Wednesday, January 02, 2008

புத்தாண்டு சுவாரசியம்- 2008

வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டம். புரியாத பேச்சுகள். காதை பிளக்கும் இசை என்ற கூச்சல். உள்ளூர் பாடகர்கள் பாட, அத்துடன் தேச்சலாய் ஆணும் பெண்ணுமாய் ஒரு குழு நடனம் என்று திரைப்பட பாடல்களுக்கு ஆடியது. இது புது டிரெண்ட். இது சென்னையில்
ஆரம்பித்தாகிவிட்டதா?

ஆனால் வேடிக்கை பார்ப்பது எப்பொழுதே எனக்கு மிக சுவாரசியமான விஷயம். முன்பு கேட்ட சில வம்பு தும்பு செய்திகளை அவனா இவன். அவளா இவள் என்று கேட்டு விளங்கிக் கொண்டேன்.

ஊரூ பேரூ எல்லாம் வேண்டாம். முதல் முறை சந்திக்கிறோம். திரு. எக்ஸின் மனைவி ஓய் என்று வைத்துக் கொள்ளலாம். நானும் எழுத்தாளி என்று போட்டு கொடுக்கப்பட்டதால், கொஞ்சம் ஓரமாய் ஒதுங்கினோம். எடுத்தவுடன், எழுத்தைப் பற்றி அல்லாமல், பெண் எழுத்தாளர்கள் உள்ளாகும் பாலீய பிரச்சனையைப் பற்றி ஆரம்பித்தார்.

உண்மையில் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சமீபத்தில் எழுத ஆரம்பித்தீர்களா என்றுக் கேட்டதற்கு எட்டு வருடமாய் எழுதுகிறேன் என்றார். என்னை விட ஐந்தாறு வருடங்கள் சிறியவளாய் இருக்கலாம்.

உங்களுக்கு அப்படி ஏதாவது பிரச்சனை வந்திருக்கிறதா என்றார்.

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு அப்படி எல்லாம் பிரச்சனை வந்ததில்லை என்றேன். (ஒருவேளை அவரைவிட நான் வெகு சுமாராய் இருந்ததன் பலனாய் இருக்கலாம் :-)

நான் என் தாயகத்தை விட்டு விலகி இருக்கிறேன். எழுதுவதுடன் சரி, எழுத்துவட்டத்துடன் தனிப்பட்ட நட்பு, தொடர்ப்பு குறைவு என்றேன்.

இந்த ஊரில் இருந்தால் எதையும் எழுதி சாதிக்க முடியாது. பல அறிவுஜீவிகளின் நட்பு வேண்டும் என்றார். தன் ஊரில் நடக்கும் பல சந்திப்புகளில் கலந்துக் கொள்வேன் என்றார்.

நான் பதிவர் வட்டம், யாஹ¥ குழுக்கள் இவைகளைப் பற்றி சொன்னேன். கணிணி பற்றி அவருக்கு அதிகம் தெரியவில்லை போல தோன்றியது, அவரின் முக பாவனைகள்!

சந்தித்த சில நிமிடங்களிலேயே ஏன் இந்த விஷயத்தை எடுக்க வேண்டும்? உண்மையில் வெகுவாய் பாதிக்கப்பட்டு, ஏதாவது பிரச்சனையா? பிள்ளைகளின் கல்விக்காக, கணவரை விட்டு பிரிந்து சொந்த ஊரில் தனியாய் வசிக்கிறாராம்.

முதல் சந்திப்பு, அவரைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. அதிகம் அவர் சொந்த பிரச்சனையில் நுழைய மனம் இடம் கொடுக்கவில்லை. ஏதோ எனக்கு தெரிந்ததைச் சொல்லிவிட்டு, என்ன எப்படி எந்த மொழியில் எந்த பெயரில் எழுதுகிறார் என்றுக் கேட்டு கொண்டேன். அவர் எழுதிய கதையைப் பற்றிக் கேட்டேன். தன்னுடைய பெஸ்ட் என்று நம்பும் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

தயவுசெய்து இந்த இடத்தில் யாரும் சிரிக்க வேண்டாம். காதை பிளக்கும் இசை என்னும் பேரிரச்சலில் லோக்கல் பாடகர் சினிமா பாட்டு பாட, அந்த சூழ்நிலையில் அவர் தன் கதையை சொன்னார். என் காதிலும் சில சொற்கள் விழுந்தன.

கவிதையும், தத்துவமும் இணைந்த கதை. இதற்கு தத்துவார்த்தமாய் இன்னொரு பொருள் இருக்கிறது என்றார்.

"ஆம்! அதை படித்தால் இன்னும் நன்றாக இருக்கும்" என்றேன்.

