Tuesday, October 16, 2007

நானே நட்சத்திரம் ஆனேனே...

கிரீச் என்ற சத்தம் கேட்டு, காலை காபியுடன், ஜெயா டீவியில் பக்தியுடன் பெருமாளை தரிசித்துக் கொண்டிருந்த எழுத்தாளினி ஏகாம்பரியின் கணவர், என்னவோ ஏதோ என்று விழுந்தடித்துக் கொண்டு உள்ளே ஓடினார்.

"குட் நியூஸ்.. ஐயோ! எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலையே" என்று எழுத்தாளினி சொன்னதும், என்ன ஏதாவது பரிசு கிடச்சிருக்கா? எவ்வளவு?" என்று ஆவலுடன் கேட்டார்.

"நா நட்சத்திரம் ஆயிட்டேன். ஐயோ எவ்வளவு நாளா ஏங்கிக்கிட்டு இருந்தேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச மூணே மாசத்துல என்ன என்ன போடணும்னு எங்கோ டைப் செஞ்சி வெச்சிருந்தேனே? பைல் பேரூ நினைவில்லையே?'' அந்தம்மாள் சொல்வதை அறைகுறையாய் புரிந்துக் கொண்டு, "நட்சத்திரமா? ஸ்டாரா? என்ன சினிமாலையா சான்ஸ் கிடச்சிருக்கு?" குரலில் தென்பட்ட பயம், எழுத்தாளியின் மண்டையில் ஏறவில்லை.

" உங்களுக்கு எல்லாம் ஆதில இருந்து சொன்னாத்தான் விளங்கும். நான் ஸ்டாருங்க, ஒரு வாரத்துக்கு. தினமும் பதிவு போடணும். இப்ப எல்லாம் தமிழ் வலைப்பதிவுகள் பத்தி ஆனந்தவிகடனில் கூட எடுத்துப் போடுராங்க. இன்னும் ரெண்டே வாரம், இருக்கு, அடுத்த மாசம் முதல் வாரம் முழுக்க எனக்கு ஒதுக்கியிருக்காங்க"

அவ்வளவுதானே என்றுச் சொல்லாமல், முகபாவனையில் காட்டிவிட்டு, அறையை விட்டு வெளியே காலை வைக்கும்பொழுது, "நீங்க பிள்ளைகளை ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பிடுங்க. கெய்சர் போட்டுட்டேன். கொஞ்சம் யூனிபார்ம் மட்டும் அயர்ன் செஞ்சிடுங்க. கார்ன்பிளேக்ஸ் அலமாரில இருக்கு" என்று மடமடவென்று உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, "ஹாங்... சொல்ல மறந்துவிட்டேனே, இன்னைக்கு அரை நாள் ஆபிஸ்க்கு லீவ் சொல்லிடுங்க. உங்க ஹெல்ப் எனக்கு தேவை" என்றாள் ஏகாம்பரி.

பழைய பைல்களை தேடினால் ஒன்றும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. அதற்குள் கணவர், "பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போயாச்சு. எனக்கு இன்னைக்கு பத்துமணிக்கு மீட்டிங் இருக்கு" என்று ஆரம்பிக்க, "உங்க ஆபிஸ் டேபிளுக்கு இன்னொரு ஆளு வந்துப் பேசினா, அது உங்களுக்கு மீட்டிங்க. மொதல்ல இந்த நோட்ட பிடிங்க, இந்தாங்க பேனா! நா சொல்ல சொல்ல எளுதுங்க, சும்மா நடுவுல நடுவுல வளவளான்னு பேசக்கூடாது" என்றவள் " முன்ன எழுதி வெச்சது காணோம். இப்ப டிரெண்டும் மாறிடுச்சு. சும்மா நூத்து கணக்குல கமெண்டு அள்ளுராங்க. சில பேரூ ஆயிரத்தக்கூட தாண்டிட்டாங்க... என்றுச் சொல்லும்போதே, ஏதோ யோசனையில் முகம் ஆழ்ந்தது.

"ஹைலைட் செஞ்சி ஒண்ணு ஒண்ணா எழுதுங்க.. நம்பர் ஓன் இன்றிலிருந்து தினமும் எல்லாருக்கும் பின்னுட்டம் போடணும்"

கணவர் முழிப்பதைப் பார்த்து, " தமிழ்ல பின்னுட்டம்ன்னா கமெண்டுன்னு அர்த்தம்... அதிலும் புதுசா வந்தவங்களுக்கு கொஞ்சம் தாராளமாய் போட்டால், நன்றி மறக்க மாட்டாங்க. பின்னுட்டம் சரியா வரலைன்னா, மானக்கேடா இருக்கும்"

"உனக்குதான் சுஜாதாவோட ரைட்டிங்ஸ் ரொம்ப பிடிக்குமே.. அவரைப் பற்றி எழுதேன்"

" சுஜாதாவா? அவர பத்தி எளுதணுமான்னு யோசிக்கிறேன். முன்ன எழுதி வெச்சிருந்தேன்னு சொன்னேனே, அதுல சுஜாதா சிறுக்கதை தொகுப்பு பற்றி இருந்துச்சு. ஆனா இன்னைக்கு டிரெண்டுல அவர பத்தி எழுதணும்னா.. ஆங்... பார்பனீய சுஜாதாவின் பேனாவில் பீறிடும் அக்ரஹாரத்து மை ந்னு எழுதினாத்தான் வொர்க் அவுட் ஆகும். நீங்க எளுதிட்டீங்களா?"

