Friday, September 21, 2007

புள்ளிகளின் உலகம்

புள்ளி என்ற வார்த்தையை முதன் முதலில் தெரிந்துக் கொண்டது தி.ஜானகிராமனின் "மலர் மஞ்சம்" நாவலில்தான். புள்ளிக்காரன் என்ற சொல் மலையாளத்தின் இளைஞன் என்பதைக் குறிக்க. ஆனால் இங்கு புள்ளி என்பது ஒரு எட்டு வயதுக்குள், ஒல்லியான சின்ன
சைஸ் உருவம், கொஞ்சம் சுறுசுறுப்பான பிள்ளைகளை கற்பனை செய்துக் கொள்ளுங்கள். இவைகள்தான் புள்ளிகள். பிறகு என் பாட்டி ஒரு முறை, வரிசையாய் வந்து ஒரு குடும்பத்து பிள்ளைகளை , பெரிய புள்ளிக்கு எழெட்டு வயது இருக்கும், அதற்கு பிறகு ஆறு, நாலு, இரண்டு என்று வந்த வாண்டுகளை அரை புள்ளி, கா (ல்) புள்ளி, அரைகா புள்ளி என்று சொன்னதும் புள்ளி என்றுச் சொல்வது மிகப்பிடித்துப் போய்விட்டது. உழக்கு, குட்டிகள், குட்டீஸ், பொடிசுங்க இன்னும் எத்தனை?

அமீரகத்தில் ஒரு வெள்ளைக்காரம்மா, உருவத்தில் மிக சிறிய ஆனால் சுறுசுறுவென்று இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்த சின்ன நாய்க்கு "டாட்" என்று பெயர் என்றார்.

நான்கு நாட்களுக்கு முன்பு, மருத்துவமனைக்குப் போயிருந்தேன். ஒரு பெண் தன் சின்ன பையனுடன் வந்திருந்தாள். இரண்டாவது குழந்தை உண்டாயிருந்தாள் எட்டு மாசம் இருக்கும்,. கூட வந்த புள்ளி, சுறுசுறுவென்று அம்மாவின் கையிருந்த ·பைலை ரிசப்ஷனில் கொடுத்தது. அம்மாவை உட்கார உபசரித்தது. கூலரில் இருந்து தண்ணீர் பிடித்து தந்தது. எல்லாம் செய்துவிட்டு, அடுத்த நாற்காலியில் இருந்த என்னைப் பார்த்து பல்லைக்காட்டியது, கொஞ்சம் பெருமையோடு.

நான் ஸ்மார்ட் பாய் என்றேன். தாய் பேச ஆரம்பித்தாள். வீடு எங்கே என்பதுபோல குஜராத்தியில் ஆரம்பித்ததும், குஜராத்தி மாலும் நை, ஹிந்தி தோடா தோடா மாலும் என்றேன்.ஏதோ அறைகுறையாய் புரிந்தது. இப்படி சில நிமிடங்கள் போனதும், புள்ளியிடம் பேச்சு கொடுத்தேன்.

எந்த ஸ்கூல் எந்த வகுப்பு என்றதும், மூன்றாம் வகுப்பு என்றவனிடம், நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல், தாயைப் பார்த்து சிரித்துவிட்டு, நானும் உன் பள்ளியில் டீச்சர் என்னைப் பார்த்ததில்லையா? அடுத்த வருடம், நாலாவது வகுப்புக்கு என்னிடம்தான் படிக்க வேண்டும் என்றதும், புள்ளியின் முகம் மாறியது. முகத்தைப் பார்த்து மனசு தாங்கவில்லை. சும்மா சொன்னேன் என்று சொல்லியும், முகத்தில் இருந்த சுரத்து குறைந்துதான் போயிற்று.

என்னைப்போல, ஆசிரியர் என்றால் அலர்ஜி போல! புள்ளியின் அம்மாவும் எடுத்து சொல்ல, சில நிமிடங்களில் முகம் பழைய நிலைமைக்கு வந்தது. இதோ போல முன்பு ஒருமுறையும் ஒரு குட்டியின் வயிற்றெரிச்சலை சம்பாதிக்க கொண்ட சம்பவம் நினைவுக்கு வந்தது.

ஒருமுறை ஷாப்பிங் செண்டரில் பணம் செலுத்திவிட்டு சாமான் வாங்கிவிட்டு, கவுண்டரைத்
தாண்டி வரும்போது, ஏதோ மறந்து போச்சு என்று என் கணவர் மீண்டும் உள்ளே செல்ல நான், சாமான் வைத்திருந்த வண்டியைப் பிடித்துக் கொண்டு உட்புறமாய் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.