பிறகு சாப்பிடும்பொழுது உலக இலக்கியங்களைப் பற்றியும், அதில் நான் அவசியம் படிக்க வேண்டியவைகளையும், எழுத்தாளர்கள் நிறைய படிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டு இருந்தார்.

மணி ஆயிற்று. இன்னும் சில நிகழ்ச்சிகள் இருந்தன. மறுநாள் காலை மகன் பள்ளிக்கு போக வேண்டும் என்பதால் கிளம்பி விட்டோம்.

வெளியே வந்ததும், நினைவுக்கு வந்தது, அவர் என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை, என் எழுத்தைப் பற்றியும் எதுவும் விசாரிக்கவில்லை என்று :-)

21 பின்னூட்டங்கள்:

At Wednesday, 02 January, 2008, சொல்வது...

//
அவர் என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை, என் எழுத்தைப் பற்றியும் எதுவும் விசாரிக்கவில்லை என்று
//
ப்ச்

 
At Wednesday, 02 January, 2008, சொல்வது...

///நானும் எழுத்தாளி என்று போட்டு கொடுக்கப்பட்டதால்///

வெளியூர்ல செம பில்டப் கொடுத்து வச்சுரிக்கீங்க போல தெரியுது :))

மேலே சொன்னது புன்முறுவலை தோற்றுவிக்க மட்டுமே.:))

இப்போ உடம்பு தேவலையா ? கொஞ நாள் முன்னால் அதிக நேரம் கணனியின் முன் உட்கார முடியவில்லை என படித்ததாக ஞாபகம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 
At Wednesday, 02 January, 2008, சொல்வது...

முதலில் புத்தாண்டு வாழ்த்துகள். முதுகு வலி இந்த புது வருஷத்திலாவது உங்களை விட்டகலவும் அதன் மூலம் நீங்கள் கணிணி முன் செலவழிக்கும் நேரம் அதிகரிக்கவும் அதன் மூலம் தமிழ் வலையுலகு ஏகாம்பரியின் முழுநேர எழுத்துப் சேவையைப் பெறவும் நீங்கள் நம்பாத/நான் நம்பும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். ஸ்ஸ்சப்பா.... மூச்சு வாங்குது.

//இது சென்னையில் ஆரம்பித்தாகிவிட்டதா?// ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு.. தெரு முனையிலிருக்கும் மாமி மெஸ் வகையராக்கள் கூட புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒரே அச்சில் வார்த்தது போல பஃபே வகை உணவு முறை + ஆல்கஹால் + எதிலும் சேர்க்க முடியாத குத்தாட்டம் என்கிற கதம்பமான டெம்ப்ளேட்டில்தான் அரங்கேற்றுகின்றன. இது தப்புனெல்லாம் நான் நினைக்கல, ஆனா ஏன் யாருமே வித்தியாசமா எதும் பண்ண மாட்டேங்கறாங்கன்னு தெரியல..

 
At Wednesday, 02 January, 2008, சொல்வது...

//முதலில் புத்தாண்டு வாழ்த்துகள். முதுகு வலி இந்த புது வருஷத்திலாவது உங்களை விட்டகலவும் அதன் மூலம் நீங்கள் கணிணி முன் செலவழிக்கும் நேரம் அதிகரிக்கவும் அதன் மூலம் தமிழ் வலையுலகு ஏகாம்பரியின் முழுநேர எழுத்துப் சேவையைப் பெறவும் நீங்கள் நம்பாத/நான் நம்பும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.//

நானும் இதையே ரீப்பிட்டீக்கிறேன் :)))))))

 
At Wednesday, 02 January, 2008, சொல்வது...

உஷா வந்திட்டேன் இனிமேலும் வருவேன்!!
புத்தாண்டு வாழ்த்துகள்!

அந்த எழுத்தாளர் உங்ககிட்ட ஒண்ணும் கேக்கல எதுவும் விசாரிக்கலயா? போறதுவிடுங்க...அறிவுஜீவின்னு தன்னைத்தானே நினைச்சிக்கறவங்க எல்லாம் இப்படித்தான்! வெளிமாநிலத்துல நீங்க எழுத்தாளர் என்பதால் அழைக்கப்பட்டு போனது எங்களுக்கு பெருமையான விஷயமாச்சே!

 
At Wednesday, 02 January, 2008, சொல்வது...

மங்களூர் சிவா, "ப்ச்" பக்கத்தில் ஸ்மைலி போட மறந்துவிட்டாயா :-)

ச.சங்கர், லஷ்மி! முதுகுவலியுடன் (னும்) வாழ பழகிக் கொண்டு விட்டேன் :-)))

லஷ்மீ, ஆயில்யன்! பாவம் கடவுள், இந்த ஜீஜீபி மேட்டருக்கு எல்லாம் அவரை ஏன் இழுக்க வேண்டும்? அவருக்கே ஏகப்பட்ட
வேலைகள், பிரச்சனைகள்.

