Saturday, October 07, 2006

நல்லா நடிக்கிறாங்கப்பா!

இந்திரன் சலையில் ஆடும் ரம்பை ஊர்வசி வகையறாக்களோ, மா மன்னனை மகிழ்விக்க அரங்கையர் ஆட்டும் களியாட்டமோ ஏதோ ஒன்று, அந்தக்கால சினிமாவை நினைவுறுத்தியதுப் போல இருந்தது நேற்றைய சன் தொலைக்காட்சியில் கலைஞர் கருணாநிதி முன்னிலையில்
நடந்த நாட்டிய நாடகங்கள்.

இந்திரன் சந்திரன் என்று மன்னிக்கவும் தெய்வமே, தமிழே என்று உடலே ஜில்லிட்டு போகும் அளவிற்கு ஐஸ் மழைதான். அலெக்ஸ் பாண்டியனின் மாஜிக் ஷோவாகட்டும், வாள மீனுக்கும் வஜ்ர மீனுக்கும் கல்யாணம் பாட்டில் ஆகட்டும் அனைத்தும் முதலமைச்சரை செவ்வனே துதி பாடின. ஆனாலும் பாவம் ஒருவரை மிஞ்சி மற்றவர்கள் முகஸ்துதி செய்ய வார்த்தைகளை தேடி தேடி அளந்துக் கொண்டு இருந்தார்கள். அதில் சரோஜாதேவியில் உளறலுக்கே முதல் இடம்- நான் கேட்டவரையில்!

இப்படி காது கூசும் அளவிற்க்கு போற்றி புகழ் பாடுவதை கலைஞர் "தெய்வமே" என்றுக் கேட்டுக் கொண்டிருக்க, என்னால் தாங்க முடியாமல் டிவியை அணைத்துவிட்டேன். எழுந்து வேலைப் பார்க்கலாம் என்று உள்ளே போனதும், ரிமோட் கைமாறி போனது.

திரும்ப , "நீயே தெய்வம். திரையுலகமே உன்னை வணங்குகிறது" போன்ற வரிகள் பார்த்திபன், விவேக் குரலில். எரிச்சல் ஆகி, இந்த எழவைப் போடாதேன்னு சொன்னேன் இல்லையா என்று மகனை திட்டிக் கொண்டே வெளியே எட்டிப் பார்த்தால் நம் சூப்பர் ஸ்டார். என்னதான் ஆனாலும் நம்ம சூப்பர் ஸ்டார். என்னத்தான் சொல்கிறார் என்ற ஆவலில் நிற்க,

"நான் சொல்வது வெறும் பேச்சு இல்லை. இதை சொல்லாவிட்டால் நான் நன்றிக் கெட்டவன் ஆகிவிடுவேன். தைரியம், நேர்மை எல்லாம் என் முன்னால் உட்கார்ந்திருக்கிறது" என்று மெய்சிலிர்த்து சொல்லிக் கொண்டிருக்கும்பொழுது, எதிரில் முகம் முழுக்க புன்னகையுடன் அரியாசனத்தில் "அம்மா" என்னடா என்றுப் பார்த்தால் ஜெயா டீவி! சின்ன கிப்ளிங்ஸ் காட்டிக்கொண்டு இருந்தார்கள். இன்று மதியம் கலைதாய்க்கு திரைப்பட உலகம் எடுத்த விழாவைக் காட்டப்போகிறார்களாம். அதாவது அவங்க ஆட்சி காலத்துல! மகன் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான், ஜெயா டீவியின் குசும்பை சொல்லிக்கொண்டு!

யப்பா! ரெண்டு வினாடிகள் அப்படியே பிரமித்துப் போய்விட்டேன் நல்லா நடிக்கிறாங்கப்பா! இதுல கொஞ்சம் படத்துல காட்டினா ஆஸ்காரையே அள்ளிடலாமில்லையா! இன்றைக்கு மதியம் ஜெயாவையும், சன்னையும் மாறி மாறிப் பாருங்க. மகிழ்ச்சியான வீக் எண்டுக்கு நான் காரண்டி :-)

29 பின்னூட்டங்கள்:

At Saturday, 07 October, 2006, சொல்வது...

