பாலை மரம் என்று ஒரு மரத்தைக் காட்டினார். அந்த மரங்கள் அதிகம் இருந்ததால் ஒரு ஊருக்கே
பெயர் வைத்துவிட்டார்கள் பாலக்காடு என்று ;-)
வெளியே வந்தால் நாலைந்து செல்லங்கள் ஓடி வந்து சூழ்ந்துக்கொண்டன.
மதியம் அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் சாப்பாடு.
சப்பாத்தி, பொரியல், சால்ட். சூப் குடித்தேனே என்று நினைவில்லை.
தலைவலி முற்றிலும் நின்று விட்டது.
ஹோட்டலில் வாஷ் ரூம் எங்கே என்றுக் கேட்டால் இருட்டான அறை ஒன்றை காட்டினான் ஒரு ஆள்.
பாத்ரூம் ஸ்விட்சும் இல்லை.
ஹேண்ட் பேக்கை கூட வந்தவரிடம் தந்து விட்டுப் போய் விட்டு வந்தால், அவர் அங்க பாருங்க என்றார்.
பெரிய ஜன்னல், அந்த பக்கம் வரிசையாய் ஆண்களுக்கான யூரினல்கள். நல்லவேளையாய் யாருமில்லை :-)
அந்த ஆளை வாய்யான்னு அழைத்து, ஏ கியா ஹே பையா'' என்று கோவமாகவே கேட்டேன்.
விருவிருன்னு போய் கர்டனை இழுத்துவிட்டு வந்தது.
கழிவறை சுவரில் பெரிய ஜன்னல் வைப்பார்களா? அவ்வளவு பெரிய ஹோட்டலை டிசைன் செய்த மகானுபவனைப் பார்த்து தலையில் அடிச்சிக்கொள்ளணூம் என்று ஆவலாய் இருந்தது.
அடுத்து ரத்னகிரி உதயகிரி போனோம்.
ரத்னகிரி பிரமண்டமான திறந்த அரங்கு . வாசல், ஒரு பக்கமும் அழகான சிலைகள், எதிரில் பிரமாண்ட புத்தர்.
சுவாமிநாதன் சார், இங்கேயே ஒரு நாள் முழுக்க இருந்தால் எப்படி இருக்கும் என்றார்.
பெளர்ணமி இரவு முழுக்க இங்கே இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றேன்.
அப்படியே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
படங்களும் உதயகிரியும் தொடர்கின்ற