அப்பொழுது நம் ஊர் பெண் ஒருத்தி, சாமான்களை எடுத்து பில் போட வைத்துக் கொண்டு இருந்தாள். ஒரு இரண்டு, இரண்டரைவயது இருக்கும் குட்டி ஒன்று டிராலியில் அமர்ந்திருந்தது. கைக்கு எட்டும் தூரத்தில், கவுண்டருக்கு அருகில் சின்ன சின்ன ஷெல்ப் அடுக்குகளில்
சாக்கலேட்டு பார்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது இரண்டை எடுத்து வைக்க , அம்மாகாரி அதை எடுத்து திரும்ப அதன் இடத்தில் வைத்துவிட்டு, வேண்டாம் என்பது போல ஏதோ சொல்ல, செல் அடித்தது. செல்லை காதில் இடுக்கிக் கொண்டு, பேசிக் கொண்டே சாமான்களை எடுத்து அம்மா வைக்க, நம் புள்ளி மெல்ல அதே சாக்கலேட்டை அடுக்கில் இருந்து உருவி பில் போட வைத்திருந்த சாமான்களுடன் வைக்க எத்தனிக்க, இவைகளை எல்லாம் சுவாரசியமாய் பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

அம்மைக்கு நான் சிரித்தது கண்ணில் பட்டுவிட்டது. கண்ணில் அதே சாக்கலேட் பட்டை பட்டதும், செல்போனை மூடிவிட்டு, எடுத்த சாக்கலேட்டை திரும்ப வைக்க உத்தரவு இட்டாள். சாக்கலேட்டை திரும்ப வைத்துவிட்டு, புள்ளி கோபமாய் டிராலியை விட்டு இறங்கி, நின்றுக் கொண்டிருந்தது. பணத்தை கொடுத்துவிட்டு, சாமானை தள்ளிக் கொண்டு, குழந்தையையும் இழுத்துக் கொண்டுப் போனாள். புள்ளி, சரியாய் என்னை தாண்டும்பொழுது, திரும்பிப் பார்த்து வெடுக்கென்று 'கா" விட்டு விட்டுப் போனது. அழகிய சிறு கவிதை போல அந்த "கா" விட்ட முகம் இன்னும் கண்ணில் இருக்கிறது.

16 பின்னூட்டங்கள்:

At Friday, 21 September, 2007, சொல்வது...

நன்றாக தி.ஜா கதையையும் , உங்கள் அனுபவத்தை இணைத்து சொல்லியுள்ளீர்கள். உங்களுக்கு கோலம் போட தெரியாதோ? அதனால் தான் புள்ளி என்ற வார்த்தையை தெரிந்து கொள்ள ரொம்ப காலம் எடுத்துக்கொண்டீர்கள்!

 
At Friday, 21 September, 2007, சொல்வது...

ஒரு குட்டிப் பாப்பாவின் வயத்தெரிச்சலைக் கொட்டிகிட்டு, அப்புறம் அதை கவிதைன்னு வேற சொல்றீங்களே, இது அடுக்குமா? :)

 
At Friday, 21 September, 2007, சொல்வது...

அப்போ இந்த அரசியல்வியாதிங்களை பெரும் புள்ளி அப்படின்னு சொல்றட்து அவங்க எவ்வளவு பெரிசா ஆனாலும் புள்ளி என குறிப்பிடத்தானா? அக்கா, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ப்ளீஸ்.

அப்புறம் நீங்க படுத்தி எடுத்த அந்த ரெண்டு புள்ளிகளும் ஆண் புள்ளிகள்தானே? :))

 
At Friday, 21 September, 2007, சொல்வது...

வவ்வால்,குட்டீஸ்களை புள்ளி என்று சொல்வதைப் பற்றி கும்மோணத்துக்காரர்கள்தான் (கும்பகோணம்) சொல்ல வேண்டும்.

லஷ்மீ, நைசாய் திரும்ப எடுத்து வைத்தது சிரிப்பு வந்துவிட்டது. எதிரே பார்க்காதப்போது, டக் என்று வாயில் விரலை வைத்துக் கோபமாய் கா என்றது கவிதையல்ல ஹை கூ :-)

இலவசம், முதல் புள்ளி ஆண், இரண்டாவது புள்ளி பெண். ஆணும், பெண்ணும் சமம். நான் பெண்ணீயவாதி இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளேன். மற்றப்படி "புள்ளி" என்பதைக்குறித்து வவ்வாலுக்குப் போட்ட பதிலைப்
பார்க்கவும்.

 
At Friday, 21 September, 2007, சொல்வது...

கும்மோணத்துக்காரர்களைக் கேட்டேன். அவர்களுக்கு அந்தப் பாஷையே மறந்து விட்டதாம்.
மறுபடி தி.ஜா படிக்க ஆரம்பிக்கணும்.

அப்புறம் வீட்டைப் பார்க்கிறது யாரு:)))
அப்படியே நேரப் பார்க்கிறா மாதிரி இருந்தது உங்க வர்ணனை.
ஆனாலும் குசும்புதான்:))

 
At Friday, 21 September, 2007, சொல்வது...

ரொம்பவே வில்லத்தனம் செய்யறீங்க :)

 
At Friday, 21 September, 2007, சொல்வது...