"எங்கே இன்னொருக்கா சொல்லு" என்றதும், ஏகாம்பரி மீண்டும் சொன்னாள்.

"அது என்ன அக்ரஹாரத்து மை?"

"நான் தான் மொதல்லேயே சொன்னேனே, குறுக்க குறுக்க கேள்விக் கேட்க கூடாதுன்னு... என்றவள், "அட மறந்தே போயிட்டேனே, மொதல் இடுகை, தன்னடக்கத்துடன் பணிவான வணக்கம். கடைசி இடுகை நன்றி நவிதல்"

"இடுகைன்னா...

"அதுதாங்க போஸ்ட்"

"ரெண்டு மூணு கவிதைகள் இருக்கு, பின்னிரவில் முயங்கும் பூனைகளின் எச்சங்கள், மரணத்தவன் கை எழுதுகோல் சித்திரங்கள் .. அப்புறம்"

"பூனையா? காக்கா, குருவி போடுவதைத் தான் எச்சம்னு தமிழ்ல சொல்லுவாங்க"

"ஐயா சாமி! இது நவீன இலக்கியம், பூனை, எப்பவாவது நாய் ஆகிய ரெண்டே விலங்குகள் மட்டுமே கவிதையில வரும். மரணம், சாவு, தற்கொலை, இரவு, நிழல், மேல் தட்டு வர்க்க பார்வையில் கெட்ட வார்த்தைகளாய் சொல்லப்படும் சில சொற்கள்... இதெல்லாம் நவீன இலக்கியத்தின் இலக்கணங்கள். இதை மீறி யாராலும் நவீன கவிதையோ அல்லது கட்டுரையோ எழுதிட முடியாது.

மானசீகமாய் தலையை அடித்துக் கொண்டு, நவீன கவிதை என்றுக் குறித்துக் கொண்டார்.

"அடுத்து, தமிழ் ஈழம், பெரியார் பற்றி! ரெண்டையும் கூகுளில் தேடிக்கலாம்"

ஸ்ரீலங்கா மேட்டர் எல்லாம் உனக்கு என்ன தெரியும்? பெரியாரா? உனக்கும் பெரியாருக்கும் என்ன சம்மந்தம்? போன வெள்ளிக்கிழமைகூட விளக்கு பூஜை செஞ்சே? எனக்கு மூவாயிரம் செலவு"

சில விஷயங்கள் இப்படிதான்னு இருக்கு. சும்மா லொட்ட கேள்வி கேட்காம சொல்லரத நோட் பண்ணிக்குங்க. பதிவு போடரது, அதுவும் நட்சத்திர பதிவு போடரதுன்னா சும்மாவா? எல்லாம் ஹாட் டாபிக்கா இருந்தா, இந்த வார ஆவில வரக்கூட சான்ஸ் இருக்கு. என்னத்தான் பதிவு எளுதினாலும், விகடன்ல கதை கிதை வந்தா ஒரு கெத்துதான்.

சரி சரி! இப்ப ஆறு மேட்டர் ஆச்சு. வணக்கம், நன்றி, நவீன கவிதை, அக்ரஹாரத்து சுஜாதா, பெரியார், ஸ்ரீலங்கா.. அப்புறம்.

"இன்றைக்கும் பெண்" ன்னு பெண்ணீய சிந்தனை மேட்டர் ஒண்ணு இருக்கு. எப்படியும் நாலு பேரூ வந்து, நம்ம எடத்துல அடிச்சிக்குவாங்க. நாம வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கலாம். ஏழு ஆச்சா? வட்டார வழக்கில் ஒரு கதை இல்லாட்டி ஏதாவது சமூக சிந்தனையை வெளிப்படுத்தும் நுண்ணரசியல் கட்டுரையும் போட்டுட்டா ஆச்சு.

அது என்ன நுண்....

நானும் இப்பதாங்க கத்துக்கிட்ட வார்த்தை இது. சேது சமுத்திர திட்டத்தில் நுண்ணரசியல் நடத்தும் நடுவண் அரசுன்னு கூகுள்ல தேடிப் பிடிச்சிடலாம். அட சொல்ல மறந்துட்டேனே, மத்திய அரசுன்னு சொல்லக்கூடாது. நடுவண் அரசுன்னு சொல்லணும். ண் ரெண்டு சுழியா, மூணு சுழியான்னு தெரியலை.