Sunday, February 05, 2017

ஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் 5
அடுத்து போனது வைத்துல்தேவுலா  கோவில். இப்பத்தானே தலைவலி ஆரம்பித்திருக்கிறது, இந்த கோவில் சிறியது என்றாலும் சிலைகள் அற்புதம்.மகிஷாமர்த்தினி சொல்ல வார்த்தையில்லை. அப்படியே சதக்குன்னு ஒரு போடு போடுகிறாள். வராகரும் அற்புதம், விரல்களை பாருங்கள்.
அவ்வளவு தான் அடுத்த 24 மணிநேரங்கள் முழுக்க பிளாக் அவுட். லிஸ்டில் இருந்து என்ன என்ன பார்த்தோம் என்று எடுத்துப் போட்டிருக்கேன்.:-)
மேடும் பள்ளமுமாய் குப்பை மெட்டில் ஏதோ பார்த்த நினைவு. கொஞ்சம் பெயின் கில்லர் புண்ணியத்தில் அடுத்துப் பார்த்தது பரசு ராமேஸ்வர் கோவி
இங்கு பூஜை நடைப் பெற்றுக்கொண்டு இருந்தது.
படு சோகத்துடன் என்ன செய்வது மேற்கொண்டு என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்.
அங்கிருந்து லஞ்சுக்கு போனோம், என்ன சாப்பிட்டேன் என்றே நினைவில்லை.
அங்கிருந்து கிளம்பி Chausathi yogini ,சித்தேஸ்வரர் , முக்தேஸ்வரர் பிரம்மேஸ்வரர் கோவில்களுக்கு போனோம், சுத்தம் ;-)
ஆனால் கடைசியாய் பார்த்த முக்தேஸ்வரர் கோவிலின் அழகில் தலைவலி குறைந்தது.
ஒன்று மட்டும் தெளிவானது, புவனேஸ்வரர் மட்டும் பார்க்க, ஒரு வாரமாவது வேண்டும், அழகழகான சிலைகள்.
கிளம்பும்பொழுது கொடுக்கப்பட்ட செல்லும் இடங்களை குறித்த கைடு , பஸ்ஸில் தந்த சின்ன லெக்சர், வாட்ஸ் அப்பில் எங்கே போகிறோம் என்ற குறிப்புகள், சம்மந்தப்பட்ட இடங்களில் தரப்படும் அருமையான லெக்சர். ஆத்மார்த்தமாய் செயல் பட்ட தமிழ் பாரம்பரிய குழுவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!
இரவு ஏதோ சாப்பிட்டு விட்டு படுத்தால்,கண்களை மூடினால் சிலை சிலையாய் ஓடியது.
அலைந்த அலைச்சலில் ஐந்தே நிமிடத்தில் நல்ல உறக்கம்
படங்கள்.
மகிஷார்சுர மர்த்தினி, வராகர், யோகினி ( ஹேர் ஸ்டைல் பாருங்க, அறுபத்தி நாலு யோகினிகள், வேற வேற ஹேர் ஸ்டைலில்), முக்தேஸ்வரர் கோவில் தோரண வாயில், உள்ளே சீலிங்

அனந்த வாசு தேவா கோவில் படங்களும், ஒரு தாளேஸ்வர் சிலையும்
ரொம்ப கொஞ்சமாய் படங்கள் தான் எடுத்தேன். எடுக்க ஆரம்பித்தால் முடிவேயில்லை.
படங்களை பார்க்க விருப்பப்படுபவர்கள் Tamil Heritage Trust பக்கத்தில் போய் பார்க்கவும்
LikeShow More Reactions
Comment

ஓடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல்- 4
26-1- 2017 இன்று தான் சரியான பயணம் ஆரம்பிக்கிறது.
எங்கெங்கு போக போகிறோம் என்ற பட்டியல் வந்து விட்டது. இன்னும் தலைவலி ஆரம்பிக்கவில்லை ;-)
முதலில் பிந்துசாகர் குளத்தைச் சுற்றி நிறைய கோவில்கள்.
முதலில் போனது தாளேஸ்வரர். சின்ன கோவில் . பூஜை இருந்தது. இருந்த சிற்பங்கள் அழகு.
அடுத்து உத்தரேஸ்வரா.இங்கு பூஜை இருப்பதுப் போல் தெரியவில்லை.
அப்படியே வெளியே வந்து புவனேஸ்வரில் இருக்கும் ஓரே பெருமாள் கோவிலான அனந்த வாசுதேவா க்கு சென்றோம்.
மிக அழகான கோவிலை எவ்வளவு முடியுமா அவ்வளவு நாஸ்தி ஆக்கிக்கொண்டு இருந்தார்கள்.
பிரகாரத்தின் ஒரு பக்கம் முழுக்க ' மகா பிரசாதம்" தயார் ஆகிக்கொண்டு இருந்தது.
சொத சொதவென்று வழி எல்லாம் தண்ணீர். கட்டைகள், ஈ மொய்க்க திறந்துக்கிடந்த தயாரான உணவு மண் பானைகள். குவியல் குவியலாய் நறுக்கி வைக்கப்பட்ட நாட்டு காய்கறிகள். காய்கறி கழிவுகள்.
அப்படியே கர்ப்பக்கிரகத்துக்கு சென்றோம்.
இந்தியாவிலேயே மகா பிரசாதம் தயாரிக்கும் இடங்கள் மூன்று ஒன்று பூரி, அடுத்து இங்கே பிறகு திருப்பதி என்றார்.
நாங்கள் தென் இந்தியாவில் இருந்து வந்ததை தெரிந்துக்கொண்டு திருப்பதியை சேர்த்துகொண்டார் என்பது என் சந்தேகம் ;-)
உயர்சாதி கீழ் சாதின்னு வித்தியாசம் கோவிலில் கடைப்பிடிக்க படுவதில்லை என்றார். நம்புகிறா மாதிரி இல்லை.
நம் ஊர் பெருமாள் அழகு இல்லை. ஆனால் மூலவரை பார்க்கும் கருடன் அழகாய் இருந்தது.
பூஜை நடக்கும் இடம் என்பதால் படம் எடுக்க அனுமதியில்லை
.
ஆனால் வெளி பிரகாரத்தில் சமையல் நடக்கும் இடத்தை கடந்து சென்றால் அற்புதமான சித்திரங்கள்.
ஆனாலும் ஒரு உன்னதமான இடத்தில் சமையல் செய்கிறேன் என்று நாஸ்தி செய்து வைத்ததை பார்த்து மனம் தாங்கவேயில்லை.
தலைவலி மெல்ல எழ ஆரம்பித்தது.

ஓடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் -3

நல்ல தூக்கம். காலையுணவுக்கு போனால் அனைவரும் சந்தோஷமாய் இட்லி , உப்புமா சாம்பார் சட்னி சூப்பர் என்றார்கள்.
தட்டில் விழுந்தவைகளை பயத்துடன் பார்த்தேன். இவைகளை காலையுணவாய் சாப்பிட்டு கனகாலம் ஆச்சேன்னு வயிறு அலறியது.
கஷ்டப்பட்டு ஒரு இட்லியையும் கொஞ்சமாய் உப்புமாவையும் உள்ளே தள்ளினேன்.
கால் டம்ளர் சக்கரை போட்ட காபி :-(
பேருந்து கிளம்பியது பசி தாங்காமல் கொடுக்கப்பட்ட முறுக்கு சீடை ஸ்வீட்டுன்னு அதையும் உள்ளே தள்ளினேன்.
சரியாய் பன்னிரெண்டு மணிவாக்கில் தலைவலிக்க ஆரம்பித்தது. கழுத்து முகம் என்று சைனஸ் தலைவலி. இந்த தலைவலி ஏறக்குறைய வாழ்வில் இருந்து விடை பெற்றுப் போனதால் மாத்திரைகளும் கொண்டு வரவில்லை.
ஒரு பெயின் கில்லர் போட்டுக்கிட்டேன், ரெண்டு மணி நேரத்தில் மீண்டும் வலி பிடுங்க ஆரம்பித்தது. வாந்தி வருவது போல பிரட்டல். மதியம் என்ன சாப்பிட்டேன் என்பதே நினைவில்லை.
வந்த நாளே யாரை என்ன கேட்பது, அப்படியே புவனேஸ்வரில் பிளேன் பிடிச்சி சென்னைக்கு ஓடிடலாமான்னு கூட யோசிக்க ஆரம்பித்தேன்.
கொஞ்சம் மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, சாப்பாட்டை எப்படி சரி செய்யலாம்ன்னு யோசித்தேன்.
மறு நாளில் இருந்து, நாலு பீஸ் பிரெட் ரோஸ்ட் வித் 50 கிராம் வெண்ணெய் , ஜாம் இல்லாமல். முடிந்தவரையில் பஸ்ஸில் தரப்பட்டவைகளை தவிர்த்தேன். நன்றாக பசி தாங்கியது.
மதியம் எல்லாருக்கும் 100 மில்லி சூப் என்றால் நான் ரெண்டு பெரிய கிளாஸ் சூப்- 400 மில்லி ;-) கடையியாய் வந்தவர்களுக்கு சூப் இல்லை என்றிருந்தால் காரணம் நான் தான் :-)
ஒரு சப்பாத்தியுடன் வெந்த பொரியல், பொரியலுக்கு சப்பாத்தி தொட்டு சாப்பிட்டேன். எண்ணை மிதக்கும் கிரேவியை தவிர்த்து விட்டேன்.
சில சமயங்களில் கொஞ்சூண்டு தயிர் சாதம், இல்லாவிட்டால் தயிர் அப்படியே சாப்பிட்டு விடுவேன்.
அதே இரவு உணவு. ஐஸ்கிரீம், ஸ்வீட்ஸ் முற்றிலும் ஒதுக்கிவிட்டேன். ஒரு நாள் மட்டும் எல்லாரும் சொன்னதால் ரசகுல்லா சாப்பிட்டேன்.
மாலை பஜ்ஜி போண்டாவும் சாப்பிடவேயில்லைன்னு சொல்ல மாட்டேன், சிலநாள் ரொம்ப கொஞ்சமாய்.
தலைவலி சைனஸ் போயே போயிந்தி. அதுக்கு பிறகு வந்த நாட்களில் என்ன வெய்யில் அலைந்தாலும் எந்த வித வலியும் இல்லை.
மொட்ட வெய்யிலில் எக்கசக்க விட்டமின் டி ஏத்துக்கிட்டு மிக உற்சாகமாய் பயணத்தை தொடர்ந்தேன்.
அன்று பார்த்தவை அடுத்த பதிவில்

