Sunday, October 30, 2011

ஒரு நாள் ஒருபொழுது

ரயில் சூரத் நகரின் பிளாட்பாரத்தில் நுழைவதைப் பார்த்ததும் படேல், பாலாஜியை இழுத்துக்கொண்ட ஓடினான்.

“பர்ஸ்ட் கிளாஸ், ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட் படேல்!” கத்தினான் பாலாஜி.

”ஹாங் சாப், இங்க எல்லாமே அன்-ரிசர்வுடுதான் , ஏசி கோச்சில் மட்டும் கூட்டம் ஏறாது, உள்ளே வாங்க” கூட்டத்தில் புகுந்து, முதல் வகுப்பு பெட்டியில்ஏறியவன், “ஹட், ஹட்” என்று ஜன்னல் ஓர இருக்கை ஆளை எழுப்ப, அவன் பயந்து எழுந்தான்.

“ஆப் பைட்டியே சாப்” என்றவன், சூட்கேஸை இருக்கையடியில் தள்ளிவிட்டு
“ நீஙக பேன்ட்ரால எறங்கிடுங்க. ஏர்போர்ட்ல டிராப் பண்ண சர்மா வந்துடுவான்” என்றுக் கத்திக் கொண்டே நகர தொடங்கிய ரயிலில் இருந்து குதித்தான் படேல்.

கண்ணால் எண்ணினான் பாலாஜி. இருக்கைகளில் நெருக்கி அடித்துக் கொண்டு பதினாறு பேர்கள் .தரையில் வரிசையாய் மூன்று பெண் குழந்தைகள். எதிரில் அப்பிள்ளைகளின் தகப்பன் போல, அவன் கையில் மூன்று வயதிருக்கும் ஒரு ஆண் குழந்தை. அப்பனின் சட்டை காலரை சவைத்துக் கொண்டு இருந்தது. நைலான் புடைவையில் முகத்தில் முக்காடு இட்ட மனைவி.

அடுத்து பளபளவென்று சிவப்பு சட்டையணிந்திருந்தவன், ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை, பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தலையை சீவிக் கொண்டு இருந்தான். முகம் , கையில் எல்லாம் முண்டு முண்டாய் இருந்தது, ஏதோ தோல் வியாதிப் போல, தலை ஊறல் எடுக்கிறது, அதற்கு பரபரவென்று சீவிக் கொள்கிறான் போல்! பாலாஜிக்கு குமட்டியது.

ஜன்னல் ஓர இருக்கையில் கண்ணை மூடிக் கொண்டு நாமம் போட்ட சாமியாரும், அவர் காலடியில் சிஷ்ய பையனும்!

சூரத்தில் இருந்து வழக்கமாய் காரில் மும்பை சென்று, சென்னைக்கு விமானம்
பிடிப்பது, கனமழை காரணமாய் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அவசரத்துக்கு கிடைத்த ஆறு மணி நேர முதல்வகுப்பு பயணம்,


சட சட வென்று மேலிருந்து ஏதோ விழ திடுக்கிட்டுப் பார்த்தால் சீட்டு கட்டு சீட்டுகள். மேல் பார்த்தில் வரிசையாய் ஆண்கள் உட்கார்ந்திருந்தனர். பாலம் போல , எதிர் எதிர் பர்த்துக்களில் கால்களை வைத்துக் கொண்டு, காலின் குறுக்காய் பேப்பர் விரித்து, சூடாய் ஆட்டம் நடந்துக் கொண்டு இருந்தது.

இந்தியில் என்ன சொல்வது என்று தெரியாமல் நிமிர்ந்துப் பார்த்து முறைத்தான் பாலாஜி.

“மாப் கீ ஜீயே ” என்றவர்கள் மேற் கொண்டு பேச, சிவப்பு சட்டைக்காரனும் ஏதோ கேட்டான்.

“ஹிந்தி தோடா தோடா மாலும் ” என்றான் கொஞ்சம் தயக்கமாய்.

“நம் தேசிய மொழி தெரியாதா?” என்று அவன் கேட்க , அருகில் இருந்தவர்களும் பேச ஆரம்பித்தார்கள். பாலாஜியின் அருகில் இருந்தவன், “ நீங்கள் மதராசியா ? ” என்றுக் கேட்டான் ஆங்கிலத்தில்.