சரி மணியாச்சு, நா குளிச்சிட்டு கிளம்புரேன். மதிய சாப்பாடு சரவணபவன்ல இருந்து வாங்கிவந்துடரேன். அந்த ஒருவாரம், பக்கத்து பிளாக்குல ஒரு மாமி சமைச்சிக் கொடுக்கிறாங்களாம். அதுக்கும் சொல்லிடு

அப்படியே உங்கக்கா, அடுத்த வாரம் வரேன்னு சொல்லியிருந்தேளே. இப்ப வர வேணாம்னு சொல்லிடுங்க. எனக்கு ஒடம்பு சரியில்லைன்னு சொல்லுங்க. உங்களுக்குன்னா என்ன ஏதுன்னு பார்க்க வரேன்னுவா. எனக்குன்னா, இங்க வந்தும் சமையல் செய்யணும்னு வரமாட்டா.

சரி சரி! நா கெளம்புரேன்.. அந்த பெண்ணீய சிந்தனைகள் மட்டும் டெஸ்க் டாப்பில் போட்டு வெச்சிரு. நா படிக்கணும்" என்றுச் சொல்லிவிட்டு வெளியேறினார்.

ஏகாம்பரி பரபரவென்று தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள்.

*************************************************************************************************************************************
இதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் யாரையும் குறிப்பன அல்ல. முழுக்க முழுக்க கற்பனையில் எழுதப்பட்ட சிறுக்கதை வடிவம்

61 பின்னூட்டங்கள்:

At Tuesday, 16 October, 2007, சொல்வது...

இன்னும் உங்களை நட்சத்திரமா ஆக்கவே இல்லையா, அந்த காண்டுல தான் யாருக்கோ எனிமா தரிங்க போல :-))

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

இப்படி வரிக்கு வரி சிரிக்க வைக்கிற பதிவை நுனிப்புல்லே இதுக்கு முன்னாடி படிச்சதில்லையே.. ஏகாம்பரிதான் உஷாவுக்கு கோஸ்ட் ரைட்டிங்கா?

நட்சத்திரத்தை எல்லாரும் தேடும் வேளையில் இப்படி ஒரு பதிவு போடுவதன் நுண்ணரசியல் எங்களுக்குத் தெரியாதென்றா நினைக்கிறீர்கள்?

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

அன்புள்ள உஷா அவர்களே..

நீங்க நட்சத்திரம் ஆனபோது எழுதிய பதிவா என்ன?

//நட்சத்திரமா? ஸ்டாரா? என்ன சினிமாலையா சான்ஸ் கிடச்சிருக்கு?" குரலில் தென்பட்ட பயம், எழுத்தாளியின் மண்டையில் ஏறவில்லை.//

கணவர்களின் மணநிலை???


//பார்பனீய சுஜாதாவின் பேனாவில் பீறிடும் அக்ரஹாரத்து மை ந்னு எழுதினாத்தான் வொர்க் அவுட் ஆகும். //

அப்ப பார்ப்பணியத்தை எதிர்த்தாத்தான் மதிப்பாக்கும்??


//எப்படியும் நாலு பேரூ வந்து, நம்ம எடத்துல அடிச்சிக்குவாங்க. நாம வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கலாம்.//

எல்லாம் தற்போதைய தமிழ் பதிவுலக நிகழ்வுகள்.

"நகைச்சுவை" யாகத்தானே லேபில் செய்திருக்கிறீர்கள்??

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

அன்புள்ள உஷா அவர்களே..

நீங்க நட்சத்திரம் ஆனபோது எழுதிய பதிவா என்ன?

//நட்சத்திரமா? ஸ்டாரா? என்ன சினிமாலையா சான்ஸ் கிடச்சிருக்கு?" குரலில் தென்பட்ட பயம், எழுத்தாளியின் மண்டையில் ஏறவில்லை.//

கணவர்களின் மணநிலை???


//பார்பனீய சுஜாதாவின் பேனாவில் பீறிடும் அக்ரஹாரத்து மை ந்னு எழுதினாத்தான் வொர்க் அவுட் ஆகும். //

அப்ப பார்ப்பணியத்தை எதிர்த்தாத்தான் மதிப்பாக்கும்??


//எப்படியும் நாலு பேரூ வந்து, நம்ம எடத்துல அடிச்சிக்குவாங்க. நாம வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கலாம்.//

எல்லாம் தற்போதைய தமிழ் பதிவுலக நிகழ்வுகள்.

"நகைச்சுவை" யாகத்தானே லேபில் செய்திருக்கிறீர்கள்??

