Friday, May 07, 2010

மாயவரம் புகுந்து வந்த காதை

அதாகப்பட்டது, மயிலாடுதுறை என்று நாமக்கரணம் மாற்றப்பட்ட மாயூரம் என்ற மாயவரத்துக்கு இரண்டு நாள் போய் வந்தோம். சரியான வெய்யில், மின் துண்டிப்பு. என்றும் மாறாத அதே மாயவரம்.

மறுநாள் சித்திரா பெளர்ணமியன்று வைதீஸ்வரன் கோவிலில் விசேஷம் என்று சாரி சாரியாய் ஆயிரக்கணக்கான ஜனங்கள், கையில் கொம்புடன், கோவிலை நோக்கி நடந்துப் போய் கொண்டு இருந்தனர்.

கோடை வெய்யில், காலில் செருப்பு இல்லை. ஐந்து நாட்கள், ஒரு வாரம் என்று பக்கத்து ஊர்/கிராமங்களில் இருந்து, நடந்து வந்துக் கொண்டு இருந்தார்கள். இதே போல சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேர்ந்துக் கொண்டு நடந்து சென்றுக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் பார்த்த நினைவு.

மாயவரத்துல இப்படி எல்லாம் பார்த்ததே இல்லை என்று என் கணவர் அதிசயக்க, இப்ப எல்லாம் மக்களுக்கு பக்தி அதிமாயிடுத்து என்று பக்கத்தில் நின்றிருந்த பெரியவர் பரவசமாய் சொல்ல நானும் ஆமாம் என்றேன்.

பழைய பாலத்தை இடித்துவிட்டு புதுபாலம் வேலை நடந்துக் கொண்டு இருக்கிறது. சுந்தரம் தியேட்டர் இழுத்து மூடிவிட்டு, அங்கு ஷாப்பிங் காப்பிளஸ் வர போகுதாம். இது இரண்டு
தான் மாயவரத்தில் புதுமை ஆங்..புதுசாய் சென்னைக்கு ரயில் மாயவரம் வழியாய் போகுது.

வள்ளலார் கோவில் என்ற தட்சிணா மூர்த்தி கோவிலிலும், குருமூர்த்தி ஸ்கூல் சுவரிலும் உபயம் எஸ். எஸ்.வாசன் (யூ.எஸ்.ஏ) என்ற பெயர் கண்ணில் பட்டது. எனக்கு இந்த பெயரில் ரெண்டு பேரை தெரியும். அதனால் எல்லாம் நமக்கு தெரிஞ்சவங்கத்தான் என்று
குத்துமதிப்பாய் சொல்லி வைத்தேன்.

இருந்த இரண்டு நாளில் ஐயா, பையா படத்துக்கு போகலாம் என்று நச்சரிக்க,ரெட்டைச்சுழி புது படம், சங்கர் தயாரிப்பு எழுத்தாளர் டைரக்ஷன், இமயமும், சிகரமும் நடிக்குது என்றெல்லாம் பில்டெப் கொடுத்து, இழுத்துக் கொண்டு போனால்.. விதி என்னைப் பார்த்து கெக்கே பிக்கே என்று சிரித்தது என் கண்ணிலும் காதிலும் விழவேயில்லை.

படம் ஆரம்பித்த பத்து நிமிடத்துக்கு பிறகே விதியின் சிரிப்பு காதில் விழுந்தது. பக்கத்தில் குறட்டை சத்தம்.

இதுக்கு பையாவே போயிருக்கலாம் என்று நொந்துக் கொண்டேன். அஞ்சலி பார்ட் – 2 போல, சின்ன புள்ளைகள் பெரிய மனுஷத்தனமாய் பேச, பெரீயவங்க சின்ன புள்ளதனமாய் செஞ்சிக்கிட்டு இருக்க, ஏன் சுறா எல்லாம் ஓடுது என்று தெள்ள தெளிவாய் புரிந்துப்போனது.