சுனில் சட்டர்ஜி, அட்வகேட் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பாலாஜி தன் பெயரை சொன்னதும், சிவப்புசட்டைக்காரன், திருப்பதி பகவான் கா நாம்! என்றான் பக்தி பரவசத்துடன்.

ஆள் ஆளுக்கு பெருமாளைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

சி.சட்டை “உங்களுக்கு தெரியுமா? அங்க சாமி தரிசனம் செய்ய பணம் கொடுத்தால்தான் அனுமதிப்பார்கள். சாமியை பார்த்துவிட்டு, மொட்டையும் போட்டுக் கொள்ள வேண்டும்” அவன் அளக்க அளக்க, அப்படியா என்று கூட்டம் வாயை பிளந்தது. அடபாவிகளா, எப்படி எல்லாம் கதைக் கட்டுகிறார்கள், பாலாஜிக்கு அப்படி எல்லாம் இல்லை என்று மறுத்துப் பேச தோன்றியும் பேசவில்லை.


கீழே உட்கார்ந்திருந்த சிறுமி ஒன்று எழுந்திருந்து சுற்று முற்றும் பார்த்துவிட்டு, ஏதோ சொன்னது, தந்தையானவன் சும்மா உட்காரு என்று டப் என்று தலையில் அடித்தான். அவன் மடியில் உட்கார்ந்திருந்த மகன், கையை நீட்டி அக்காளின் தலையில் திரும்ப திரும்ப அடித்துவிட்டு சிரித்தது.

சிறுமி பரிதாபமாய் அம்மாவைப் பார்த்தது. எந்த வித உணர்வும் இல்லாமல்
அம்மா பேசாமல் இருந்தாள். அச்சிறுமி அழ ஆரம்பித்தது. குழந்தை அக்காளின் மண்டையை தட்டுவதை நிறுத்தவில்லை. அப்பன் ரசித்துக் கொண்டு இருந்தான்.

மூத்த சிறுமி சட்டென்று தம்பியின் கையைப் பிடித்து நிறுத்தினாள். தங்கையை எழுப்பி, கழிவறை பக்கமாய் சென்றாள்.

பாலாஜிக்கு சுந்து மாமா பெண் வேணி நினைவு வந்தது. இதோ இந்த பெண்ணைப் போல, ஆறேழு வயசிலும் அப்படி ஒரு பொறுப்பு, முழு பரிட்சை லீவுக்கு ஊருக்குப் போனால் அப்படி ஒரு கரிசனமாய் பார்த்துக் கொள்வாள். ஈரோட்டில் கட்டிக் கொடுத்துள்ளதாய் அம்மா சொன்னாள், எவ்வளவோ வருஷம் ஆச்சு! அவள் தம்பி பாலா சென்னை போர்ட் டிரஸ்ட்டில்தானே இருக்கிறான். போன் நம்பர் கேட்டு பேச வேண்டும்.

அடுத்த ஸ்டேஷனில் அந்த் குடும்பம் இறங்கியது. இன்னும் நான்கைந்து பேர்கள் உள்ளே நுழைந்தனர். தாகம் வாட்டியது. தன்ணீர் குடித்தால் பாத்ரூம் போக வேண்டி இருக்கும், அது என்ன அழகில் இருக்கிறதோ?

காலில் ஏதோ குறுகுறுக்க பார்த்தால் மூன்று நாலு வயது இருக்கும் சின்ன பையன். . ஒரு அழுக்கு துணியாய் தரையை பெருக்கிக் கொண்டு இருந்தது. கொஞ்சம் பூனை கண்கள், நல்ல நிறம்,கொழு கொழு கன்னம், இன்னும் பால் மணம் மாறாத முகம்.

இத்துண்டு குழந்தை. மனம் நெகிழ்ந்து, பத்து ரூபாயை தாளை நீட்டினான். ஜன்னல் ஓர இருக்கை என்பதால் அக்குழந்தை குனிந்து பெருக்கும்பொழுது, அதன் கை அவனின் முன்பக்கம் பட காலை நகர்த்தினான். சில நொடிகளில் மீண்டும் பட, அதே நேரம் பாலாஜியின் கண்கள் அக்குழந்தையை நோக்க வாயை குவித்து சைகை செய்தது.