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

ஆமா, ஏகாம்பரியோட கணவர் டாக்டர்தானே, எப்ப இருந்து ஆபீஸுக்கு போக ஆரம்பிச்சார்?

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

உஷா எங்கேயோ போயிடீங்க போங்க.....ஒவ்வொரு பத்தியிலயும் ஒரு பஞ்ச்.நான் எதன்னு எடுத்து காட்ரது....இந்த "நுண்ணரசியல" வச்சு ஒரு "நுண்ணரசியல்" பண்ணிட்டீங்களே??!!!

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

நட்சத்திரத்தை எல்லாரும் தேடும் வேளையில் இப்படி ஒரு பதிவு போடுவதன் நுண்ணரசியல் எங்களுக்குத் தெரியாதென்றா நினைக்கிறீர்கள்?////

ரீப்பீட்டே!!!

செம சூப்பரா இருக்கிறது பதிவு:)

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

பெனாத்தலார் மேல சத்தியமா சொல்றேன் நான் இது போல ஒரு பதிவு போடலாம்ன்னு இருந்தேன்:-))

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

//நட்சத்திரமா? ஸ்டாரா? என்ன சினிமாலையா சான்ஸ் கிடச்சிருக்கு?" குரலில் தென்பட்ட பயம்,// எவ்வளவுதான் பெண்ணியத்தை கிண்டலடிச்சாலும் இந்த வரி அவசரத்துல கைதவறி போட்டுட்டீங்க போல.... இந்தப் பதிவுலயும் யாராவது வந்து பூனைக்குட்டி பைய விட்டு வெளில வந்துடுச்சுன்னு ஆரம்பிக்கறதுக்குள்ள மாத்திடுங்க - இந்த நுண்ணரசியல் துளிய. :)

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

அபிஅப்பா:1000க்கு மேலயா, எங்கயோ இடிக்குதே???

அபிபாப்பா: எங்கயும் இடிக்கலைப்பா உங்களையேத்தாம்ப்பா!!

நட்ராஜ்: அடபாவமே! அப்பா பதிவே உங்களை பத்திதாம்ப்பா! நீங்க ஸ்டார் ஆயிட்டேன்னு என் காதில சொன்ன ரெண்டு நாள் எனக்கு காது வலிச்சுது தெரியுமா:-((

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

வவ்வால், இப்படி எல்லாம் கேள்விக் கேட்க கூடாது. ஒரு சிறுக்கதையும் தானே எழுதிக் கொள்கிறது என்பதை
மறவாதீர்கள் :-)

ஜெயகுமார், பார்பனீயத்தை எதிர்த்தால் மதிப்பு என்றெல்லாம் நினைக்காதீங்க. அதுதான் டிரெண்டுன்னு சொல்லிட்டேன் இல்லே :-)

பினாத்தலாரே! ஏகாம்பரி முன்பு ஒருமுறை டாக்டரைப் பார்க்க போனாள், பிலாக்கோபோபியாவுக்கு டிரிட்மெண்ட் எடுக்க.

ராதா, நல்லவேளையாய் நுண்ணரசியலை நீங்களும் கிளறவில்லை. இல்லாத அரசியல் நமக்கு எதுக்கு????

குசும்பன் நன்னி

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

:-}

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

//"இன்றைக்கும் பெண்" ன்னு பெண்ணீய சிந்தனை மேட்டர் ஒண்ணு இருக்கு. எப்படியும் நாலு பேரூ வந்து, நம்ம எடத்துல அடிச்சிக்குவாங்க. நாம வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கலாம்.//

ஆஹா!! இந்த மேட்டர் முன்னமே தெரியாமா வந்து நம்மளை நொந்து நூடில்ஸ் ஆகும் படி பண்ணிட்டீங்களே!!

நுண்ணரசியலா? இந்த மருத்துவரைப் பிடிச்சு கட்டி வெச்சு உதைக்கணும்.

நல்லா இருங்கக்கா!!

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

அடடா, பிலாகோபோபியாவை மிஞ்சுது இந்தப் பதிவு.

///பார்பனீய சுஜாதாவின் பேனாவில் பீறிடும் அக்ரஹாரத்து மை ந்னு எழுதினாத்தான் வொர்க் அவுட் ஆகும்//
சூப்பர்.

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

உஷா எனக்கும் தம்மிழ்மணத்தின் மீது கோபம் வந்திருக்கு லேசாய்.இது இரண்டாவது முறை நட்சத்திரம்னு போட்டு இப்படி ஆளில்லாமல் 'தேமே'ன்னு கிடப்பது.
ஆமாம் நீங்க இன்னும் ஆகலையா?
அது சரி நீங்கெல்லாம் பெரிய ஆளுங்க.இதெல்லாம் ஜுஜூபி.