ஷைலு, ச. சங்கர் சொன்னப்பொழுது புரியவில்லை. இப்ப புரிஞ்சிடுச்சு. தன் மனைவி எழுத்தாளர் என்றதும், வேறு
வழியில்லாமல் என் கணவர், தன் மனைவியும் எழுத்தாளி என்றார். அஷ்டே :-) பொதுவாய் எங்களுக்குள் என்றாவது
தகராறு என்றால், அன்று யாராவது மாட்டினால் ' என் மனைவி ஒரு ரைட்டர்" என்று அறிமுகப்படுத்துவார். அது என்னவோ ஒரு சில செகண்டுகள் எந்த ரியாக்ஷனும் எதிர் புறம் வராது. பின்பு ஒருவகையான பீதியோ அல்லது அதிர்ச்சியோ ஏற்பட்டு, வெரி குட், வெரிகுட் என்று வேகமாய் சொல்வார்கள். ஆனால் என்ன எழுதுகிறேன் என்று யாருமே கேட்டதில்லை :-)
ஒருவேளை மங்கையர்மலர் வகையறா எழுத்தாய் இருக்கும் என்று தீர்மானித்து இருப்பார்களோ ?????

 
At Wednesday, 02 January, 2008, சொல்வது...

நல்ல கொண்டாட்டம்தான். எழுத்தாளர் சந்திப்பைச் சொன்னேன்.

புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

 
At Wednesday, 02 January, 2008, சொல்வது...

// உலக இலக்கியங்களைப் பற்றியும், அதில் நான் அவசியம் படிக்க வேண்டியவைகளையும், எழுத்தாளர்கள் நிறைய படிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டு //

அப்ப வலையுலகில மட்டும்தான் ஈகோ பீலா கோஷ்டி இருக்கானு/ளுங்கங்கிற என்னோட நெனப்பு தப்பா?

 
At Wednesday, 02 January, 2008, சொல்வது...

துளசி, சிறுதிருத்தம்- எழுத்தாளர் ஒருவரை நான் சந்தித்தேன் :-)

முகமூடி அண்ணாச்சி, உங்க கணிப்பு தப்புதான். எல்லாரும் மனிதர்கள்தானே :-)))))))))))))

 
At Thursday, 03 January, 2008, சொல்வது...

//
அவர் என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை, என் எழுத்தைப் பற்றியும் எதுவும் விசாரிக்கவில்லை என்று
//

அவருக்கு தனது கதையை முடிக்கவே நேரம் இல்லாதிருக்கும், பின்னர் தானே அடுத்தவர் நினைவு வரும் :)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !! உங்கள் வேகத்தை முதுகுவலி தடுக்காமல் இருக்கட்டும் !

 
At Thursday, 03 January, 2008, சொல்வது...

மணீயன், எங்க இருந்தால் என்ன? கதைக்கு விஷயமா கிடைக்காது:-)
நன்றி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு வாழ்த்தையும் பிடியுங்கள்.

 
At Thursday, 03 January, 2008, சொல்வது...

புத்தாண்டு வாழ்த்துக்கள் உஷா!

இப்படியும் சிலர்! தன் புராணம் மட்டுமே பேசுபவர்கள்!

 
At Friday, 04 January, 2008, சொல்வது...

கண்மணி, முதலில் பாவமாய் இருந்தது. ஆனால் கொஞ்சம் யோசித்துப்பார்த்ததும் இது ஒருவகையான மன கோளாறு
என்று தோன்றியது. முன்பின் தெரியாதவளிடம் பார்த்தவுடன்,பேசும் பேச்சா இது? அவர் மொழியில் பிரபலம் ஆனவராம்.
இவர்கள் எல்லாம் என்னத்த எழுதி, கிழிக்கப்போறாங்க தெரியவில்லை :-(

 
At Friday, 04 January, 2008, சொல்வது...

அவங்க பேரு ஏகாம்பரிதானே... :))

நல்ல வேளை அவங்க எழுத்தாளின்னு சொன்னதோட நிறுத்திக்கிட்டாங்க. அவங்க வேற எதாவது சொல்லப் போக, அதுக்கும் உங்க தங்கமணி இவளும் அப்படித்தான் எனச் சொல்லி இருந்தால்.. :))

புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா...

 
At Friday, 04 January, 2008, சொல்வது...