ஒடிசா -ஒரு நுனிப்புல் மேய்ச்சல்- 2

அடுத்த நாள் முழுக்க ரயில் பயணம். செகண்ட் ஏசியில் போவதற்கு விமானத்திலேயே போயிருக்கலாம் என்று வீட்டில் முணு முணுப்பு வந்தாலும் என் நீண்ட ரயில் பயண மோகம் தெரிந்து பேசாமல் இருந்துவிட்டார்.
அஸ்ஸாமிலும், உ.பியிலும் இருந்தப் பொழுது கோதாவரியும் சில்கா ஏரியும் வழி நெடுக வரும் பசுமையும் , ஜன்னல் ஓர சீட்டும், காதில் இளைய ராஜா பாட்டுக்களும் மான பயணம், ஏறி உட்கார்ந்து இப்படி அப்படி அசையாமல் நாலு மணி நேர விமான பயணம் சுத்த போர் ;-)
தெலுங்கு படமான " கோதாவரி" பார்த்ததில் இருந்து கோதாவரி மீதான காதல் இன்னும் அதிகமாகிவிட்டது ;-)
கூட பயணித்த பேராசிரியர் சுவாமிநாதன் மற்றும் அவர் மனைவி, இரண்டு மகள்கள், சுவாமிநாதன் சாரை பார்த்திருந்தாலும் அறிமுகமில்லை.
ஆனால் அவர் முதல் நாள் அசோக சக்கரவர்த்தி, அவர் எழுப்பிய தூண்கள் ஆங்கில தொல் பொருள் ஆராய்ச்சியளர்கள் பற்றிய பேச்சு மிக அருமையாகவும், விஷயங்கள் நிறைந்ததாகவும் இருந்தது.
அவருடன் கொஞ்சம் தயக்கமாகவே பேச ஆரம்பித்தேன்.என்னை பற்றிக் கேட்டார். சுய பிரதாபம் லிமிட்டாய் விட்டேன்.
அவர் தன்னுடைய அண்ணா மொழிப்பெயர்ப்பாளர் சு.கிருஷ்ண மூர்த்தி என்றதும், ஆஹா என்று தயக்கம் எல்லாம் போய் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டேன்
.
அவரை பற்றி நான் முகநூலில் எழுதியதை தேடிப் பிடித்து காட்டினேன்.
அவர் மொழிப்பெயர்த்த நீலகண்ட பறவையை தேடி,, விடியுமாவும், கொல்லப்படுவதில்லை, வங்க மொழி சிறுகதைகள், இன்னும் ஒரு யாத்திரை - பெயர் மறந்துவிட்டது இவை எல்லாம் என் கலெக்‌ஷனில் இருக்கிறது.
அவரை பற்றியே பேசிக்கொண்டு இருந்தோம். இ.பாவின் குருதிபுனலை வங்காளத்தில் மொழிப் பெயர்த்து அதற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததாம்.
ஒரு மீட்டிங்கில் மறைந்த வங்க முதல்வர் ஜோதி பாசு, என்னை விட கிருஷ்ணமூர்த்தி நன்றாக பெங்காலி பேசுவார் என்று சொன்னாராம்.
சுவாரசியமான பேச்சு கச்சேரி, ஆந்திராவின் வயல்வெளிகள், பிரமாண்ட கோதாவரி, அதை விட பெரிய சில்கா ஏரி என்று கண்ணுக்கும், காதுக்கும்
விருந்துதான்.
சுமார் எட்டு மணியளவில் OTDC பஸ்ஸில் ஏறி அவர்களின் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். அதற்குள் விமான பார்ட்டிகளும் வந்து சேர ஜமா சேர்ந்தது.
நல்ல உணவு, நல்ல அறை நானும் என் ரூம் மேட் வசந்தா அவர்களும் எங்களூக்கு ஒதுக்கிய அறைக்கு போய் சேர்ந்தோம்.