பதிவு ச்சும்மா நச்

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

//பார்பனீயத்தை எதிர்த்தால் மதிப்பு என்றெல்லாம் நினைக்காதீங்க. //
ஓஹ், மக்கள் இப்படி வேற சிந்திக்கிறாங்களா? ஹ்ம்ம்.

பார்ப்பானீயம்தான் உலகம்ன்னு ஒரு கும்பலே இருக்கும் போல. அதை சரியா சொல்லி இருக்கீங்க உஷா.

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

ஹலே மேடம் பின்னூட்டம் போடலைன்னாலும் உங்க பதிவு படிக்கிறோம்ல.டாக்டர் எப்ப மானேஜர் ஆனார்?

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

அபி அப்பா! அதுதான் பிளாக் லெட்டரில் இது கற்பனைன்னு கீழே போட்டு இருக்கோமில்லே? அப்புறம் என்ன வெச்சி எளுதினியான்னு என்ன கேள்வி :-)

லஷ்மி, நான் ஆண் ஈயம், பெண் ஈயம் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை. மற்றப்படி திருத்த எல்லாம் மாட்டேன். காரணம் வவ்வாலுக்கு சொன்னதுதான், ஒரு நல்ல படைப்பு தானே எழுதிக் கொள்கிறது :-))))

காசி, நீங்களா ???

இளா! புதுசா எதையும் கிளறாதய்யா! நானே பயந்துப் போய்கிடக்கிறேன் :-)

கண்மணி, உங்களுக்கு ஸ்பெஷல் தாங்ஸ்! நேற்று அபி அப்பா அடித்த கும்மியில் நீங்க ஏகாம்பரியை நினைவூட்டியதும், தமிழ்மண நட்சத்திரம் காணோம் என்றதும், மடமடவென்று எழுதிவிட்டேன். மீண்டும் ஒருமுறை பிலாக்கோபோபியாவை
படிக்கவும். ஏகாம்பரி டாக்டரிடம் போகிறாள்

இலவசம், நுண்ணரசியல் வார்த்தை என்னமோ உம்ம தோஸ்த் மருத்துவர் ஐயா கண்டுப்பிடிச்சா மாதிரி சொல்லுறீரு. அதுக்கு முன்னாடியே
நா கண்டுக்கினேன்.

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

//பார்பனீய சுஜாதாவின் பேனாவில் பீறிடும் அக்ரஹாரத்து மை ந்னு எழுதினாத்தான் வொர்க் அவுட் ஆகும். //
//நட்சத்திரமா? ஸ்டாரா? என்ன சினிமாலையா சான்ஸ் கிடச்சிருக்கு?" குரலில் தென்பட்ட பயம்,//
//எப்படியும் நாலு பேரூ வந்து, நம்ம எடத்துல அடிச்சிக்குவாங்க. நாம வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கலாம்.//

எல்லாம் தற்போதைய தமிழ் பதிவுலக நிகழ்வுகள்.

வரிக்கு வரி சிரிக்க வைக்கிற பதிவு
சூப்பரா இருக்கிறது.

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

போர்ஷே கார் வாங்கிய யுவராஜ் அடித்த சிக்சர் மாதிரி இருக்கு...
சூப்பர்.

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

சூப்பர்ங்க..நான் சிரிச்சத ஆபீஸ்ல எல்லோரும் பாத்துட்டாங்க..

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

//ஆறு மேட்டர் ஆச்சு. வணக்கம், நன்றி, நவீன கவிதை, அக்ரஹாரத்து சுஜாதா, பெரியார், ஸ்ரீலங்கா.. அப்புறம்.//

என்ன சிஸ்டர் ஊர மறந்துட்டீங்களே..?

நான் பிறந்த ஊர்
அல்லது
நான் புகுந்த ஊர் (டைட்டில் ஒ.கேவா)
அப்பத்தான் திருப்தியா முடியும்..!


அப்ப வர்ற தீபாவளி சரவெடி நட்சத்திரம் நீங்கதானாஆஆஆஆஆ?

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

நட்சத்திர வாரமென்னும் இடத்தில் சீட்டை கொடுக்காவிட்டால் என்ன.. எங்கள் சூடான இதயத்தில் இடம் எப்பவுமே உண்டுனு தமிழ்மண நிர்வாகம் டீல் போட்டுருக்கா உங்களோட?

கலக்கல் பதிவு..

அப்புறம் நம்ம தோஸ்துன்னு சொன்னப்புறம் இன்னொரு விஷயத்த (=அநீதி/ஒடுக்குற மனப்பான்மை/பொதுப்புத்தி/எதிர்ப்பு/இருப்பை மறுத்தல் - அப்படினெல்லாம் அர்த்தம் பண்ணிகிட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்லை) இங்கன நான் புட்டு வைக்க வேணாமா?