ஒருத்தர் நம்மளப் புகழும் போது ஒரு மாதிரி இருக்கே....இப்படியெல்லாம் பொய்ப் புகழ்ச்சி செய்யும் போது கருணாநிதியும் ஜெயலலிதாவும் எப்படித்தன் கேட்டுகிட்டு இருந்தாங்களோ..அவங்களுக்கும் பொழப்பில்ல. நடிச்சவங்களுக்கும் பொழப்பில்ல....விடுங்க உஷா....

 
At Saturday, 07 October, 2006, சொல்வது...

சுடச்சுட சன் டிவி (முதல் நாள் நிகழ்ச்சி) பார்த்த மகிழ்ச்சியுடன் எழுதுகிறேன்.

ஆத்தா தொலைக்காட்சியை பார்க்காத குறையை நீக்கும் :) பதிவு.

நன்றி

 
At Saturday, 07 October, 2006, சொல்வது...

உலகமே ஒரு நாடக மேடையாமே. எல்லோரும் அதில்தான் நடிக்கிறாங்களாமே.

அது உண்மைதான் போல:-)

 
At Saturday, 07 October, 2006, சொல்வது...

---ஒருத்தர் நம்மளப் புகழும் போது ஒரு மாதிரி இருக்கே---

நமக்குக் கூச்சமாக இருந்தால், அங்கேயே 'தயவு செய்து தனிமடலிடவும்; நிறுத்தவும்' என்று பணிவன்புடன் மறுத்து ஒதுக்குவோமே!?

இவர்கள் இருவருமே பெரு அவா கொண்டு, புளகாங்கிதமடைவதை சன் டிவி கேமிராக்களே காட்டி மகிழ்கிறதே?

'கொசுக்களைத் தடுத்து சிக்குன் குனியாவை ஒழிப்பது எப்படி' போன்ற முழு நீள நிகழ்ச்சி நடத்துங்கள் என்று சொன்னால், அதற்கு பெயர் 'பொறுப்புள்ள முதலமைச்சர்'.

இப்போது செய்துள்ளது, 'நான் உனக்கு விசிறி தருகிறேன்; நீ என் முதுகை சொறி' என்னும் பம்மாத்து பிம்ப எண்பது வயசு ஆசை.

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

அட நேத்து எங்க வீட்டுலயும் இதே கூத்து நடந்துது!! :)

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

ராகவன் சொன்னது,
"இப்படியெல்லாம் பொய்ப் புகழ்ச்சி செய்யும் போது கருணாநிதியும் ஜெயலலிதாவும் எப்படித்தன் கேட்டுகிட்டு இருந்தாங்களோ..அவங்களுக்கும் பொழப்பில்ல. நடிச்சவங்களுக்கும் பொழப்பில்ல....விடுங்க உஷா"

சரியாகச் சொன்னீர்கள் ராகவன்..

யாரோ சொன்னது போல் sycophancy is rooted in our culture..esp pure(?) Dravidian Culture.

பாலா

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

// யாரோ சொன்னது போல் sycophancy is rooted in our culture..esp pure(?) Dravidian Culture.

பாலா //

ஒரு சின்ன திருத்தம் பாலா. sycophancy is rooted in our culture..esp pure political Dravidian Culture.

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

கடுப்புல எழுதினீங்களா, உஷா ;-)
//யப்பா! ரெண்டு வினாடிகள் அப்படியே பிரமித்துப் போய்விட்டேன் நல்லா நடிக்கிறாங்கப்பா! இதுல கொஞ்சம் படத்துல காட்டினா ஆஸ்காரையே அள்ளிடலாமில்லையா! இன்றைக்கு மதியம் ஜெயாவையும், சன்னையும் மாறி மாறிப் பாருங்க. மகிழ்ச்சியான வீக் எண்டுக்கு நான் காரண்டி :-)
//
இதுக்கு நல்லா சிரிச்சேன் :)
நேத்து அந்த "புகழ்ச்சி"க் கூத்து நிகழ்ச்சியை விட்டு விட்டு (நமீதா டான்ஸ மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு தான்:)) நானும் பார்த்தேன் !