Saturday, February 04, 2017





ஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல்
முன்னுரை- சென்னைக்கு வந்த இந்த அஞ்சு வருஷத்தில் ரஜினிராம்கியுடன் பேசும்பொழுதெல்லாம் தமிழ் ஹெரிடேஜ் குழுவுடன் சென்ற பயண கதையையே பேசி வெறுப்பேத்துவான் :-)
மன்னார்குடி, ஶ்ரீரங்கம், பாதாமின்னு அள்ளிவிட்டு விட்டு, கடைசியாய் அடுத்த ட்ரிப்புக்கு நீங்களும் வாங்க என்று சொன்னாலும், எங்கே :-(
இந்த முறை கட்டாயம் போகிறேன் என்று வீட்டில் அறிவித்துவிட்டேன்.
பெயர் கொடுத்தாச்சு. டிக்கெட்டுக்கு பணமும் கட்டியாச்சு
.
அப்புறம் ஆரம்பிச்சாங்கய்யா, ப்ரீபரேஷன் டாக்ன்னு நாலு மாசம் ஞாயிறு தோறும்.
அவ்வப்பொழுது எட்டிப் பார்த்துட்டு வருவேன்.
ஒரு மாதிரி புரிந்தும் புரியாமலும் கிளாஸ் போய்க்கிட்டு இருந்தது
.
என்னமோ ஜெயமோகன் ஜெயமோகன்னு ஒருநாள் சொல்லிக்கிட்டு இருந்தாங்களா, பிறகு பார்த்தால் அது ஜெக மோகன். அப்படி என்றால் கோவில் முன் மண்டபமாம்.
இப்படி தட்டு தடுமாறி மெல்ல மெல்ல சொல்லப்படுவது புரிப்பட ஆரம்பித்தது
.
மிக சுவாரசியமான உரை என்றால் அது கோபு ரங்கரத்தினம் என்பவரின் பேச்சுதான். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த பதானி சந்திர சேகர் சிங் என்கின்ற வானியல் ஆராய்ச்சியாளர் பற்றிய அறிமுகம். வெறும் கண்ணாலையே பார்த்து சம்ஸ்கிருதத்தில் பல நூல்கள் எழுதியிருக்கிறார்.இன்னும் பல சுவாரசிய விஷயங்கள் எழுத ஆரம்பித்தால் இப்ப முடியாது.
இது இப்படி போய்க்கிட்டு இருக்க, வீட்டிலும் ப்ரிபேரேஷன் டாக் போய்கிட்டு இருந்தது, எது சொன்னாலும் ஜனவரி கடைசியிலே ஓரிசா போகிறேன்னு ஒரு தடவை சொல்லிடுவேன்.
அந்த நாளும் வந்தது
ஜனவரி 24ம் தேதி ஒரு வார பயணமாய் ஒரிசாவுக்கு கிளம்பியாச்சு.
இங்கிருக்கும் படம் கடைசி நாள் கொனாரக்கில் எடுத்தது