யார் யாரையோ ஆக்குறாங்கப்பா.. ஆனா நம்ம 'பின்னூட்ட புயல்' கொத்ஸை இன்னும் நட்சத்திரமா ஆக்கலை..

இதுல எதுனாச்சும் நுண்/புண் அரசியல் இருக்குதானு யாராச்சும் தேடிப்பாருங்கப்போவ்...

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

//காசி, நீங்களா ???//
காசி அண்ணன் சரியா இந்த மாதிரி பதிவுகளுக்கு ஆஜர் ஆகிடறாரு. என்னண்ணே ரகசியம் அது?

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

:-) :-)

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

Dear Usha,
It's simply superb. I am very new to Tamil Bloggers. This post made me to read some other posts by you. It's really funny and excellent. Your 'Blogophobia' really made me think if I got that phobia...as I mentioned I am very new to bloggers..say about 2 weeks...and in these 2 weeks all I am thinking is how to comment in tamil, how to start my own blog, how to sign in Thamizmanam...any way it's a good article too. Your '8' is really sweet. Your 8 made me to write this comment for you because it gave me a feeling as though you are my close friend. I've created a blog but don't know what to do next. If a friend (I think you may include me in your friend circle) like you guide me, I wish to join this interesting Tamil Valai Pathivar Ulagam.

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

நட்சத்திர வாழ்த்து(க்)கள் உஷா.

அடிச்சுத் தூள் கிளப்புங்க!!!!!

டெம்ளேட் போட்டு வச்சுருக்கேன்:-)))))

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

மங்களூர் சிவா, அறிவன், பாபா, ராம்கி,ஆயில்யன், தங்ஸ் நன்றி

துளசி, நட்சத்திர வாழ்த்தை ஏகாம்பரிக்கு பாஸ் செஞ்சிடரேன்.. நற... நற....

ராமநாதா! நான் எங்காவது தமிழ் மணம் என்ற வார்த்தையை பாவித்து இருக்கிறேனே? அப்படியிருக்க, சாதாரண கற்பனைக்கதையை நிஜமான நிகழ்வுடன் பொருத்திப் பார்ப்பது சரியில்லை

இளா! அது என்ன "இந்த மாதிரி பதிவு?"

நட்பு தேடி, இப்பத்தான் உங்க பிளாக் தேடிப்படிச்சேன். நானே ஒரு கணிணி கைநாட்டு யாரையாவது கேட்டு சொல்கிறேன். தமிழ்மண
முதல் பக்கத்திலேயே விவரங்கள் இருக்குமே?

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

////காசி, நீங்களா ???//
காசி அண்ணன் சரியா இந்த மாதிரி பதிவுகளுக்கு ஆஜர் ஆகிடறாரு. என்னண்ணே ரகசியம் அது?//

எந்த மாதிரிப் பதிவுகளுக்கு இளா?

நம்ம லெவலுக்கு விளங்குற இடத்தில தான் நாம் உலாத்தமுடியும்! :-)

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

உஷா
தாங்க முடியல:-)


ஊர் வந்து செட்டில் ஆயாச்சா
ரெஸ்ட் எடுத்து புல் பார்முக்கு வந்தாச்சா:-)

சரி லிஸ்ட்டுல அந்த மலையாள டைரக்டரிடம் எடுத்த நேர்காணலையும் சேர்த்துக்கோங்க‌.

'மழையும் மனசும்' பதிவு எழுதுறப்போ நிஜமாவே பழைய சேமிப்பைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கல.
நானும் இனி எல்லோர் பதிவிலும் பின்னூட்டம் இட்டு நட்சத்திரம் ஆக முடிவு செய்துட்டேன்:-)
ஆன‌ உங்க போஸ்ட்டில், பாக்ஸ் எழுத விடவேயில்லை
இதை காபி பேஸ்ட் செய்துடுங்க ப்ளீஸ்

அன்புடன்
மதுமிதா


--

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

மது, உங்களுக்கு மலையாள எழுத்தாளர் நினைவு இருக்கு, நம்ம நாஞ்சில் நாடனுடன் பேசியதை மறந்துட்டீங்களே....

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

நல்லாருக்கு!

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

அடடா ..! நிறைய ரசிச்சேன்.

பார்பனீய சுஜாதாவின் பேனாவில் பீறிடும் அக்ரஹாரத்து மை ந்னு எழுதினாத்தான் வொர்க் அவுட் ஆகும். //

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

அட்டகாசம்...!!!!!

பிரிச்சு மேஞ்சுட்டீங்க...ரசித்து சிரித்தேன்..!!!!!!!!!!!

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

உஷா,

உங்களுக்கு 'காமெடி குயின்' (சுத்தத்தமிழில் "நகைச்சுவை நாயகி")என்ற பட்டத்தை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் வழங்குகிறேன் :))))))

மிகவும் ரசித்தேன் என்று சொல்லவும் வேண்டுமோ ?