பதட்டத்துடன் பாலாஜி உடம்பை நகர்த்த முயல, சிவப்பு சட்டைக்காரனின் கைகள் கொத்தாய் அக்குழந்தையின் முடியை பிடித்தது. டபடபவென்று அடிக்க, என்ன என்ன என்ற விசாரிப்புகளும், சி.சட்டைக்காரனின் விளக்கங்களும் தொடர தர்ம அடி என்று பின்னி எடுத்தார்கள்.

வேண்டாம் வேண்டாம் என்று கத்தினான் பாலாஜி. பக்கத்து சீட் அட்வக்கேட் சுனில் எல்லாரையும் விலக்கி அக்குழந்தையை போக சொன்னான். முகம் வீங்கி, உதட்டில் ரத்தம் கசிய அக்குழந்தை, அடுத்த ஸ்டேஷன் வர, ஏறக்குறைய பிளாட்பாரத்தில் வீசப்பட்டது.

அக்குழந்தை சட்டையை தட்டிக் கொண்டு எழுந்து பாலாஜியைப் பார்த்தது, அந்த வெற்றுப் பார்வை கூரான கத்தி அடிவயிற்றில் இறங்குவதைப் போல இருந்தது. கடவுளே என்று கண்களை மூடிக் கொண்டான் பாலாஜி.

.
“இதுங்க எல்லாம் ஒரு கூட்டம், கொஞ்சம் சபலப்பட்டு போனீங்கன்னா அவ்வளவுதான். ஒதுக்குப்புறமாய் கத்தியோட கூட்டமா இருப்பாங்க, எல்லாத்தையும் புடுங்கிட்டுதான் விடுவாங்க” மேலிருந்து ஒரு குரல்.

“ இந்த அடி எல்லாம் அதுங்களுக்கு பழக்கம். இன்னும் நல்லா நாலு போட்டு இருக்கணும். இந்த வயசுல..” ஒரு கெட்ட வார்த்தை வாயில் இருந்து உதிர்ந்தது

“பசிக் கொடுமை, உங்களுக்கு புரியாது “ சுனில் சொன்னதும்

”. துர்காஷ்டமிக்கு பத்து நாட்கள் உபவாசம் இருப்பேன். ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதம் தான். பசின்னா எனக்கும் தெரியும்.” சி.சட்டை சொல்ல கூட்டம் ஆமோதித்தது.

சுனில், “ உபவாசம் முடிந்ததும், உணவு உங்களுக்கு தயாராய் இருக்கும்.ஆனால் அடுத்த் வேளை சோறு நிச்சயம் இல்லாதப் பொழுது, ஒரு துண்டு ரொட்டிக்காக, கொலைக்கூட நடந்திருக்கு தெரியுமா?

பாலாஜி கண்களை மூடிக் கொண்டான். திரும்ப திரும்ப அந்த குழந்தையின் முகம். ஏதாவது செய்யணும். டோஸ்ட் மாஸ்டர்ஸ் கிளப்பில் பார்த்த சுரேந்தர் நினைவுக்கு வந்தான். அவனும் அவன் மனைவியும் சேர்ந்து பாலவாக்கம் பக்கம் அனாதை குழந்தைகளுக்கு ஸ்கூல், ஹாஸ்டல் நடத்துவதாக சொன்னாரே, மாச சம்பளத்துல ரெண்டு பர்சண்ட் தந்தா என்ன? நித்யா ஒத்துக்குவாளா? ஏதாவது செய்யணும்

அந்தேரி !அடுத்தது பான்ட்ரா ஸ்டேஷன். யாரோ சொல்வது காதில் விழுந்ததும் கண்களை திறந்தான். கூட்டம் குறைந்திருந்தது.

”இப்படியும் ஒரு உலகம் இருக்கு என்று உனக்கு ஆச்சரியமாய் இருக்கு இல்லையா?” எதையும் கண்டுக்காமல் இருந்த சாமியாய் அழகாய் ஆங்கிலத்தில் கேட்டார்.

“கடவுள் மேலே நம்பிக்கையே போயிடுச்சு. அந்த குழந்தை என்ன பாவம் பண்ணியது?” பாலாஜியின் குரல் நடுங்கியது.