நல்ல சுவாரசியம் தான் உஷா. நாம அவங்களைப் பத்தி கேக்கணும்ங்கறதுக்காகவே நம்மளைப் பத்தி ஒரே ஒரு விசாரிப்பு மட்டும் செய்றவங்களையே நிறைய பாத்திருக்கேன். யாராவது என்னை ஏதாவது விசாரிச்சா உடனே நான் சுதாரிச்சுக்கிருவேன். அவங்க கேட்ட கேள்வியைத் திருப்பி அவங்களையே கேட்டிருவேன். தொடர்ந்து இன்னும் ரெண்டு மூனு கூடுதலா விசாரிக்க முடியும்ன்னா அதையும் கேட்டிருவேன். எதுக்கு வம்பு?! :-)

நானும் இப்ப ஒரு தொடர்கதை எழுதி முடிச்சுட்டேன். (14 அத்தியாயங்கள்). அப்ப நானும் எழுத்தாளர் ஆயிட்டேனா இல்லையா? :-)

 
At Friday, 04 January, 2008, சொல்வது...

இலவசம், ரங்கமணியை தங்கமணி ஆக்கிட்டீங்களே? என் ரங்கமணி ரொம்ப சமத்து. ஏகாம்பரியின் கணவன் போல "மேல் சாவனிஸ்ட்" இல்லை. அப்படி எல்லாம் விட்டுக் கொடுக்க மாட்டார்.

குமரன்,
சில சமயங்களில் நான் வாயை இறுக்க மூடிக் கொண்டு, கேட்டுக் கொள்வேன். அப்பதானே இப்படி விஷயங்கள் கிடைக்கும்:-)


//நானும் இப்ப ஒரு தொடர்கதை எழுதி முடிச்சுட்டேன். (14 அத்தியாயங்கள்). அப்ப நானும் எழுத்தாளர் ஆயிட்டேனா இல்லையா? :-)//


அது என்ன அப்படி கேட்டுட்டீங்க? மொதல்ல நாம நம்மை நம்பணும் :-)

 
At Saturday, 05 January, 2008, சொல்வது...

உஷா,

உலக எழுத்தாளர்களை எல்லாம் வாசிச்ச ஒரு எழுத்தாளினியை சந்திச்சு இருக்கீங்க, வாழ்த்துக்கள் :)

அப்டியே, நம்ம 'மாஸ்டர் பீஸை' அவங்க கிட்ட எடுத்து விட்டிருக்கலாமே ;-) புரியும்னு நெனைக்கிறேன் !!!

//வெளியே வந்ததும், நினைவுக்கு வந்தது, அவர் என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை, என் எழுத்தைப் பற்றியும் எதுவும் விசாரிக்கவில்லை என்று :-)
//
ஒரு பெரிய எழுத்தாளினி நம்ம எழுத்தைப் பத்தி விசாரிக்கலையே என்ற ஆதங்கம் (!) புரியுது, நீங்க ஸ்மைலி எல்லாம் போட்டாலும் கூட ;-)

புத்தாண்டு வாழ்த்து மடல் வந்துது இல்ல ...

எ.அ.பாலா

 
At Saturday, 05 January, 2008, சொல்வது...

பாலா,
லேசாக என் சமீபத்து "பெருமையை"ச் சொல்ல ஆரம்பித்து, சரியான ரெஸ்பான்ஸ் இல்லாததால் விட்டு விட்டேன்.
புத்தாண்டு வாழ்த்து, நான் யாருக்கு அனுப்பினேன், எனக்கு யார் அனுப்பினார்கள், பொன்ஸ் நட்பு வட்டம் அனுப்பிய பதில்மரியாதைகள் எவை எவை என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறேன்.
ஆக, உங்களுக்கு இங்கு பு.வாழ்த்துக்கள் சொல்லிவிடுகிறேன்.

 
At Saturday, 05 January, 2008, சொல்வது...

முதல்ல உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டமின்னு சொல்லிட்டு.. இது புது டிரெண்டின்னு சொல்லியிருக்கீங்களே உஷா... அந்த எழுத்தாளினியை பார்த்த சந்தோஷமா? ;-)

 
At Sunday, 06 January, 2008, சொல்வது...

உஷா... அந்த எழுத்தாளினியை பார்த்த சந்தோஷமா? ;-)//


காட்டாறு :-)

உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 
At Saturday, 12 January, 2008, சொல்வது...

//
அவர் என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை, என் எழுத்தைப் பற்றியும் எதுவும் விசாரிக்கவில்லை என்று
//

தப்பிச்சாங்க =)))
அது என்ன அப்படி கேட்டுட்டீங்க? மொதல்ல நாம நம்மை நம்பணும் :-)
அதானே.

 

Post a Comment

<< இல்லம்