Wednesday, February 08, 2006

கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : பெரூ மழக்காலம்

துபாய் என்று பொதுவாய் சொல்லப்படும் united Arab emirates நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற முடியாது. விசாக்களில் சில பிரிவுகள் உண்டு. சமீபகாலமாய், இங்கு வீடு, அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கு ரெசிடன்ஸ் விசா தருகிறார்கள். ஆனால் இந்த வீடுகள் விலை மிக மிக அதிகம். சாதாரண மற்றும் குறைந்த சம்பளக்காரர்களால் நினைத்தும் பார்க்க முடியாது.

வேலை செய்பவர்களுக்கான ரெசிடன்ஸ் விசா என்பது நாலாயிரம் திராம்ஸ் அளவில் மாத சம்பளம் பெற்றால் மனைவி, மக்களை அழைத்துவரலாம். அடுத்து குறைந்த சம்பளக்காரர்கள் கணவன் ஒரு விசாவிலும், மனைவியும் சாதாரண வேலை செய்து அவரவர் விசாவிலும் சேர்ந்து வாழலாம். ஆனால் பிள்ளை பெற்று, அந்த பிள்ளைகளை வைத்துக் கொள்ள முடியாது. பல முறை சாதா தொழிலாளர்கள் இப்படி திருமணமும் செய்துக் கொண்டு, பிள்ளைகளை தங்கள் நாட்டில் மனைவியின் தாயின் பொறுப்பில் விட்டு இங்கு வசிக்கிறார்கள்.

பெரும்பாலோர்க்கு அப்படி வேலை செய்யும் பெண் கிடைப்பதும் கடினம், மேலும் மணமான பின்பு துபாய்க்கு வருபவர்களும் உண்டு. ஆக கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி கதைதான். குறைந்த சம்பளம், வறுக்கும் வெய்யில்/ குளிர், ஊரில் பிரச்சனை செய்யும் உறவுகள், மனைவியின் கண்ணீர் போன்றைவைகளால் மன அழுத்தத்தால் அவதிபடுபவர்கள் அதிகம். தற்கொலை செய்திகள் அவ்வப்பொழுது கண்ணில், காதில் விழும்.

இங்கு கடையில் வேலைப் பார்க்கும் ஒருவர் மூன்று மாத விடுமுறையில் கல்யாணம் செய்துக் கொண்டு மீண்டும் அவர் மட்டும் துபாய் வந்தார். வந்த சில நாட்களில் பிரச்சனை. பெண்ணின் நடத்தையில் தவறு இருக்கிறது என்று பெற்றோர் சொல்ல, விரும்பி மணம் செய்துக் கொண்ட மனைவியை சந்தேகப்பட மனம் மறுக்க பைத்தியம் பிடித்து ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இன்னும் சிலரோ வியாபாரம் செய்து பணத்தை அள்ளலாம் என்ற தவறான வழிக்காட்டலில் இருந்ததையும் இழந்து, கடனாளி ஆகி அவதிபடுபவர்கள். சிலர், மனைவி அதிகம் படிப்பறிவில்லாதவளாய் இருந்தால், வீட்டில் உட்கார்ந்து தின்னும் உறவு கூட்டம். இவர்களையும் ஒன்றும் சொல்ல முடியாது. அந்த பெண்ணுக்கு வங்கிக்குப் போகக்கூட ஒரு துணை வேண்டும் என்ற நிலை. சம்பாதித்து அனுப்பும் பணம் வீணாகிறது என்று தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை.

ஆனால் வேலைத் தேடி வரும் முறைசாராத தொழிலாளர்களின் இன்னொரு பிரச்சனை, உப்புமா கம்பனிகளில் மாட்டிக் கொள்வது. சம்பளம் இல்லாமல் தங்கும் இடம் கொடுத்துவிடுவார்கள். சுட்டெரிக்கும் வெய்யிலில் வேலையும் செய்துக் கொண்டு மாதக்கணக்காய் சாப்பாடு, குடிநீர், குளியல் (தண்ணீர் விலை இங்கு அதிகம்) முதற்கொண்டு அனைத்தும் சமாளித்து ஆகவேண்டும். சமீபக்காலமாய் இவர்கள் தெருவில் இறங்கிப் போராட தொடங்கியுள்ளனர். பத்திரிக்கைகளும் இந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன.

