Wednesday, December 14, 2005

சிலுவைகள்

சிலுவையின் கனம் என்
முதுகை அழுத்திக் கொண்டிருந்தது
வேண்டாம் என்று
இறக்கப் பார்த்தால்
ஓடி வந்து அழுத்தமாய்
ஆணி அறைந்து
ஏற்றிவிட்டு சென்றார்கள்
கோபத்துடன் பார்த்தால்
எல்லார் முதுகிலும்
பல வண்ண சிலுவைகள்!
சிலர் சந்தோஷமாய்
சிலர் சோகத்துடனும்
பலர் எப்படி இறக்குவது
என்று தெரியாமலும்!
தன் பாரத்தை மறந்து
ஒருவர் சுமையை
மற்றவர்கள் கேலி
பேசக்கொண்டு இருந்தார்கள்
நாள் ஆக ஆக சிலுவை
என் அங்கமாக
மாற்றப்பட்டுவிட்டது
அங்கத்தை அறுத்தெறிய
முடியுமா என்ன?

20 பின்னூட்டங்கள்:

At Wednesday, 14 December, 2005, சொல்வது...

ஹிஹி //அங்கத்தை அறுத்தெறிய
முடியுமா என்ன?//
முடியணுங்க மேடம். உண்மையிலேயே நீங்கள் அந்த சிலுவை உங்களுக்கு உபகாரமில்லாததாகபடும் பொழுது.

 
At Wednesday, 14 December, 2005, சொல்வது...

அங்கத்தை அறுத்தெறிய
முடியுமா என்ன?//

தோல்விகளையும், சோகங்களையும் மட்டுமே சிலுவைகளாக நீங்க கற்பனை செய்திருந்தால் அங்கமானாலும் அறுத்தெறிய வேண்டியதுதான். ஆனால் அதுவே கடமைகளும், சிறு சிறு தடங்களுமாயின் சுமக்க வேண்டியதுதான், சந்தோஷத்துடன்!

 
At Wednesday, 14 December, 2005, சொல்வது...

Life is such a sweet poison.... nice way of looking at life

 
At Wednesday, 14 December, 2005, சொல்வது...

//சிலுவைகள்
சிலர் சந்தோஷமாய்
சிலர் சோகத்துடனும்//



சிலுவை - அது
சுகமா? - இல்லை
சுமையா?

யாருக்காகச்
சுமக்கிறோம்
என்பதைப் பொறுத்து!

 
At Wednesday, 14 December, 2005, சொல்வது...

என் முதுகை அழுத்துவதாக நானே உணர்ந்த சிலுவை
இன்று அங்கமாகிப் போனதெப்படி!?

இப்போது அதை தூக்கியெறிய மனமிருந்தாலும்
அறுத்தெரிய இயலவில்லை -
அதுவும் இன்னொரு அங்கெமென்று
என்னோடு பலரும் பழகிவிட்டமையால்

இருந்தாலும் ஒரு நம்பிக்கையிருக்கிறது
என் பிள்ளையாவது சிலுவை சுமக்கக்கூடாதென்று....

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

எல்லார் முதுகிலும் பல வண்ணச் சிலுவைகள்..பலே!பலே! நவீனத்துவத்தை எட்டிப் பிடித்தே தீர்வதுன்னு கிள்ம்பியாச்சா?

சாத்தான்குளத்தான்

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

இதுதான் உடனிருந்து கொல்லும் நோய் என்பதோ?

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

aiyyooooooooooda.... engeyoooooo poiteenga...!

siluvai maripotcheee. athai kavanetcheengala?! :-)

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

மோகன் தாஸ், வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தாலும் எடுத்து, ஆணி அறைந்து பொருத்தியாச்சே! அறுத்தெரிய முடியாமல்
அங்கமாகிவிட்டது. :-), அதனால அந்த சுமையுடன் வாழப்பழகிக்கொண்டே ஆக வேண்டும், ஆனால் இவை உபயோகமில்லாத சுமைத்தான்

ஞான பீடம்! யாருக்காக சுமக்கப் படுகிறது, எதற்காக சுமக்கப்படுகிறது என்றால் தலை விதி. தாணு சொன்னதைப் போல உடன் பிறந்து கொல்லும் வியாதி.

