Thursday, June 14, 2007

சினிமா டிரெயிலர்கள் சொல்லும் வாழ்க்கை தத்துவங்கள்

சின்ன வயசில் நான் பார்த்த திரையரங்குகளில் மெயின் படம் போடுவதற்கு முன்பு "விரைவில் எதிர்பாருங்கள், வருகிறது" என்ற பில்டப்புகளுடன் துண்டு காட்சிகள் போடுவார்கள். ஐந்து நிமிடத்தில் காட்சிகள் சட் சட் என்று மாறும். நன்றாக விறுவிறுப்பாய் இருக்கும். ஆஹா, என்ன அருமையான படம் என்று அனைவரையும் நினைக்க வைக்கும் அளவிற்கு பாராட்டும் மனதை ஓரிஜினல் படத்தைப் பார்த்ததும், சில சமயங்களில் டிரெயிலரில் பார்த்த படமா என்று குழப்பத்தையே உண்டு பண்ணிவிடும். அவ்வளவு திராபையாய் இருக்கும். என்னத்தான் சொல்லுங்கள், இப்படி சூப்பராய் டிரெயிலர் எடுப்பதுக்கும் திறமை வேண்டும்.

பிறகு விசிஆர், டிவிடி ப்ளேயர் என வீட்டிக்கு வந்ததும் வாங்கும் ஓரிஜனல் கேசட், டிவிடியிலும், பெரும்பாலும் ஆங்கில படங்களில் வரப் போகும் படங்களின் டிரெயிலர் கட்டாயம் இருக்கும், ஏதோ ஒன்றிரண்டை எழுதி வைத்துக் கொண்டு, பிறகு தேடி பிடித்து நொந்துப் போனதும் உண்டு. இந்த "டிரெயிலரைக் கண்டு ஏமாறாதே "என்ற தத்துவம் அனைவருக்கும் தெரிந்தது என்றாலும், தெரிந்தே ஏமாந்துதான் போகிறோம்.

வாழ்க்கையும், மெயின் பிக்சர், டிரெயிலர் மாதிரிதான் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. நம் பாபாவும் அதைதானே சொன்னார்.

காதலிக்கும் போது அல்லது கல்யாணம் நிச்சயம் ஆன அந்த சில நாட்களில், வாரங்களில் வருடங்களில் வாழ்க்கை எவ்வளவு அழகாய், விறுவிறுப்பாய், அற்புதமாய், சுவாரசியமாய் இருந்தது. ஆனால் கல்யாணம் ஆனதும்???? டிரெயிலரில் பார்க்கும் அதே காட்சிகள், அதே
நடிக நடிகைகள், ஆனால் மெயில் பிக்சர் ஏன் சுவையாய் இல்லை? வாழ்க்கையும் அப்படிதானே, நாம் மாய்ந்து மாய்ந்து காதலித்த ஆளா இது என்று நொந்துப் போவது ஏன்?

காதலிக்கும்போது கிடைத்த துணையை நினைத்து, நாம் அல்லவா மேட் பார் ஈச் அதர் ஜோடி, அன்பு என்றால் இதெல்லவா அன்பு, ஒவ்வொரு வார்த்தையிலும் பொங்கி வழியும் காதல், ஏழேழு ஜன்மங்களுக்கும் தொடரும் பந்தம் என்றெல்லாம் நினைத்து நினைத்து பூரித்துப் போகும் வாழ்க்கை, மெயின் பிக்சர் அதாவது கல்யாண வாழ்க்கை தொடங்கியதும் பல் இளித்துப் போகிறது.

டிரெயிலரை, அதாவது காதல் வசப்படும் நாட்களில் வீசும் வசந்தம், வாழ்க்கை முழுவதும் தொடரும் என்று நினைத்து யாரும் ஏமாந்துவிடாதீர்கள்.

நாங்கள் அப்படி எல்லாம் இல்லை, காதலிக்கும்போது இருந்த அதே மனோபாவத்துடம் வருடம் பல கடந்தும் வாழ்கிறோம் என்று நீங்கள் சொன்னால், எங்கோயோ சில படங்கள்- டிரெயிலர் போலவோ அல்லது டிரெய்லரை விடவும் வாழ்க்கையும் சுவையாய் அமைந்துவிடுகிறது என்று ஒத்துக் கொள்கிறேன்.