Saturday, July 02, 2016

பேலியோ பேலீயோ சொக்க வைக்கும் பேலியோ- கல்கி சிறுகதை

 தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்த பைகளை ஓரமாய் வைத்துவிட்டு பெருமூச்சு விட்டு உட்கார்ந்த கணவனை பார்த்த ஏகாம்பரி ஓடி சென்று பைகளை ஆராய்ந்தாள் ,

அத்தனையும் பழங்கள் காய்கறிகள், இன்னும் ஒரு பையில் பார்த்தால் பாதாம் பிஸ்தா என்று கிலோகணக்கில் இருந்ததைப் பார்த்து , எப்படியும் ஐந்தாயிரம் ஆயிருக்கும் என்ற மன கணக்கு சொல்ல, என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு என்று லேசான பயத்துடன் பார்த்தாள்.

 கொஞ்சம் ஸ்தூல சரீரம் என்பதால் வேர்த்து வழிய, தண்ணீர் வேண்டும் என்று ஜாடை காட்ட, ஓடி சென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து தந்தாள்.

 பேலியோவுக்கு  மாறப்போகிறேன் என்றதும், போலீயோவா சந்தேகத்துடன் கணவனின் காலைப் பார்த்தாள்.

போலீயோ இல்லை. இது பேலியோ ஒரு வகையான டயட். நிறைய காய்கறிங்க, நட்ஸ் எல்லாம் சாப்பிட்டா வெயிட் குறையும் என்று இதை படி என்று கணிணியை எடுத்து காட்டினார்.

 நாம சுத்த சைவம். அதனால சைவ பேலீயோ, பாதாம் பிஸ்தா, காய்கறி, வெண்ணெய், நெய், சீஸ், பன்னீர், சில பழங்க சாப்பிட்டா உடம்பு இளைக்கும், நா டிரை பண்ணலாம்ன்னு இருக்கேன்

, அதுக்குத்தான் இதெல்லாம் வாங்கிட்டு வந்தேன்.. பாதாம ஒரு நாள் முழுக்க ஊறவிட்டு, நாலு வாட்டி கழுவி, நெய்ல வறுத்து வெச்சிடு, அதுதான் பிரேக்பாஸ்ட், மத்தியானம் காலி பிளவரை சின்னதா நறுக்கி ஸ்ட்டீம்ல வேக வெச்சா ரைஸ்க்கு பதில் , எல்லா காயும் போட்டு நெய்விட்டு பிரை பண்ணிடு. நைட்டு பன்னீர் டிக்கா.

இன்னும் நிறைய ரெசீபீஸ் இருக்கு, மாத்தி மாத்தி செஞ்சா எனக்கும் போர் அடிக்காமல் இருக்குமில்லே?” ஆர்வத்துடன் கேட்ட கணவனை யோசனையுடன் பார்த்த ஏகாம்பரி,

 எப்படியோ வெயிட்டு குறைஞ்சா சரி என்றவாறு எல்லாம் காய்கறி , பழங்களை பிரித்து வைத்து ப்ரீஜ்ஜில் வைத்து விட்டு, நட்ஸ்களை பாதுக்காப்பாய் எடுத்து வைத்துவிட்டு, நிமிர்ந்தவளுக்கு லேசாய் முதுகு வலித்தது.