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

எல்லாரும் இப்ப பொறாமைப்படப் போறீங்க (இல்லை பரிதாபப்பட )
எங்க வீட்டுல டிவி யே கிடையாது :)

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

ராகவா இது நம் திராவிட பண்பு என்று பெருமை கொள்ளாதே. இதே போன்ற கூத்தை தெலுங்கு, கன்னட சேனலிலும் பார்த்துள்ளேன். ஆமாம் தெலுங்கு கன்னடமும் திராவிட நாட்டினுள் அங்கம் தானே :-)

பாபா! தன்யன் (னி) ஆனேன் :-)

துளசி, நடிப்பு என்று சாதாரணமாய் சொல்லிட்டீங்க, இது உலகமகா நடிப்பு. பிராக்கட்டுல ஆபாசம் என்றுப் போட்டுக்குங்க.

பொற்கொடி வயிற்றெரிச்சல்.

பாலா, எத்தனை பணம் வேஸ்ட். திரும்ப திரும்ப மம்மி செல்லமா டாடி செல்லமா என்று சிபி ஆடுவதும், என்ன பேசுவது என்று உளரிக்கொட்டுவதும், இதெல்லாம் யாராக இருந்தாலும் உயர்பதவியில் இருப்பவர்கள் ஊக்கிவிக்கக்கூடாது.
அடுத்து ரஜினிகாந்த. பிறரைப் பற்றி பொதுவில் நாலு நல்ல வார்த்தை செல்வது நாகரீகம்தான். அதற்காக ஓவராய் பில்டப் கொடுத்தால்,
தமாஷாக போய்விடுகிறது. சமீபத்தில் சிவாஜியின் சிலை திறப்பு விழாவிலும் இதையே செய்தார். வைகோவிற்கு பிறகு மைக்கைப் பார்த்தால் ரஜினிகாந்த் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார்.

அன்புடன் பாலா,
அதே கூத்துதான். நம்ம தலைவர் பார்த்துக்கொண்டு இருந்தார். அவ்வப்பொழுது கண்ணில் விழுந்ததை எழுதினேன். ஆனால்
குத்தாட்டம் ஆடிய தவமாய் தவமிருந்து ஈரோயின் பத்மப்ரியாவை குறிப்பிட மறந்துவிட்டேன்.

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

பாரதிராஜா இவ்வளவு சிறந்த நகைச்சுவை நடிகர் எனத்தெரியாமல் போய்விட்டது.

டைரக்டர்கள் சேர்ந்து போட்ட பெரியார், காமராஜர், அண்ணா, எம் ஜி ஆர் கெடப்களும் சூப்பர் நகைச்சுவை.

டி ஆர் கேட்கவே வேண்டாம்:-))

சிரிக்காமல், கூசாமல் இதைப் பார்த்துக்கொண்டிருப்பதற்காகவே இவர்களுக்கு என்ன பதவி வேண்டுமென்றாலும் அளிக்கலாம்.

பழிக்கு பழி விளம்பரம்

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

Usha
It is common in North India as well.

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

இதெல்லாம் வோட்டு போட்ட (போடாத) நமக்கு ஃப்ரீ எண்டெர்டெயின்மெண்ட். நம்ம வரிப் பணத்தையெல்லாம் அவங்களுக்கு வரி விலக்கா குடுக்கும் போது இப்படி ஒரு நாள் எண்டெர்டெயின்மெண்ட் கூட தரலையின்னா எப்படி. அதான். நீங்க ரொம்ப டென்ஷன் ஆவாதீங்கக்கா.