24 பின்னூட்டங்கள்:

At Thursday, 14 June, 2007, சொல்வது...

வாழ்க்கைத் தத்துவத்தை கன்னா பின்னான்னு பிழியுறீங்களே :)

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

நமக்கு எதுவொன்னும் சொந்தமாகாத வரையில் அதுக்காக நாயா பேயா அலையவும் தயாரா இருக்கறவங்க கூட அது நமக்கே நமக்குன்னு ஆனதுக்கப்புறம் பெருசா அலட்டிக்கறதில்லை. அதே காரணம்தான் இங்கேயும்னு நினைக்கிறேன்.

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

It this post related to SHIVAJI the Boss ????

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

வாழ்க்கைத் தத்துவத்தை கன்னா பின்னான்னு பிழியுறீங்களே பிழியுறீங்களே பிழியுறீங்களே

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

ரவிசங்கர், வெங்கட்ராமன், வாழ்க்கையே ஒரு தத்துவம் தாங்க :-)

மனதின் ஓசை, ஃபுரோபல் படத்தைப் பார்த்தா பயமா இருக்கு- நோ ஸ்மைலி

லஷ்மீ, என்ன தத்துவம் என்ன தத்துவம், பிச்சி ஒதறிட்டீங்க
போங்க :-)

இம்சை, இது டூ மச், நா என்னவோ யதார்த்தமா பதிவைப் போட்டா, அதுக்கு இப்படி உள் குத்து கண்டுப்பிடிச்சா எப்படி?
நீங்க சொன்னத்தக்கேட்டு, சிறில் வேற சிவாஜி வாயிலே ஜிலேபி ல கோத்துவிட்டுட போறாரூ :-))))))

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

உஷா
ட்ரெயிலரே இல்லாம வாழ்க்கை ஆரம்பிச்சவங்கள பத்தி ஒன்னுமே கானோமே. என் தனிமடல் வந்ததா?

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

சொந்தம் பந்தம் பாசம் எல்லாமே ட்ரெய்லர் தாம்பா..ரேஞ்சிலேயெ நின்னுட்டா....வாழ்க்கை எப்படி ருசிக்கும் உஷா.
மெயின் ஃபில்ம் மாதிரியே சிக்கலான பல கட்டங்கள் இருந்தாலே சுவை.என்ன கடைசி கட்டத்துக்கு வரும்போது என்னைப் போல தத்துவம் பேசலாம்:-)))))

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

பத்மா, புரியுதுமா புரியுது. டிரெயிலரின் பில்டப்புகள் இல்லாத சாதாரண வாழ்க்கை / படங்கள் ஓடிக் கொண்டு இருக்கும்.

வல்லிம்மா, என்னமோ போங்க, இது வெறும் கேள்விதான் டிரெயிலரில் இருக்கும் சுவை ஏன் மெயில் படங்களில் இல்லை
என்று மட்டுமே, ஆனா ஒன்னு ஏதோ இருக்கும் என்று நம்பிதானே மெயின் பிக்சருக்குப் போகிறோம் ?????

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

சரியான உண்மை.. அனுபவமாக கூட இருக்குமோ!!!

டிரெய்லர் போல வாழ்க்கை எந்த நாளும் விறுவிறுப்பாக இருந்தால் மனச்சுமை (Stress) வந்து விடும். வாழ்கையிலும் சுக ராகம், சோக ராகம் ரெண்டும் Balanced ஆக தேவை... Just a thought :)

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

ஓடும் எல்லாமே ட்ரைலரா ..நல்ல ஓப்பீடு..:)

திரைபடம் நன்றாக ஒட வேன்டும் என்ற எண்ணத்தில் திரை இடப்படுவது தானே ட்ரைலர்.அதே போல், வாழ்க்கை இப்படி தான் இனிக்கப் போகிறது என்பதற்க்கு அச்சாரமாக தான் கல்யாணத்திற்க்கு முன்பு , ஒருவரை ஒருவர் ஈர்க்க பின்னப்படும் பல விதமான நிகழ்வுகளும்.