ஜோசப் சார், நான் செய்யும் செயலுக்கும், பேசும் வார்த்தைக்கும் நானே பொறுப்பு. அதன் பலன்களை நான் அனுபவித்தே ஆகவேண்டும்.ஆனால் கவிதையின் பொருள் அது அல்ல!

தேவ், உங்களுக்கு இப்பொழுது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆசிப்ஜி, பின் நவீனத்துவமா, பயமுறுத்தாதீங்க :-)

ராம்கி, பாவமாய் இருக்கு :-)

அன்பு, ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம், இந்த சுமையை இதுநாள் வரை என் பிள்ளைகள் முதுகில் ஏற்றவில்லை. பெண் பயங்கர ஸ்ட்ராங், பத்தாவது, பன்னிரண்டாவது தேர்வின் பொழுது கூட சாமி கும்பிடாத தைரியம் இருக்கு. சாதி என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்த்தாகிவிட்டது.

இப்பொழுது இந்தியாவில் படிக்கிறாள் இல்லையா? காதில் விழும் கதைகள் தமாஷாய் இருக்கு என்று சிரிக்கிறாள்.கடவுள் மறுப்பு தரும் நேர்மை எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அதே சமயம் எது சுதந்திரம் என்ற அவளின் தெளிவான கருத்து எனக்கு தைரியத்தை அளிக்கிறது. நிறைய எழுதலாம், ஒரு நாள் எழுதுகிறேன் நன்றி அன்பு.

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

உண்மைதாங்க கடவுள் மறுப்பு தரும் சுதந்திரம், நேர்மை, தெளிவு ஆச்சர்யமளிப்பதே. ஆனாலும் நீங்கள் சொன்ன சிலுவையை கலட்டி வைப்பதோ, உடைத்தெரிவதோ நீங்கள் புரிந்துகொண்டத்தாய் சொன்ன அளவிற்கு சிக்கலாய்ப்படவில்லை.

ஒருவேளை அதற்கும் நம்மிடம் இருக்கும் சிலுவையின் வேறுபாடுகள் காரணமாயிருக்கலாம்.!!!!!

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

மோகன் தாஸ், முத்து அவர்களின் பதிவில் ஒருவர்/ இருவர் என்னையும் மத, சாதி உணர்வு உள்ளவர்களில் சேர்ந்திருந்தார். பார்த்ததும் ஆச்சரியமாய் இருந்தது. இந்த கவிதை அதைப் பார்த்ததும் எழுந்த எண்ணம். பல முறை சாதியும் மதமும் மனித்தின் அனைத்து பிரச்சனைக்கு காரணம் என்று எழுதியுள்ளேன். நான் பிறந்த இந்துமதம் உட்பட எந்த சமயம் சம்மந்தமான பதிவுகளையும் அதிகம் படிப்பதில்லை, அவற்றிற்கு
பதில் அளித்ததில்லை. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் "தேவை இன்னும் ஒரு பெரியார்" எழுதி பல விமர்சனத்துக்கு உள்ளானேன். ஆக நான் எந்த பிரிவில் உள்ளேன் :-))))
பிறந்த சாதியைக் குறித்து பெருமை பட்ட வேண்டியதில்லை, சிறுமையும் பட தேவையில்லை என் கருத்து.

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

சிலுவையை விடுங்கள்...மகளைப் பற்றிச் சொன்னது ஆச்சரியமாகத்தான் இருக்கு...வாழ்க, இதேபோல் வளர்க

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

மோகன் தாஸ், கடைசி வரியில் சிறு திருத்தம். உயர்ந்த சாதியில் பிறந்ததை பெருமைப்படுவது அபத்தம். காரணம் என்று அடுத்த
வேளை சோற்றிற்கு சேர்த்துவைக்கிறானோ அவன் பிராமணன் என்ற தகுதியை இழக்கிறான். பிறப்பால் பிராமணன்
கிடையாது என்று இந்து சமயம் கூறுகிறது.
அதே போல, ஒருவன் தாழ்ந்த குலத்தில் பிறந்ததற்கு அவமானப்படவும் தேவையில்லை. முன்பு ஒருமுறை எழுதியதுப் போல
இன்னும் சாக்கடையில் இறங்கி சக மனிதனின் கழிவை அகற்றும் அவலத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அவமானப்பட வேண்டும்.