“தூக்கம் கண்ணை சுத்திக்கிட்டு வந்ததா, படம் எப்படி? என்று கண்ணை கசக்கிக் கொண்டு எழுந்தவரிடம், “ஓ. கே ன்னு சொல்லலாம் என்று கித்தாய்ப்பாய் சொல்லி வைத்தேன். இந்த அறுவையை ஆவியும், கல்கியும் ஆஹா, ஓஹோங்குதுங்க. என்னத்த சொல்ல?

ஓட்டல் சிலம்பொலியில் தங்கினோம். அறையும், சாப்பாடு படு சுமார். மயூரா லாட்ஜ்ஜிலும், காளியாங்குடியிலும் டிபனும், காப்பியும் ஏ கிளாஸ்.

24 பின்னூட்டங்கள்:

At Friday, 07 May, 2010, சொல்வது...

எஸ். எஸ்.வாசன் (யூ.எஸ்.ஏ) என்ற பெயர் கண்ணில் பட்டது. //

நம்ம சீமாச்சுதான் அது, உங்களுக்குத் தெரியாததா??? :D

 
At Friday, 07 May, 2010, சொல்வது...

//கோடை வெய்யில், காலில் செருப்பு இல்லை. ஐந்து நாட்கள், ஒரு வாரம் என்று பக்கத்து ஊர்/கிராமங்களில் இருந்து, நடந்து வந்துக் கொண்டு இருந்தார்கள். இதே போல சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேர்ந்துக் கொண்டு நடந்து சென்றுக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் பார்த்த நினைவு.

மாயவரத்துல இப்படி எல்லாம் பார்த்ததே இல்லை என்று என் கணவர் அதிசயக்க, //


செட்டிநாடு மக்கள் புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி பக்கமிருந்து மாட்டுவண்டி கட்டிக்கிட்டு நடந்தே வருவது ஆண்டாண்டுகாலமாக நடந்துகொண்டே இருக்கிறதே :)

 
At Friday, 07 May, 2010, சொல்வது...

//இது இரண்டு
தான் மாயவரத்தில் புதுமை ஆங்//


மாயவரத்து மருமகள் பின்னே எப்படி ஊரை பத்தி சொல்லுவாங்களாம் :)))

 
At Friday, 07 May, 2010, சொல்வது...

//வள்ளலார் கோவில் என்ற தட்சிணா மூர்த்தி கோவிலிலும், குருமூர்த்தி ஸ்கூல் சுவரிலும் உபயம் எஸ். எஸ்.வாசன் (யூ.எஸ்.ஏ) என்ற பெயர் கண்ணில் பட்டதுஎனக்கு இந்த பெயரில் ரெண்டு பேரை தெரியும்.//

எனக்கு கரீக்டாக அந்த ஒருவரை தெரியுமேஏஏஏஏஏ :))

 
At Friday, 07 May, 2010, சொல்வது...

//மயூரா லாட்ஜ்ஜிலும், காளியாங்குடியிலும் டிபனும், காப்பியும் ஏ கிளாஸ்.//


மயூரா லாட்ஜ் - காபி தேவலாம் ரகம்

காளியாகுடியில் - நிசமாவேவா? - ஆச்சர்யப்படுத்துகிறது !

அப்புறம் பெரியகோவில் பக்கம் போகலயா?

 
At Friday, 07 May, 2010, சொல்வது...

ஆமாம், ஆயில்யன் சொல்வது உண்மையே, வைத்தீஸ்வரன் கோயிலுக்குக் காரைக்குடிப் பக்கமிருந்து மக்கள் பாத யாத்திரை செல்வது உண்டு. சென்ற வருடம் நம் சக பதிவர் கவிநயா கூட ரிச்மாண்டில் இருந்து வந்து பாத யாத்திரை சென்றார்.

 
At Friday, 07 May, 2010, சொல்வது...

முதலில் ஒரு கண்டனம்! மாயவரம் வந்துட்டு வீட்டுக்கு வராம போனதுக்கு.