எப்போது படத்தை ஒரு முறைப் பார்தால் த்ரில் போய் விடுகிறதோ.. அதே போல் தான், கல்யாணம் ஆனதும் த்ரில் போய் விடுகிறது. அதே த்ரில் தொடர வேண்டும் என்று நினைத்தால், அது த்ரில்லே இல்லை. எப்போவாது ஒரு முறை வந்தால் தான் அது த்ரில்.எப்பவும் அது இருக்குன்னு சொன்னா அது ரீல் :)

அதற்காக கல்யாணத்திற்கு பின் வாழ்க்கை கசந்து போகிறது என்று நான் கூறவில்லை. முழு மனதோடு ஏற்றுக் கொண்டு திருமண வாழ்வில நம் பங்கை சீராக அளித்தாலே, தொய்வு இல்லாமல், ட்ரைலரை போல் இல்லாவிட்டாலும், அப்பப்போ வரும், பளிச்சிடும் வெண்மைக்கு ரீகல் சொட்டு நீலம் விளம்பரம் கணக்கா, பளீர் என்று வாழ்கையை ஓட்ட முடியும். டிங் டிங் டி டிங் !!

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

ஏங்க அந்த மெயின் பிக்சர் அ எடிட் பண்ணாம ,சென்சார் பண்ணாம, பின்னனி இசை இல்லாம, டப்பிங் இல்லாம பார்த்து இருக்கிங்களா? பார்த்தா அப்புறம் இப்படிலாம் பதிவு போட மாட்டிங்க :-))

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

செளமியா, டிரெயிலரைப் பார்த்து ஏமாந்துவிடாதே என்பதே நான் சொல்ல வந்தது. மத்தப்படி ஆள் ஆளுக்கு தத்துவாமா
பொழியிரீங்க :-)))

வவ்வால், பிபட்டியன்! பொதுவா அட்வைஸ் என்பதன் தாத்பரியம், நா ஏமாந்தா மாதிரி நீயும் ஏமாந்துவிடாதே என்பதே! ஆனா
யாரூ கேட்கிறாங்க :-)))

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

உஷா.............. என்னப்பா இந்தியா வெய்யில் இப்படி எல்லாம் கூட
சிந்திக்க வச்சுருச்சா? :-)))))

ட்ரெய்லரும் திராபையா இருந்தா படம் எப்படி ஓடும்?

கவர்ச்சி காட்ட ட்ரெயிலரும், கவுச்சி காட்ட மெயின் பிக்சரும்னு
வச்சுக்க வேண்டியதுதான்.


ட்ரெயிலர் அவுங்கவுங்க வீட்டுலே இருந்துக்கிட்டே அனுபவிக்கலாம்.
ஆனா வாழ்க்கை?

'வாழ்க்கை'யில் மெயின் பிக்சருக்கு பொறுப்பு கூடுதல்:-)


பத்மா,

எல்லாப் படங்களுக்கும் ட்ரெயிலர் வர்றது இல்லையாக்கும்:-)

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

//

நா ஏமாந்தா மாதிரி நீயும் ஏமாந்துவிடாதே என்பதே! ஆனா
யாரூ கேட்கிறாங்க :-)))
//


Very correct.

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

ஆமாங்க. ட்ரெயிலரை நம்பி ஏமாறக் கூடாது. நிறைய தடவை அது நம்மளை நம்ப வெச்சு கழுத்தறுத்துடும். அது வேகமா போகிற மாதிரி இருக்கும், ஆனாப் போகாது. நிறைய திருப்பங்கள் கொண்ட மாதிரி இருக்கும் ஆனா திரும்பாது. இந்த மாதிரி சொல்லிக்கிட்டே போகலாங்க.

அதனாலதான் நம்ம புதுசா கத்துக்கிற போது கூட ட்ரெயிலரைப் பார்த்து ஏமாறாதே. அதை இழுத்துக்கிட்டு முன்னாடி போற வண்டியை பார்த்து ஓட்டு, அந்த வண்டி திரும்புறதையும் அது போகிற வேகத்தையும் கணக்கில் எடுத்துக்கிட்டு நீ உன் வண்டியை ஓட்டு அப்படின்னு எங்க ட்ரைவிங் ஸ்கூல் வாத்தியார் சொல்லிக்குடுத்தது இன்னிக்கும் எனக்கு ஞாபகம் இருக்குங்க.

நன்றி வணக்கமுங்க.