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

மிக்க நன்றி உஷா. நான் சொல்ல நினைத்ததையே தருமி சார் சொல்லிருக்காங்க:

சிலுவையை விடுங்கள்...மகளைப் பற்றிச் சொன்னது ஆச்சரியமாகத்தான் இருக்கு...வாழ்க, இதேபோல் வளர்க!

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

Usha,

good one.....romba azhagaga ezhudhi irukeenga.....onga padhivukal ellam azhamaaga irukke??.....apparam nunipul ngara per edhukku??

Radha

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

// மோகன் தாஸ், முத்து அவர்களின் பதிவில் ஒருவர்/ இருவர் என்னையும் மத, சாதி உணர்வு உள்ளவர்களில் சேர்ந்திருந்தார் //

காட்டுக்குள் வாழ முடிவெடுத்த பிறகு ஓநாய்களின் ஊளைகளுக்கெல்லாம் விளக்கம் சொல்வீர்களா என்ன? ஓநாய்க்கு இடம் பொருள் ஏவல் எல்லாம் தெரியாது. அதற்கு தேவை இருட்டு மட்டுமே... சிலுவையே இறக்கத்தெரிந்த உங்களுக்கு தேவையில்லாத இந்த பாரத்தையா இறக்கத்தெரியாது??

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

அலைகள் ஓய்வதில்லை மாதிரி பூநூலையும் சிலுவை சங்கிலியையும் அறுத்தெறிய ஏன் பாரதிராஜாக்கள் தான் வரவேண்டுமின்பதில்லை, பதிவுகள் போட உஷாக்களும் வரலாமே!

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

//மோகன் தாஸ், முத்து அவர்களின் பதிவில் ஒருவர்/ இருவர் என்னையும் மத, சாதி உணர்வு உள்ளவர்களில் சேர்ந்திருந்தார் //

நானும் பார்த்தேனுங்கோ வருத்தமாத்தான் இருந்துச்சு.

//சிலுவையே இறக்கத்தெரிந்த உங்களுக்கு தேவையில்லாத இந்த பாரத்தையா இறக்கத்தெரியாது?? //

முகமூடியாரே,

//நாள் ஆக ஆக சிலுவை
என் அங்கமாக
மாற்றப்பட்டுவிட்டது
அங்கத்தை அறுத்தெறிய
முடியுமா என்ன?//

இதுதான் உஷாவின் பிரச்சனையே.

 
At Friday, 16 December, 2005, சொல்வது...

மோகன் தாஸ், அவ்வளவு சுலபமான விஷயமில்லை இது. ஒவ்வொருவர் மீதும் மற்றவருக்கு ஒரு தனிப்பட்ட அளவுகோல்கள்
உள்ளன. சாதி, மதம், இனம், நாடு அதனுள் மாநிலம் அல்லது மொழியை சார்ந்தவர்கள் என்று விமர்சனங்கள் உண்டு.
நாகரீகமாகவோ அநாகரீகமாகவோ இத்தகைய பேச்சுகளை எல்லாரும் கேட்டுத்தான் ஆக வேண்டும். நீங்கள் பிறரைப்
அப்படி பேசாவிட்டாலும் உங்களுக்கு கிடைக்கும் விமர்சனங்கள் உங்களை தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.

தாணு, நான் சொல்வது சரியா இல்லையா?

 
At Friday, 16 December, 2005, சொல்வது...

வெளிகண்ட நாதர், சத்தீஷ் நன்றி.

ராதா, எங்கே தமிழ் தட்டச்சு? இன்னும் பிளாக் ஆரம்பிக்க நேரம் வரவில்லையா? ஆனா உண்மையில் எனக்கு எந்த
சப்ஜெட்டிலும் பெரிய அறிவு கிடையாது. எல்லாவற்றிலும் நுனிப்புல்தான். என்றாவது ஞானம் கிடைத்தப் பிறகு பதிவின்
தலைப்பை மாற்றி விடுகிறேன் :-))

அன்பு, தருமி, என் மகளிடம் சொல்கிறேன்.

கு.கோபாலு, சுமையை வேண்டாம் என்னும் பொழுது, ஓரே சிலுவை தத்துவம் ஏங்க?

 

Post a Comment

<< இல்லம்