//
நானும் உன் பள்ளியில் டீச்சர் என்னைப் பார்த்ததில்லையா? அடுத்த வருடம், நாலாவது வகுப்புக்கு என்னிடம்தான் படிக்க வேண்டும்
//
சின்ன புள்ளி(ள)ய இப்டியா மெரட்டறது??

 
At Friday, 21 September, 2007, சொல்வது...

வல்லி, பாபா, மங்களூர் சிவா! அதுதான் புள்ளிகளின் உலகம் என்று தலைப்பு கொடுத்தேன். அதில் புகுந்தால் அக்குழந்தைகளின்
உணர்வுகள் மிக அழகாய் தெரியும். இங்க எதிர் வீட்டு அம்மணி, சின்ன புள்ளைங்களுக்கு டீயூஷன் எடுக்கிறாங்க. நான் முதல் வகுப்பு ஹிந்தி பாட புத்தகத்தை வைத்துக் கொண்டு, எழுத்து கூட்டி க எது ச எது என்று திணறிக் கொண்டு
இருக்கும்பொழுது, புத்தக உரிமையாளினிக்கு ஓரே ஆச்சரியம், என்னடா இவ்வளவு வயசான கழுதைக்கு அ, ஆ, இ கூட தெரியலையே என்று! மெல்ல அதனிடம் எனக்கு படிக்கவே தெரியாது என்றதும், ஸ்கூலுக்கே போனதில்லையா
என்று கதை ஆரம்பித்தது. என்ன ஒன்று வரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு, முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொள்ள வேண்டும் :-)

 
At Friday, 21 September, 2007, சொல்வது...

எல்லாப் பெருமையும் கும்பகோணத்திற்கே என்பது கொஞ்சம் டூ மச்சா தெரியலை? :))

இது தென் தமிழ்நாடு, மலையாள நாடு எனப் பல இடங்களில் புழங்குவதுதான். :))

 
At Friday, 21 September, 2007, சொல்வது...

ம்ம்ம்ம்ம் எனக்குத் தெரிஞ்சு எங்க மாமியார், மாமனார் உறவிலோ, சுற்றங்களிலோ "புள்ளி" எனச் சொல்லிப் பார்க்கலை. சிறு பெண்களைக் "குட்டி" எனக் கூப்பிட்டுத் தான் பார்த்தேன். இது எந்தப் புள்ளி இப்படிச் சொன்னதோ? :P

 
At Saturday, 22 September, 2007, சொல்வது...

//
என்ன ஒன்று வரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு, முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொள்ள வேண்டும் :-)

//
புள்ளியோட புள்ளியா ஐக்கியமாயிடனும்னு சொல்ல வர்ரீங்க.

//
இவ்வளவு வயசான ----க்கு அ, ஆ, இ கூட தெரியலையே என்று!
//
வயசு ஜாஸ்தியானா பெரும்புள்ளி

 
At Saturday, 22 September, 2007, சொல்வது...

மேட்டர் நன்றாக இருந்தது. ஆனா, எங்க ஏரியாவுல 'புள்ளிக்காரன் யாருன்னு தெரியுதா?'; 'புள்ளி யாருன்னு தெரியுதா?' என்றால் விஷம பார்ட்டி என்று அர்த்தம். உங்க புள்ளியும் எங்க புள்ளியும் வேற வேற. கோடு போட முடியாது.

 
At Saturday, 22 September, 2007, சொல்வது...

கீதா, தி.ஜா வை சாட்சிக்கு கூப்பிடலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தால், நம்ம இலவசம் உதவிக்கு வந்துவிட்டார்.
நன்னி கொத்ஸ் :-)

ம.சிவா, பெரும்புள்ளிக்கு பொருள் பெரிய வசதியான, செல்வாக்கான ஆள் என்று பொருள் :-)

ஆடுமாடு ஐயா! மலையாளத்துல ஆ புள்ளிகாரன் என்பதற்கு பொருள், நாம் சொல்லும் "அந்தாளு" என்பதாகும். சரியா?

 
At Monday, 01 October, 2007, சொல்வது...

அடடா! அந்த ஆன்டி நீங்க தானா? நான் தான் 'கா' விட்ட அந்த குழந்தை. (எதுக்கும் என் புரோபைல் போட்டோவை உத்து பாருங்க, அடையாளம் தெரியும்) :p

 
At Saturday, 06 October, 2007, சொல்வது...

ரசிச்சு படிச்சேங்க! "கா" விட்ட குழந்தை முகம் எப்டி இருக்கும்னு கற்பனைல தோணுது! சூப்பர்!

 
At Monday, 08 October, 2007, சொல்வது...

ஒரு இரண்டு, இரண்டரைவயது இருக்கும் குட்டி ஒன்று டிராலியில் அமர்ந்திருந்தது. //

ஆஹா, "அம்பி" என்ற பெயரில் எழுதுவது பெண்ணா???????

காயத்ரி, நன்றி

 

Post a Comment

<< இல்லம்