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

துளசி, ரொம்ப தப்பு. டிரெயிலர் திராபையாய் இருந்ததாய் சரித்திரமே கிடையாது :-))))

உண்மை, ஏதோ நீங்களாவது ஒத்துக்கிட்டீங்களே

இலவசம், உம்மை போல எத்தினி பேர்கள் டிரெயிலரைக் கண்டு மிரண்டுப்
போயிருக்கிறார்களோ :-))))))))))))))))

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

இலவசம் சொல்ற பாயிண்ட் நூத்துக்கு நூறு உண்மை! முன்னாடி போற வண்டியின் அதே பாதையில் ட்ரெயிலர் ஓடவே ஓடாது. கொஞ்சம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம்தான் ஓடும். நேராப்போறவரைக்கும் ஓக்கே! திருப்பணும்னு நினைச்சா பாதை மாறும். வேகமா மாத்த நினைச்சா கவிழவே சான்ஸ் இருக்கு. இதை ஆர்ட்டிகுலேஷன் எபக்ட் னு சொல்லுவாங்க!

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

சுரேசு,
ஒத்துக்கிறேன். ஆனா பின்னாடி கோத்துவிட்டு இருக்காங்களே என்ற பொறுப்பு ஸ்டியரிங் பிடித்து டிரெயிலர் ஓட்டுறவங்க உணர்ந்து பொறுப்பா ஓட்டணும்.
பி.கு கடவுளே, மேட்டர் வேற திசையில பயணிக்குதே!!!!!

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

உஷா,இந்தப் பதிவு ட்ரெயிலரா,ட்ட்ரையிலரா.

பதிவுக்கான ட்ரெயிலரா
வாழ்க்கைக்கான டிரெயிலரா
வண்டிக்கான டிரெயிலரா
எதைப் பற்றினு கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா.:-)))
இப்படிக்கு,
திசை மாற்றப்பட்டப் பதிவர்.:(((

 
At Friday, 15 June, 2007, சொல்வது...

//ஆனா பின்னாடி கோத்துவிட்டு இருக்காங்களே என்ற பொறுப்பு ஸ்டியரிங் பிடித்து டிரெயிலர் ஓட்டுறவங்க உணர்ந்து பொறுப்பா ஓட்டணும். //

அட என்னங்க பொறுப்பு இல்லாம பேசறீங்க. ட்ரெயிலரை யாரும் ஓட்டமாட்டாங்க.

(பின்ன மெயின் படத்தைத்தான் மார்னிங் ஷோவா ஓட்டுவாங்களான்னு விதண்டாவாதம் பண்ணக்கூடாது!)

 
At Friday, 15 June, 2007, சொல்வது...

வல்லிமா, தலைவர் சொல்லியிருக்காரூ "மனுஷன் நினைக்கிறான், ஆண்டவன் முடிக்கிறான்" என்று. நான் என்னவோ
நினைத்து எழுத இலவசம் வேறு பாதையில் இழுக்க, அதுக்கு பினாத்தலார் ஒத்து ஊத, ஓரே கன்பூஷனா போயிடுச்சு.
இந்த அழகுல விதண்டாவாதம் வேண்டாம் என்று எனக்கு அட்வைஸ் :-)
இலவசம், டிரெயிலர் தானே ஓடாது,- திருத்தியதற்கு நன்னி

 
At Tuesday, 19 June, 2007, சொல்வது...

உங்களை எட்டு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன். மேல் விபரங்களுக்கு இங்கு வந்து பார்க்கவும்.

 
At Wednesday, 27 June, 2007, சொல்வது...

வணக்கம்
உங்களது இந்தப் பதிவு இந்த வார பூங்கா இதழுக்கான தமிழ்மண வாசிப்பில் என்னை கவர்ந்த பதிவுகளில் ஒன்றாக தெரிவுசெய்துள்ளேன்.
பாராட்டுக்களுடன் மேலும் எழுத வாழ்த்துக்கள்.

 
At Wednesday, 27 June, 2007, சொல்வது...

அன்புள்ள சுரதா,
மனமார்ந்த நன்றிகள்.
இப்படிக்கு தாங்கள் உருவாக்கிய பொங்கு தமிழை நாளும் (இலவசமாய்)பாவிக்கும் ,
உஷா

 

Post a Comment

<< இல்லம்