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

முதல் பாதி தான் பாத்திருக்கேன். மறு பாதியையும் இன்று பார்ப்பது என்ற முடிவில் இருக்கிறேன். என்ன தான் அவர்கள் புகழ்ந்து தள்ளினாலும் அவர்கள் ஆடும் ஆட்டங்களைப் பார்க்காமல் இருக்கலாமா? :-) எனக்கென்னமோ இந்த புகழ்ச்சிகளும் நடிப்புகளும் பழகிப் போய்விட்டன போலும். சரிதான் போங்கடான்னுட்டு அவங்க ஆட்டத்தை மட்டும் பாத்துக்கிட்டு இருக்கேன். :-)

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

திரு. கேள்வி கேட்கிறேன் அவர்களே! உங்க பின்னுட்டம் போக மறுப்பதால் எடுத்து ஒட்டியிருக்கிறேன்.
-உஷா

கேள்விகள் கேட்கிறேன் has left a new comment on your post "நல்லா நடிக்கிறாங்கப்பா!":

மக்களே,

//ஒரு சின்ன திருத்தம் பாலா. sycophancy is rooted in our culture..esp pure political Dravidian Culture.
//
இது திராவிட மனப்பான்மை அப்படினு சின்ன வட்டத்தில முடிக்க முடியாது.
ஆதியில ஆண்டவனை பாடியும் ஆடியும் மகிழ்வித்தோம்
அப்புறம் அரசனை பாடியும் ஆடியும்
மகிழ்வித்தோம்
அப்புறம் காசு கொடுக்கும் ஜமீன்களை பாடியும் ஆடியும் மகிழ்வித்தோம்
இன்னைக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்த மன்னர்களை பாடியும் ஆடியும் மகிழ்விக்கிறோம்

இதுதான்யா பரிணாம வளர்ச்சி.

நம்ப யாரையாவது உயர்வா நினைச்சா முழ நீளத்துக்கு உருகி பனியா ஊத்திடறோம். ஆண்டவன் அரசன் எல்லாம் குளிர்ந்து ஜன்னி வர வரைக்கும் விடறதில்லை. மரியாதை செலுத்துவதற்கும், வெட்டியா புகழ்றத்துக்கும் உள்ள வித்தியாசம் கொடுக்கறவனுக்கும் தெரியறதில்லை, வாங்கறவனுக்கும் தெரியறதில்லை.

மக்கள் பிரதிநிதி என்பது ஒரு வேலை. வரிப்பணம் மக்களுக்கு முறையாக செலவிட்டு சமூகம் உயர்த்துவது அவர்கள் வேலையின் வரையறை. ஆட்சியில் அமர்ந்தவுடன் அதை மறந்து விடுகிறார்கள். வரிப்பணம் என்ற மன நிலையில் பார்ப்பதில்லை.
வரிப்பணம் அவர்கள் சொந்த பணமாக மாற்றப்படுகிறது. அந்த நிலையில் மக்கள் பிரதிநிதி மன்னராகிறார். ஜனநாயகம் காணாமல் போகிறது.

நம்ம வீட்டு கெடாவை பக்கத்து வீட்டுக்காரன் பிரியாணி போட்டு விருந்து கொடுத்து நமக்கே அழைப்பு கொடுக்கறான். சாப்பிட்டு அவனுக்கு நன்றி சொல்லிட்டு வந்திட்டு இருக்கோம். கெடா காணாம போனத நாம கவனிக்கறதே இல்லை. முதல் பந்தியில் உட்கார இடம் கிடைக்குமாங்கறதுதான் பிரச்சனையா தெரியுது

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

சங்கர் ஐயோ பாவம்! எத்தனை நகைச்சுவைகளை வாழ்க்கையில் இழந்துள்ளீர்கள் :-)

பினாத்தல் பழிக்கு பழியா? நன்றி :-)

பத்மா! என்ன குண்டு தூக்கிப் போடுகிறீங்க? மன்மோகன் சிங்கும், சோனியாகாந்தியும், வாஜ்பாய்யும் இப்படி உட்கார்ந்து பார்க்கிறார்களா? ஒருவேளை லல்லுவா?