எ.அ.பாலா

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

அதி அழகு, ரவி, நானானி நன்றி. அது என்ன எல்லாரும் சுஜாதாமேட்டரையே ரசிக்கிறார்கள் :-)

எ. அ.பாலா, காமடி குயின், நகைச்சுவை நாயகி பட்டம் எல்லாம் எதுக்கு, என்னமோ கோவை சரளா, மனோரமா நினைவு வருது :-))) இப்படி நாலு பேரூ படிச்சி நல்லா இருக்கு என்று சொல்வதே மனதுக்கு மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கு. நன்றி பாலா!

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

நாளாயினி மேடம், நானானிக்குப் போய்விட்டது நன்றி. மனமார்ந்த நன்றி

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

ஹாஹா... சூப்பரு.... :))

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

செம காமெடிங்க..

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

///ramachandranusha(உஷா) said...
மது, உங்களுக்கு மலையாள எழுத்தாளர் நினைவு இருக்கு, நம்ம நாஞ்சில் நாடனுடன் பேசியதை மறந்துட்டீங்களே....///

ஏன்னா நானும் நாஞ்சில் நாடனிடம் ஒரு இரண்டு வார்த்தை பேசினேன்.

நீங்க நாஞ்சில் நாடனிடம் பேசினது நேர்காணல் இல்லையே:-)

ஆனா மலையாள டைரக்டரிடம் நீங்கள் ரொம்ப சின்சியரா நேர்காணல் செய்தீங்க இல்லையா:-)

அதை எடுத்து போடுங்க.

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

அருமை! எப்படி இந்த வேகத்திலும் விசயத்தை சொல்லமுடிகின்றது?

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

இராம் நன்றி.

அய்யனாரே, பதிவுல நவீன எழுத்து சித்தரே! நன்றி நன்றி. ஒரு சந்தேகம் நீங்க போன பதிவுக்கு போட்ட பின்னுட்டம் இது// வாழ்த்துக்களை பிடியுங்க..என்னோட பரிந்துரை புதுவிதமா எழுதிப்பாருங்க.. கட்புலனாகாத நுண்ணரசியலை கட்டுடைக்கிறதத்தான் சொல்றேன் :)// இது இந்த பதிவுல சேர்த்தா சரியா இருக்காது :-)

பாபு மனோகர், இது ஒன்றும் பெரிய வித்தையில்லை. நான் இணையத்தில் நுழைந்தே அரிச்சுவடி படிக்க ஆரம்பித்து, இன்று அச்சு பத்திரிக்கையுலகில் காலடி வைத்துள்ளேன். இணையமும், வலைப்பதிவுகளும் எழுத நினைப்பவர்களுக்கு மிக சிறந்த இடம். விடா முயற்சியுடன் எழுதுங்கள். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நா பழக்கம்.

 
At Thursday, 18 October, 2007, சொல்வது...

உஷாக்கா...
உங்க "பேட்டன்ட்" வரிகள படிக்காம ,உங்க "நுண்ணரசியல்" வார்த்தய என்னோட "சார்.. பிலிஸ் கைத்தட்டுங்க ...கைத்தட்டுங்க பிலிஸ்..சார்.."பதிவுல கையாண்டுட்டேன்.ஆனா அங்கயே உங்களுக்கு நன்றியும் சொல்லி புட்டேன்[தப்பிச்சேன்]. மன்னிச்சி விட்டுருங்க..

 
At Thursday, 18 October, 2007, சொல்வது...

அருமை உஷா. :-)

 
At Thursday, 18 October, 2007, சொல்வது...

மதுமிதா, வரேன் வரேன்!

தம்பி ரசிகன், அதெல்லாம் என்னுடைய சொத்துன்னு யார் சொன்னது? புதியதாய் கற்றுக் கொண்ட வார்த்தைகளை என் பதிவில்
போட்டு அழகுப் பார்க்கிறேன். அவ்வளவே :-)

குமரன் நன்றி

 
At Saturday, 20 October, 2007, சொல்வது...

//அடடா, பிலாகோபோபியாவை மிஞ்சுது இந்தப் பதிவு.
//

ரிப்பீட்டு!! :)))))
உஷாக்கா கலக்கறீங்க போங்க!

 
At Saturday, 20 October, 2007, சொல்வது...

நன்றி சிஸ்!

 
At Saturday, 20 October, 2007, சொல்வது...

நன்றி சிஸ்!

 
At Sunday, 21 October, 2007, சொல்வது...

எப்ப,எப்ப, எப்ப மின்னப் போகிறது நட்சத்திரம்:)000
வாழ்த்துகள் உஷா.