சாமியார் தலையை தலையை ஆட்டிக் கொண்டிருந்தார். சில நொடிகளுக்கு பிறகு, ”நாங்கள் நாசிக் போக வேண்டும். உன்னால் உதவ முடியுமா?” கேட்டதும், கையில் கிடைத்த தாள்களை அவரிடம் நீட்டினான் பாலாஜி.

“பகவத் கீதை படி. உன் எல்லா கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் அதில் பதில் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொண்டார்.

பிளாட்பாரத்தில் இறங்கியதும், டிரைவர் வேகமாய் வந்து பெட்டியை எடுத்துக் கொண்டான்.

அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த சிஷ்ய பிள்ளை, “பகூத் அச்சா மகராஜ்! பதில் சொல்ல தெரியவில்லை என்றால் கீதை படின்னு சொல்லிட்டு கண்ணை மூடிக் கொள்வது” கிளுகிளுவென்று சிரித்தது.

அவன் முதுகில் செல்லமாய் தட்டி, “ சுப்.., பத்மாஷ்! ஏக் சில்லம் தய்யார் கரோ செண்ட்ரல் போவதற்குள் ஒரு இழுப்பு இழுக்கணும்” என்றார் பாபா.

செல் அடித்தது. நித்யா! “அஸ்வின் புனா கிரிகெட் ட்ரோணமெண்டுக்கு செலக்ட் ஆயிருக்கான். கோச் இனி, நல்ல ப்யூச்சர் இருக்குன்னு சொன்னார்.

“வாவ்! கிரேட் நீயூஸ் அஸ்வின் எங்கே? ” உற்சாகமாய் விவரம் கேட்க ஆரம்பித்தான்.

“கொஞ்சம் இருங்க, கோச் கூட பேசிக்கிட்டு இருக்கான். அப்புறம் இன்னொரு விஷயம், அஸ்வின் பிரண்ட்ஸ் பார்ட்டி வேணும்னு கேக்கராங்களாம். பாவம் குழந்தையும் ரொம்ப ஆசைப்படுகிறான்” நித்யா சொன்னதும்,

“ என்ன நித்தி, நம்ம குழந்தைக்கு செலவு பண்ணாம, எதுக்கு சம்பாதிக்கிறது? இன்னைக்கு நைட்டே ஒரு கிராண்ட் பார்ட்டி அரேஜ் பண்ணிடு. ஹோட்டல் எதுன்னு அஸ்வின் சாய்ஸ்க்கு விட்டுடு. செலவு பத்தி யோசிக்காதே! என்னோட ஐசிஐசிஐ டெபிட் கார்ட்டை யூஸ் பண்ணிக்கோ, நான் ஆறு மணிக்கு சென்னை ஏர்போர்ட்டில் இருப்பேன்.” என்று உற்சாகமாய் சொல்லிக் கொண்டு இருந்தவன், முகம் மாறியது. மூணு நாலு வயது இருக்கும் பெண் குழந்தை, இடுப்பில் மூக்கொழுக்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு சின்ன கையை பாலாஜியைப் பார்த்து நீட்டியது.

*****************************

வம்சி சிறுகதைப் போட்டி- 2011 க்கு எழுதியது.



.

Labels:

4 பின்னூட்டங்கள்:

At Tuesday, 01 November, 2011, சொல்வது...

என்னடா மார்ச் 2 , 2011kku பிறகு ஆள் அட்ரஸ்சே காணோமே என்று விசனப்பட்டு கொண்டு இருந்தோம். இப்போது சூப்பர் கதையை படித்து நிம்மதி பெறுமூச்சு விடுகிறோம். எல்லாம் சுகம் தன்னள்ளே?

Latha மற்றும்

sridhar

 
At Tuesday, 01 November, 2011, சொல்வது...

கதையை படிச்சேன் உஷா...பாலாஜியின் மனநிலைதான் பலருக்கும்...ரயில்பயணநிகழ்வுகள் நன்றாக எழுதி இருக்கீங்க.நல்ல முடிவும்..வெற்றிக்கு வாழ்த்து.

 
At Thursday, 03 November, 2011, சொல்வது...

கதை நல்லா இருக்கு

 
At Friday, 04 November, 2011, சொல்வது...

நன்றி ஶ்ரீதர் சார் ( போன் செய்கிறேன்) ஷைலஜா, கோபி!

 

Post a Comment

<< இல்லம்