அடுத்து ஆயில்யன் சொன்ன மாதிரி பல நூறு ஆண்டாக செட்டிமார்கள் காரைக்குடியிலிருந்து வைகோவுக்கு வருவாங்க.

அடுத்து கீதாம்மா சொன்னதுக்கு ஒரு வழிமொழிதல். வல்லளார் கோவில்ல சண்டிகேஸ்வரர் கோவில் கட்டியதும், அவங்க அம்மா பேர்ல கோசாலை கட்டியதும், அந்த குருமூர்த்தி பள்ளி கூறையாக இருந்தது. கும்பகோணம் சம்பவத்துக்கு பின்னே அதை மாடி பில்டிங்காக கட்டி கொடுத்ததும் சாட்சாத் சீமாச்சு அண்ணா தான். இன்னும் மாயவரம் முழுக்க (இன்குலூடிங் சுடுகாடு) சுத்தி பார்த்தா அவர் கட்டி கொடுத்த எல்லாத்தையும் பார்க்கலாமே! அதனால் காலரை தூக்கி விட்டு கொண்டு "எனக்கு சீமாச்சுவை நல்லா தெரியுமே"ன்னு சொல்லிக்குங்க அண்ணி!

திரும்பவும் மேற்கூறிய அதே கண்டனத்தை சொல்லிகிட்டு என் சிற்றுறையை முடிக்கிறேன். (சோடா எங்கப்பா)

 
At Friday, 07 May, 2010, சொல்வது...

//இப்ப எல்லாம் மக்களுக்கு பக்தி அதிமாயிடுத்து என்று பக்கத்தில் நின்றிருந்த பெரியவர் பரவசமாய் சொல்ல நானும் ஆமாம் என்றேன்.//

:-)))))))))))))))))))))))))))

 
At Friday, 07 May, 2010, சொல்வது...

//மயூரா லாட்ஜ்ஜிலும், காளியாங்குடியிலும் டிபனும், காப்பியும் ஏ கிளாஸ்.//

இது இரண்டுதான் மாயவரத்தில் புதுமை ஆங்!

It was not good at all.. Worst things is there is no alternative too.

 
At Friday, 07 May, 2010, சொல்வது...

மயிலாடுதுறை>>மாயூரம்>>மாயவரம்>>மயிலாடுதுறை இப்படித்தான் மாறியதாக அறிகிறேன்!(நான் சொல்வதில் தவறு இல்லாதிருப்பின்)

பதிவு நன்று!

 
At Friday, 07 May, 2010, சொல்வது...

கீதா! சீமாச்சுதான் அந்த எஸ்.எஸ். வாசன் என்று 99% தெரியும். ஆனால் இன்னொரு சீனி"வாசன்"
இருக்காரேன்னு நினைத்துக் கொண்டேன்.

ஆயில்யன், கூட்டம் லட்சகணக்கில் இருக்கும். இவ்வளவு முன்பு கிடையாது என்றார்.

துளசி, ரொம்ப சிரிக்காதீங்க, பல்லு சுளிக்கிக்கப் போவுது ;-)

செளரி, நடுவில் காளியாங்குடி மோசமாய் இருந்தது. ஆனால் இம்முறை மிக மிக நன்றாக
இருந்தது, அப்படியே மயூரா லாட்சும். அர்ச்சனா என்று சிலவருடங்களுக்கு முன்பு ஆரம்பித்ததும்
ஓ.கே. ஆனால் காளியாங்குடி, மயூராவின் மண்ணின் மணம் மிஸ்ஸிங். ஆனால் சாப்பாட்டு
விஷயத்தில் நான் பயங்கர
நச்சு. நிஜமாகவே டிபன் சூப்பர் ;-)

அபிஅப்பா, மாயூரத்துலயா இப்ப இருக்கீங்க? ஆம் என்றால் சே, மிஸ் பண்ணிட்டேனே? அதுக்கு
என்ன விரைவில் இன்னொரு டிரிப் போட்டால் ஆச்சு.