நட்சத்திர முன் பதிவே இந்தப் போடு போடறதே. வாரம் பூரா என்ன பாடு படப் போறோமோ:))
வார்த்தைக்கு வார்த்தை காமெடி பஜார்.
பெண்ணியம், பார்ப்பனீயம் அப்புறம்????????வேற எந்த ஈயம் பாக்கி:)))

 
At Sunday, 21 October, 2007, சொல்வது...

//இதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் யாரையும் குறிப்பன அல்ல. முழுக்க முழுக்க கற்பனையில் எழுதப்பட்ட சிறுக்கதை வடிவம்//

வல்லிம்மா! இப்படி தெளிவா போட்டும் சீதைக்கு ராமன் ஒண்ணுவிட்ட சித்தப்பான்னா என்ன அர்த்தம்:-) இது வெறும் கதை,
கதை, கதை மட்டுமே!

 
At Monday, 22 October, 2007, சொல்வது...

சீதைக்கு ராமன் சித்தப்பாவோ பெரியப்பாவோ.
நீங்க கற்பனைப் பதிவு போட்டா , நாங்க கற்பனைப் பின்னூட்டம் போடறோம்:))
நீங்க நட்சத்திரம் ஆனதும் இது போலத்தானே கமெண்ட் வரும்///???/அதான் அப்போதைக்கு இப்போதே:00))))))))

 
At Tuesday, 23 October, 2007, சொல்வது...

உஷா அக்கா.. இது வர மூணு தடவ படிச்சிடேன்.எந்த தடவயும் சிரிப்பு கொறஞ்சபாடில்ல...தலையில எல்லாம் அடிப்பட்டுடுச்சி.. (விழுந்து விழுந்து சிரிச்சேனில்ல..).

 
At Tuesday, 23 October, 2007, சொல்வது...

வல்லி சரி சரி :-)

ரசிகன் பார்த்துபா !

 
At Tuesday, 23 October, 2007, சொல்வது...

நகைச்சுவைப் பதிவு - உஷா
எப்போது நட்சத்திரப் பதிவர் ஆகப் போகீறிர்கள் ? அட்வான்ஸ் வாழ்த்துகள். ரசிகன் மண்டை உடைந்து விட்டதாமே !! என்ன நட்ட ஏடு கொடுக்கப் போகிறீர்கள் ??

 
At Thursday, 25 October, 2007, சொல்வது...

ஹஹா ஆபிஸ்ல வாய் விட்டு சிரிச்சேன். தமிழ்மணத்தை சும்மா நச்சுனு பல்ஸ் பிடிச்சு வெச்ச்ருக்கீங்க. சுஜாதாவையும் விட்டு வைக்கலையா? :)))

 
At Thursday, 25 October, 2007, சொல்வது...

நன்றி சீனா, அம்பி

 
At Friday, 26 October, 2007, சொல்வது...

ஹா ஹா ஹா

 
At Saturday, 27 October, 2007, சொல்வது...

சிவா, பதிவுப் போட்டு இவ்வளவு நாள் கழித்து மெதுவாய் வந்து சிரித்ததற்கு நன்றி

 
At Wednesday, 31 October, 2007, சொல்வது...

காரணம் இதுதான் உங்கள் ப்ளாகை என் கண்ணியில் படிக்க முடிவதில்லை.பிரவுசிங் சென்டர் கணினியிலும் அப்படித்தான். காரணதைகண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

 
At Friday, 25 January, 2008, சொல்வது...

உஷா மேடம், கலக்கிட்டீங்க! இத முன்னாடி எப்படி மிஸ் பண்ணேன்னு தெரியல. ப்லோகோபோபியாவ இது மிஞ்சிடுச்சு. ஆனா கொஞ்சம் பழைய சரக்கு வாசனை. "பின்னிரவில் முயங்கும் பூனைகளின் எச்சங்கள், மரணத்தவன் கை எழுதுகோல் சித்திரங்கள்" ப்லோகோபோபியாவின் 'இடானி பேய்களும் மூத்திரகடுப்பும்"
உடனே நினைவு படிதிடுச்சு. மற்றபடி சூப்பர் நகைச்சுவை!! ( "satire" kku சரியான தமிழ் வார்த்தை என்னங்க?)
உங்கள் வலைப்பதிவை நண்பர் வட்டாரத்துல அறிமுகப்படுத்தி உங்கள் வாசக வருகையை அதிகப்படுத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன்!

 
At Saturday, 26 January, 2008, சொல்வது...

நன்றி வந்தியதேவன், பழைய பதிவுக்கு புத்துயிர் கொடுத்ததற்கு. சடையர் என்பதற்கு தமிழில் அங்கதம் என்று நினைக்கிறேன்.
உங்க தோழர்களுக்கு அறிமுகப்படுத்தப் போவதற்கும் இன்னும் ஒரு டாங்ஸ் :-)

 

Post a Comment

<< இல்லம்