 ராத்திரி இட்லி தோசை எல்லாம் வேண்டாம், காய்கறி பன்னீர் ப்ரை பண்ணி கொடு என்றார்.

 கலர் கலராய் குடை மிளகாய், கேரட், முள்ளங்கி, காலிபிளவர் என்று வகைவகையாய் நறுக்கி, நெய்யில் வதக்கி பன்னீரும் சேர்த்து கொடுக்கும்பொழுது, நாலு இட்லியோ ரெண்டு தோசை சட்னின்னா வேலை எப்பொழுதோ முடிந்திருக்கும் என்று ஏகாம்பரியின் மனம் அலுத்துக்கொண்டது.

 அரை கிலோ பாதாம்பருப்பை ஊற வைத்துவிட்டு படுத்தவள் எப்படியோ உடம்பு குறைந்தால் சரி என்று அலுத்துக்கொண்ட உடம்பையும் மனதையும் சமாதானப்படுத்தினாள். .

நூறு பாதாமை எண்ணி கிண்ணத்தில் போட்டு கணவனை சாப்பிட சொல்லிவிட்டு, கல்லூரியில் படிக்கும் மகனுக்கு மகளுக்கு தோசை சட்னி மதிய சாப்பாடு பேக்கிங், மாமியாருக்கு ஓட்ஸ் கஞ்சி என்று பரபபரப்பாய் இருக்கும் காலை வேளை.

அய்யயோ குறையுது என்ற அலறலைக் கேட்டு என்ன ஆச்சு என்று எல்லாரும் ஓடி வந்தனர். நூறு பாதாம் இல்லை குறையுது என்ற தந்தையைப் பார்த்து, நா நாலே நாலுதான் எடுத்தேன் என்றனர்

மகனும் மகளும்! நானும் ரெண்டே ரெண்டுதான் என்றார் மாமியார்.

எண்ணிப் பார்த்தால் அறுபத்தி ஆறு இருந்தது. அந்த ஆறை கொடுங்கள் என்று வாங்கி வாயில் போட்டுக் கொண்டாள் ஏகாம்பரி.

 அழைப்பு மணி அடித்தது.

 மேடம் நாங்க ஆர். ஆர். பழமுதிர் நிலையத்துல இருந்து வரேன். பிரான்சைஸஸ் எடுத்து நடத்த உங்களுக்கு விருப்பமா, , எனக்கு கால் பண்ணிங்க” விசிட்டிங் கார்ட் கொடுத்துவிட்டு சென்ற ஆளை பார்த்துக் கொண்டு இருக்கும்பொழுதே போன் அடித்தது. ‘” நாங்க நட்ஸ் அண்டு நட்ஸ்ல இருந்து கால் பண்ணுகிறோம், இந்த மாசம் இன்னும் மூணாயிரத்துக்கு நட்ஸ் வாங்கினா, ஐநூறு ரூபாய்க்கு கிப்ட் கூப்பன் கிடைக்கும்” அழகாய் பேசியது ஒரு குரல்.

யாரும் எதிவும் பேசவில்லை.

 நாலு நாட்கள் பெண்டு நிமிர்ந்தாலும் கணவன் ரெண்டு கிலோ குறைந்திருக்கு என்ற நல்ல செய்தியைக் கேட்டதும் மிக சந்தோஷமாய் இரவு உணவுக்கு காய்கறி நறுக்க ஆரம்பித்தாள்
ஏகாம்பரி.

 “என்ன விசேஷம், நாளைக்கு அவியலா” என்றுக் கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்த நாத்தனாரையும் அவள் கணவரையும் வரவேற்று பேலியோ மகிமைகளை எடுத்து சொல்ல ஆரம்பித்தனர்.