இ.கொ! யாரூய்யா டென்ஷன் ஆனது? இங்குட்டு ஒரு ஸ்மைலி. நான் நகைச்சுவை என்றல்லாவா கடைசி வரியும் சொல்லி இருக்கிறேன்.

குமரா! அப்படியா சங்கதி? குத்தாட்டம் பார்க்க தானே, எங்க தலைவர் நேற்றைக்கு நேரத்திலேயே வீட்டுக்கு வந்துட்டாரா?
இன்னைக்கு இருக்கு கச்சேரி :-)

 
At Monday, 09 October, 2006, சொல்வது...

நாட்டில் நடக்கும் எத்தனையோ கூத்துக்களில் இதும் ஒன்று. அவ்வளவுதான். நான் எல்லாவற்றையும் சகிக்க/சிரிக்க பழகிக்கொண்டு விட்டதால் யாருக்கும் எந்த வெட்கமும் இல்லை.

//குமரா! அப்படியா சங்கதி? குத்தாட்டம் பார்க்க தானே, எங்க தலைவர் நேற்றைக்கு நேரத்திலேயே வீட்டுக்கு வந்துட்டாரா?
இன்னைக்கு இருக்கு கச்சேரி :-) //

நன் இனத்தை காட்டிக் கொடுத்திட்டியே குமரா.. இது நியாயமா?

 
At Monday, 09 October, 2006, சொல்வது...

உண்மைதாங்க உஷா..

அதுலயும் விவேக் ஒரு நீஈஈஈளமா கவிதை எழுதி அம்மாவ வாழ்த்துனது இப்பவும் கண்முன்னாலயே நிக்கிது..

ஆனா ஒன்னுங்க.. மு.கவுக்கும் ஜெ க்கும் இது தெரியாதுன்னா பாக்கீங்க?

ஒருத்தர் கதை வசனகர்த்தா.. மற்றவர் நடிகை..

இதெல்லாமே ஒரு நாடகம். அத பார்க்க போற நாமதான் ஏமாளிங்க..

இந்த கூத்துக்கு ஒரு ஒளிபரப்பு வேற அதுக்கு நீ, நான்னு போட்டி போட்டுக்கிட்டு ஸ்பான்சர்ஸ் வேற..

என்னமோ ரெக்கார்ட் டான்ஸ் பாத்தா மாதிரி இருந்தது. நான் அத மட்டும்தான் பார்த்தேன்.. நடிக, நடிகையர் பேசும்போது ம்யூட் பட்டண தட்டிட்டு பேப்பர படிச்சேன்.

எல்லாமே நம்ம கையிலதான் இருக்கே..

 
At Monday, 09 October, 2006, சொல்வது...

உஷா,
//நான் எல்லாவற்றையும் சகிக்க/சிரிக்க பழகிக்கொண்டு விட்டதால் //

என்பதை

//நாம் எல்லாவற்றையும் சகிக்க/சிரிக்க பழகிக்கொண்டு விட்டதால் //

என படிக்கவும்.. Mம் Nம் பக்கத்தில் இருப்பதால் இந்த பிரச்சினை. :-)

 
At Monday, 09 October, 2006, சொல்வது...

//ஒருத்தர் நம்மளப் புகழும் போது ஒரு மாதிரி இருக்கே....இப்படியெல்லாம் பொய்ப் புகழ்ச்சி செய்யும் போது கருணாநிதியும் ஜெயலலிதாவும் எப்படித்தன் கேட்டுகிட்டு இருந்தாங்களோ//

நடிகர்களுக்கு பொய் அழகு. அந்த நிஜ நடிப்பை கண்டு வியந்து கொண்டிருந்தார்களோ என்னமோ?