ஜோதிபாரதி, முதலில் மயிலாடும்துறை ;-)

 
At Friday, 07 May, 2010, சொல்வது...

1300 ஆண்டுகளுக்கு முன்பே திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில் பாடியிருக்கிறார் மயிலாடுதுறை என்று.

மயிலாடுதுறை தான் மாயவரம் ஆனது.

 
At Saturday, 08 May, 2010, சொல்வது...

Aairam analum maurampola aakadhu.enga mannu.s.sivasuresh@yahoo.com

 
At Saturday, 08 May, 2010, சொல்வது...

ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது!

அது சரி.. உங்க மன்சாட்சி ஒத்துக்கிட்டாலும் நீங்க அதை வெளியில சொல்லவா போறீங்க?!

***

மாயுரம் வந்து இன்னொருத்தனையும் பாக்காம மிஸ் பண்ணிட்டீங்க!

 
At Saturday, 08 May, 2010, சொல்வது...

அன்பின் உஷா,
எங்க ஏரியாவுக்கு வந்திட்டுப் போயிருக்கீங்க.. முன்னாடியே சொல்லியிருந்தால் இன்னும் வகையா கவனிச்சிருக்கலாம். எங்க வீட்டுக்கு நாலு தப்படி முன்னாடி வரைக்கும் வந்தவங்களை வீட்டுக்குள்ளாற கூப்பிட முடியலையேன்னு தான் குறை.. அதுவும் அபிஅப்பா தொகுதியிலேயே சுற்றிக்கிட்டிருக்கும் நேரத்துல !!


அந்த இடத்துல யூ.எஸ்.ஏ எல்லாம் நான் போடச்சொல்லலை. எல்லாம் மக்கள் அவங்களே ஆர்வத்துல போட்டுடறாங்க. நான் இன்னும் என்னை மயிலாடுதுறை சீமாச்சுவாவே தான் நெனச்சிட்டிருக்கேன். என்னமோ அது ஒரு அடையாளமாப் போச்சி..

நானே வந்து ஒப்புதல் வாக்குமூலம் தருவதற்கு முன்னால் வந்து சொன்ன அன்பு பதிவு நண்பர்கள் கீதாம்மா, ஆயில்ஸ், அபிஅப்பா அனைவருக்கும் நன்றி !!!

பதிவர் ஜாவர்லால் மயிலாடுதுறை சென்று வந்த பதிவு

 
At Saturday, 08 May, 2010, சொல்வது...

உஷாக்கா

மாயவரம் போயிட்டு வந்தீங்க சரி ஆனா அதைப் பதிவாப் போட்டு இப்ப மாயவரம் டெரர் பாய்ஸ் எல்லாம் பொங்கி எழ வச்சிட்டீங்களே ;)

 
At Saturday, 08 May, 2010, சொல்வது...

கோமதி அரசு, சுரேஷ் நன்றி

மாவரத்தான், உலமெல்லாம் சுற்றி இருக்கிறேன். ஒரு வருட இடைவெளியில் நகரின் தோற்றம்
மாறிவிடுகிறது. ஆனால் மாயவரம் மட்டும் கடந்த இருபத்தீரண்டு ஆண்டாய் அப்படியே இருக்கு.
என்ன கிழவிக்கு மேக்கப் போட்டால் போல, கடைவீதியில ஒரு கட்டிடத்தை ரெனவேட் செஞ்சிருப்பாங்க. அவ்வளவுதான் :-)

பிரபா, இன்னும் ரெண்டு மூணு தலைங்க பாக்கி ;-)

சீமாச்சு சார், ஒரு பதிவர் மீட்டிங் மாயவரத்துல போட்டுடலாம். அடுத்து எப்ப இந்தியா வரீங்க?

 
At Saturday, 08 May, 2010, சொல்வது...