 “ஓண்ணு செய்யி, இன்னைக்கு டின்னருக்கு எங்களுக்கும் இதையே பண்ணிடு. உடம்பு ஏறிக்கிட்டே போகுது, நானும் என்ன என்னவோ செஞ்சிப் பார்த்துட்டேன்’ பெருமூச்சு விட்டவள், நாழி ஆச்சு, குல தெய்வம் போடு, நாங்க சாப்பிட்டுட்டு, வம்சம் பார்த்துவிட்டு கிளம்புகிறோம்” என்றாள் நாத்தனார்.

 நல்லவேளை காலை டிபனுக்கு வந்திருந்தாலும் பாதாமும் பிஸ்தாவும் போயிருக்கும் என்று தன்னை தானே சமாளித்துக்கொண்டு அவர்களுக்கு சேர்த்து காய்கறிகளை நறுக்கினாள், நறுக்கினாள், .............நறுக்கிக்கொண்டே இருந்தாள்.

வம்சம் முடிந்து சமையலறையை எட்டிப் பார்த்த நாத்தனாருக்கும் அவள் கணவருக்கும், தன் கணவருக்கும் பரிமாறிக்கொண்டே, இருந்த மாவில் தனக்கு நாலு இட்லியை குக்கரில் வைத்தாள்.

 சாப்பிட்டு முடித்துவிட்டு இட்லியா, வெறும் காய்கறி சாப்பிட்டா மாதிரியே இல்லை, ரெண்டு வெய்யி என்ற நாத்தனாருக்கு,ம் ஆமாம் போட்ட அவள் கணவருக்கும் இட்லியை தாரை வார்த்துவிட்டு, மதியம் மிஞ்சி இருந்த ஒரு கரண்டி சாதத்தில் ரெண்டு கிளாஸ் மோர் ஊற்றி கலந்து குடித்தாள் கண் கலங்க.

 அவர்கள் கிளம்பியதும், “ இதோ பாருங்க இனி மேலே யாராவது சாப்பிடும்போது வந்தா அவங்களுக்கும் இட்லி, தோசை தான். உங்களுக்கும் அதே. இல்லாட்டி இன்னைக்கு விரதம்ன்னு பேசாம இருந்துடுங்க, மூணு பேருக்கு மூணு கிலோ காய்கறி. என்னால முடியாதுபா” ஏகாம்பரியின் குரல் தீர்மானமாய் ஒலித்தது.

 அஞ்சு கிலோ குறைச்சிட்டேன், இன்னைக்கு மட்டும் பூரி கிழங்கு சாப்பிடுகிறேன். ஓரே ஒரு அல்வா, நாலே நாலு காரா பூந்தி என்று அவ்வப்பொழுது பேலீயோ விரதம் மீறப்பட்டாலும், ஏகாம்பரி விடாமல் கணவனின் டயட்டுக்கு போராடிக்கொண்டு இருந்தாள்.

 அன்று சொந்தத்தில் ஒரு கல்யாணம். ட்ரீம்மாய் வந்து நின்ற கணவனைப் பார்த்து இன்னைக்கு எத்தனை பேர் கேட்ட போறாங்க பாருங்க என்று பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டே கிளம்பினாள்.

 உள்ளே நுழையும்பொழுதே வாசலில் சொந்த பந்த கூட்டம் ஆரவாரத்துடன் வரவேற்றது.

 என்ன ஆச்சு உடம்பு கிடம்பு சரியில்லையா, இப்படி இளைச்சிட்டே, சித்தி கேட்க, டெல்லி பெரியம்மா பெண் , வாவ் என்ன டயட், ரெண்டு மாசம் முன்ன பார்த்ததுக்கும் இப்ப சிக் க்குன்னு அழகா ஆயிட்டியே என்று ஆச்சரியப்பட, தன்னை சூழ்ந்துக்கொண்டு சொந்த பந்தங்கள் கேட்பது கேட்டு, லேசாய் மயக்கம் வருவதுப் போல இருந்தது, ஏகாம்பரிக்கு! **********************

 கல்கி 10 ஜூலை 2016