ஆண்களுக்கு ஒரு மாதிரி பிரச்சனை என்றால், விசிட் விசாவில் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் வலுக்காட்டாயமாய் ஈடுப்படுத்தப்படும் கொடுமையும் நடக்கிறது. பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பெண் ஒருத்தி, தப்பிக்க ஜன்னலில் இருந்து குதித்து முதுகெலும்பு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். சம்மந்தப்பட்ட அரசுகள் எவ்வளவோ கடுமையான சட்டங்கள் போட்டாலும் ஏமாற்று பேர்வழிகளால் நடத்தப்படும் ஏஜன்சிகளிடம் கணிசமான பணமும் கொடுத்துவிட்டு ஏமாற்றப்படுபவர்கள் அதிகம்.

இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, ஸ்ரீலங்கா போன்ற நாட்டினரே அதிகம் இப்படி பாதிக்கப்படுகின்றனர். தூதரகங்கள் இந்த பிரச்சனையில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்பது பலரின் மனக்குறை. மன அழுத்ததில் அல்ப விஷயத்துக்கு பேச்சு முற்றி கைகலப்பில் முடிவதுதான் எப்பொழுது நடக்கும் சங்கதி. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாய் வைத்து மலையாளத்தில் இயக்குனர் கமல் அவர்களால் எடுக்கப்பட்ட படம் "பெரூ மழக்காலம்".

மீரா ஜாஸ்மின், காவ்யா மாதவன் மற்றும் பீஜூ மேனன் நடித்தது. 2004 வது வருடம் இந்திய அரசால் வழங்கப்படும் சிறந்த சமூக படத்திற்காக விருது இப்படத்திற்குக் கிடைத்துள்ளது.

ஏறத்தாழ சமீபத்தில் செளதி அரேபியாவில் கண்ணுக்கு கண் என்ற இஸ்லாமிய சட்டப்படி தண்டனைப் பெற்று, பாதிக்கப்படவரால் மன்னிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த நெளஷத் என்பவரின் கதைத்தான்.

ரசீனாவின் (மீரா ஜாஸ்மீன்) கணவன் (திலீப்) கை கலப்பில் தன் அறை தோழனைக் ( வினீத்) கொன்றுவிடுகிறார். சம்பவம் நடந்த இடம் செளதி அரேபியா என்பதால், இறந்தவரின் மனைவி கங்கா ( காவ்யா மாதவன்) மன்னித்தால் விடுதலை கிடைக்கும் என்று தெரிந்து, அவரிடம் மன்னிப்பு கடிதம் வேண்டி மன்றாடுகிறார் ரசீனா. இதில் மீரா ஜாஸ்மீன், காவ்யா மாதவனும் போட்டிப் போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். மீரா ஜாஸ்மீனின் தந்தை வேடத்தில் நடிகர் மாமூகோயா, (Mamookoya) செய்வது அறியாமல் தவிக்கும் ஏழை தந்தையின் வேடத்தில் கலக்கியிருக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்தவர்கள் தொகை கணிசமான அளவு அதிகம் என்றாலும் அரபு நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் எண்ணிக்கை 1.1 மில்லியனை எட்டுக்கிறது. 2004 வது வருடம் புதியதாய் ஆரம்பிக்கப்பட்ட வெளி நாட்டு வாழ் இந்தியர்களுக்காக அமைச்சகத்தில் முதலில் திரு. ஜகதீஷ் பைலட்டும், பிறகு திரு. ஜார்ஸ் பெர்னாண்டஸ் அவர்களும் அமைச்சர்களாய் பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். ஆனால் சமீபத்தில் Non- Residence Indians Affairs Ministers ஆக பொறுப்பு ஏற்றுக் கொண்ட கேரளாவைச் சேர்ந்த திரு. வயலார் ரவி அவர்களின் வரவு தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது

9 பின்னூட்டங்கள்:

At Wednesday, 08 February, 2006, Blogger Radha Sriram சொல்வது...

Usha,

UAE mattum than eppadiyaa?? Muscat madhiri naadellam immigrant laws ivvalo strict illa nnu kelvipattruken.....any idea??

Radha

 
At Wednesday, 08 February, 2006, Blogger Unknown சொல்வது...

உஷா அவர்களுக்கு,

இந்த பதிவு நிறைய இந்தியருக்கு போய் சேர்ந்தால் மிகவும் நன்றாக இருக்கும். இக்கரைக்கு அக்கரைப்பச்சை என இருப்பவர்களுக்க்கும், இங்கே வந்தால் பணம் மரத்தினில் எளிதாக காய்க்கும் என நினைப்பவர்களுக்கும் கொஞ்சம்மாவது புரிய வாய்ப்பிருக்கிறது.

நன்றி
ஷங்கர்

 
At Wednesday, 08 February, 2006, Blogger - யெஸ்.பாலபாரதி சொல்வது...