ஒரு வருட இடைவெளியில் நகரின் தோற்றம்
மாறிவிடுகிறது. ஆனால் மாயவரம் மட்டும் கடந்த இருபத்தீரண்டு ஆண்டாய் அப்படியே இருக்கு.//

என்னைப் பொறுத்த வரையிலும் ஒரு நகரின் ஆன்மா இந்த மாறாத தன்மையிலே தான் இருக்கு உஷா! எழுபதுகளின் கடைசி வரையிலும் நான் பார்த்த மதுரை வேறே. இப்போப் பார்க்கிற மதுரை வேறே. இதை முன்னேற்றம் என்ற அளவிலே என்னாலே ஏத்துக்க முடியலை. மதுரையின் ஜீவனே போய், அதன் அழகு கலைக்கப் பட்டு, நீங்க சொன்னீங்களே? கிழவிக்கு மேக்கப்னு, அதைவிட மோசமாய் நாகரீக அலங்காரங்கள் செய்யப் பட்டு, மதுரையா இது??? இல்லை, வேறே ஏதோ ஊர்னு நினைக்க வச்சுடுத்து. இப்போ மதுரைக்குப் போகணும்னாலே எனக்குப் பிடிக்கலை. என்னோட மதுரை என் நினைவுகளிலே பொக்கிஷமா இருக்கு. அதை நினைப்பதிலேயே ஒரு சுகம்! :(((((((((((

 
At Saturday, 08 May, 2010, சொல்வது...

//சீமாச்சு சார், ஒரு பதிவர் மீட்டிங் மாயவரத்துல போட்டுடலாம். அடுத்து எப்ப இந்தியா வரீங்க?//

உஷா, நான் அக்டோபர் மாதம் தீபாவளி சமயத்தில் மயிலாடுதுறையில் 3 வாரம் இருப்பேன். அப்போது மாயவரம் வரும் எண்ணமிருக்கிறதா? இல்லையென்றால் சென்னையிலாவது சந்திக்க முடியுமா?

உங்களுக்குச் சில புகைப்படங்கள் அனுப்பியுள்ளேன்..

நன்றி
சீமாச்சு..

 
At Saturday, 08 May, 2010, சொல்வது...

//என்ன கிழவிக்கு மேக்கப் போட்டால் போல//

எங்க ஊரைப் போயி கிழவின்னு சொல்லிட்டீங்க.. கொஞ்சம் வருத்தம்தான்.


மாற்றங்களே இல்லாததால் எங்க ஊரு என்னிக்கும் குமரி மாதிரிதான்.. என்றும் பதினாறு தான்..

 
At Sunday, 09 May, 2010, சொல்வது...

கீதா, நூறுசதவீதம் ஒத்துக் கொள்கிறேன். அதனால்தானோ மாயவரத்துக்காரர்களுக்கு அந்த பிரேமை கலையவில்லை போல :-) மனுஷர்களும் அப்படியே, அதே கிராமத்து வெள்ளந்தி குணம்.

 
At Friday, 21 May, 2010, சொல்வது...

////ஆனால் மாயவரம் மட்டும் கடந்த இருபத்தீரண்டு ஆண்டாய் அப்படியே இருக்கு.
என்ன கிழவிக்கு மேக்கப் போட்டால் போல, கடைவீதியில ஒரு கட்டிடத்தை ரெனவேட் செஞ்சிருப்பாங்க. அவ்வளவுதான் :-)
//////

ஒரு மருமகளுக்கு புகுந்த ஊரின் பால் உள்ள பற்றுதல் ???? என இதை எடுத்துக் கொள்கிறேன்
:)

 
At Wednesday, 11 August, 2010, சொல்வது...

மாயவரத்து மருமகளா! மிக்க மகிழ்வு. நானும் மாயவரம்தான் -நீடூர்

கட்டுரை நல்லா இருக்கு சகோதரி .

 
At Monday, 06 December, 2010, சொல்வது...

இந்தப் பதிவு எழுதி ஏழெட்டு மாசம் ஆகிப்போச்சு போலும். அடுத்த பதிவு இன்னும் எத்தனை மாதம் கழித்து ..?

 

Post a Comment

<< இல்லம்