இது தொடர்பான மற்றொரு பதிவு.

http://copymannan.blogspot.com/2005/11/blog-post_19.html

தமிழ் செல்வன்

 
At Monday, 09 October, 2006, சொல்வது...

உஷா!
அவங்க ; தாங்க எல்லாம் ஒரே குடும்பத்தவங்க !என அப்பப்போ சொல்லுவாங்க! இது குடும்பவியாதி
பாத்தோமா??? கண்டுக்கவே கூடாது.
யோகன் பாரிஸ்

 
At Monday, 09 October, 2006, சொல்வது...

செம காமெடிதான் போங்க..

***

இதுல கலைஞருக்கு வேற ஞாபகமறதி இருக்கிறதாலதான், இந்த விழா நடக்குதுன்னு வேற ஒரு பில்டப்பு :-))

***

இருந்தாலும், நமீதா டான்ஸ் சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் :-)))

 
At Monday, 09 October, 2006, சொல்வது...

எனக்கு ரெண்டு நிகழ்ச்சி பிடிச்சதுங்க. ஒன்னு கலைஞரோட வரலாற்றைச் சொன்னாங்களே - அது. ரெண்டாவது வடிவேலு நகைச்சுவை நாடகம். உண்மையிலேயே ரசிக்கிற மாதிரி இருந்தது. ஓவரா புகழ்ச்சியும் இல்லை. ஆனா அந்தக் குறையை நாடகம் முடிஞ்ச பிறகு உருகி உருகி ஆனந்தக் கண்ணீர் வடித்து ஐயாவே கைகூப்பி ஏற்றுக் கொள்கிற அளவுல பாராட்டி/வாழ்த்திப் பேசி சரி செஞ்சுட்டார். :-)

மத்த படி குத்தாட்டங்கள்ல டைலமோ பாட்டு பிடிச்சது.

 
At Monday, 09 October, 2006, சொல்வது...

சினிமா கலைஞர்கள்,
ஒரு காக்கைகள் கூட்டம்.

- கலைஞர் மு.கருணாநிதி.

 
At Monday, 09 October, 2006, சொல்வது...

கொடுத்த காசுக்கு நன்றாக நிகழ்ச்சி கொடுத்தார்களா இல்லையா? மக்கள்ஸ் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ;)
ஆக அம்மாவும் அய்யாவும் ஒன்று என்று அன்று காமராசர் சொன்னதை இன்று கண்டறிந்திருக்கிறீர்கள்.

 
At Tuesday, 10 October, 2006, சொல்வது...

மனதின் ஓசை, நாம் என்றாலும் நான் என்றாலும் ஒண்ணுதாங்க :-)

ஜோசப் சார். என்னமோங்க குத்தாட்டத்தைவிட உளறல் நகைச்சுவையைதான் நல்லா இருந்தது.

யோகன் எல்லாரும் ஒண்ணா? அதெப்படி ஆட்சியிருப்பவர்களை வாழ்த்தும்பொழுது, ஞாபகமாய் எதிர்கட்சியை வாருவார்களே,
அது எந்த ஆட்சியானாலும் :-)


தமிழ்செல்வன், சோம்பேறி பையன்,வெங்கட்ராமன், ஸ்ரீதர் சார், குமரன், மணியன் நன்றி

 
At Tuesday, 10 October, 2006, சொல்வது...

idu biscothu...election bodhu rendu tv um maari maari paathirukeengala??
Ada vida eduvum nagaichuvai kidayave kidayaadhu...

 
At Tuesday, 10 October, 2006, சொல்வது...

அருமை உஷா

http://madhumithaa.blogspot.com/2006/10/blog-post_10.html

 
At Thursday, 12 October, 2006, சொல்வது...

ஆட்டம் கொண்டாட்டத்திற்காக சொல்லவில்லை. ஐஸ் வைப்பதில் வட இந்தியாவிலும் குறைவில்லை என்றுதான் சொன்னேன்.

 

Post a Comment

<< இல்லம்