உஷாக்கா...
ஒவ்வொரு முறையும் பதிவு போடும் போது, அதை தமிழ்மணதில் யூ.ஆர்.எல் கொடுத்து பதியு செய்து விடுங்கள்.
இல்லை எனில் யாரேனும் விஷமிகள் விளையாடலாம்.

தோழன்
பாலா

 
At Thursday, 09 February, 2006, Blogger தாணு சொல்வது...

உஷா
இது போன்றே சமீபத்தில் சிங்கப்பூர் வாழ் மக்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லியிருந்தார்கள். புலம் பெயர்தலில் உள்ள கஷ்டங்கள், அதன் கனவில் வாழும் மக்களுக்குப் போய்ச் சேர்ந்தால் நன்றாக இருக்கும்

 
At Thursday, 09 February, 2006, Blogger manasu சொல்வது...

ஒரு ஹைக்கூ.....(மூணு வரி மட்டும் இருந்த அதானுங்க பேரு...)

தேடுவதாய் (காசு) நினைத்து
தொலைத்து(வாழ்வு) கொண்டிருக்கிறோம்
வளைகுடா வாழ்க்கை.

பொதுவாவே கமல் படம் எல்லாமே நல்லாவே இருக்கும்.(மழையெத்தும்முன்பே, இ புழையும் கடந்து, தூவல் கொட்டாரம் என நிறைய.....)

 
At Thursday, 09 February, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

பால பாரதி,
நான் என் பிளாக்கில் போட்டதும், மவுசை நேரம் குறிப்பிடும் இடத்தில் கொண்டு வந்ததும், அங்கு பர்மனட் லிங்க் என்று வரும்
அதைகிளிக்கியதும், அனுப்புக என்று மேலே தெரியும். ஆனால் கணிணியில் நிறைய குறைப்பாடுகள் உள்ளதால், வகைப்படுத்துதல்
வெறும் கேள்விகுறிகளாய் தென்படுவதால் அப்படியே அனுப்பிவிடுவேன். அவை பெரும்பாலும் வகைப்படுத்தாதவையில்
சேர்ந்துவிடும். நட்சத்திர குத்தும் செயல் படுவதில்லை.
வேறு என்ன செய்ய வேண்டும்? யூ ஆர் எல் எது எங்கு சேர்க்க வேண்டும்?

 
At Thursday, 09 February, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

ராதா,
GCC நாடுகளான யூஏஈ, ஓமான், கத்தார், குவைத், செளதி அரேபியா, பஹ்ரெயின் ஆகிய நாடுகளில் விசா சட்டங்கள் ஏறக்குறைய
ஒன்றேதான். எல்லா நாடுகளிலும் அவர்களின் ஜனதொகை அதிகமாவதால், மண்ணின் மைந்தருகே வேலை என்ற சிந்தாந்தப்படி
வேலை வாய்ப்புகள் அருகி வருகின்றன. இன்றைக்கு கத்தாரில் மட்டுமே ஓரளவு வேலை வாய்ப்புகள் உண்டு

தாணு, சிங்கப்பூரை விட இங்கு வெய்யில் மிக மிக அதிகம். ஐம்பது டிகிரி வெய்யிலில் வேலை செய்பவர்களைப் பார்க்கும் பொழுது, என்ன சொல்ல? பளபளக்கும் துபாயின் இன்னொரு பக்கம், நம் தொழிலாளர்களின் வேர்வை நாற்றம் .

துபாய் வாசி, மனசு! இந்த கதைகளை சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம். கவிதை நல்லா இருந்துச்சு :-)

 
At Thursday, 09 February, 2006, Blogger - யெஸ்.பாலபாரதி சொல்வது...

தமிழ்மணம் வலைப்பக்கத்தை திறந்ததும்...
உங்களுக்கு தெரியும் திரையில் இடது கை பக்கம் பாருங்கள்.. அங்கே, "பட்டியலில் சேர்க்க/ இடுகைகளைப் புதுப்பிக்க " என்று போடப்பட்டிருக்கும்.
அதன் கீழ்- யூ.ஆர்.எல் - போட இடமிருக்கும்.

அங்கே உங்களின் யூ.ஆர்.எல்- டைப் செய்து. 'அளி' பொத்தானை அழுத்துங்கள்.

பின் அதுவாகவே வழி நடத்தும்.

வாழ்த்துக்கள்.

 
At Wednesday, 01 March, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

இன்றைக்கு (மார்ச் ஒன்று) வருகை தந்த அத்துழாய் அவர்களே, மிக்க நன்றி. பெயர் மிக அழகாய் இருக்கிறது.

சதயம், பாரதி மிக தாமதமாய் நன்றி.

 

Post a Comment

<< இல்லம்