Monday, October 23, 2006

அப்சல், கிருஷ்ணய்யர் & டெல்லி சிறுவன்

அரசியல் சார்ந்த குற்றங்களுக்கு மரணதண்டனை தீர்வல்ல என்று எழுதியிருந்தேன். அப்சலுக்கு மட்டுமல்ல, மரண தண்டனை என்பதே, மனிதத்துக்கு எதிரானது என் முடிவான கருத்து. ஆனால் சைக்கோ வகையான கொலைகளுக்கு மரணதண்டனை தேவைதான் என்ற எண்ணம் இன்னும் இருந்தது. எண்பதுகளில் பில்லா, ரங்கா கொலை செய்த பள்ளி குழந்தைகளான கீதா, சஞ்சய் கொலை சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கலாம். இத்தகைய கொலையாளிகளுக்கு மரணதண்டனை சரியானதே என்றும் சொல்லும்பொழுது, இதோ இந்த குற்றவாளிக்கு என்ன தண்டனைக் கொடுக்கலாம்?

நான்கு நாட்களுக்கு முன்பு என்.டி தொலைக்காட்சியில் டெல்லியில் நடந்து கொலை சம்பவ செய்தி வந்திருந்தது. வீட்டில் வேலை செய்யும் பதினெட்டு வயது இளைஞன்/ சிறுவன் என்றுதான் சொல்ல வேண்டும், பார்க்க சின்னவனாய் இருந்தான். தான் வேலை
செய்யும் வீட்டு சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறான். பத்து வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறுமிகள், ஐந்து வயது சிறுவன் பயந்து எதிர்க்க, அச்சிறுவனை கொன்றுவிட்டான். பெண் குழந்தைகளுக்கு என்னவாயிற்று என்று இன்னும் சரியாய் விவரம் தெரியவில்லை. இந்த
கொலை செய்தவனை எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் அவனுக்கு பாடம் புகட்டுகிறோம் என்று காலனி மக்கள் ஆக்ரோஷமாய் கூக்குரலிட்டுக் கொண்டு இருந்தார்கள்.
கைது செய்யப்பட்டவன், தவறு செய்துவிட்டேன் என்று சொல்லும்பொழுது தவறு அவன் மீது மட்டுமா என்ற எண்ணம் தோன்றியது.

சிறுவன் என்று பாராமல் வீட்டு வேலைகளை எல்லாம் அவன் மீது ஏவியிருக்கலாம், வாய் வார்த்தைகளாலும், அடி உதையாலும் தன் எஜமானர்களிடம் அவன் படாத பாடு பட்டிருக்கலாம். அந்த கோபம் வன்மமாய் மாறி ஏதும் அறியாத குழந்தைகளிடம் அவன் வஞ்சம் தீர்த்திருக்கலாம். இதை எல்லாம் யோசிக்கும்பொழுது, அவன் மீதான கோபம் குறைந்து, பரிதாபமே மேலோங்கிறது.



ஆனந்த விகடந் இந்த இதழில் வி. ஆர். கிருஷ்ணய்யர் சொன்னது.

ஒரு கொலைக்கு தண்டனை இன்னொரு கொலையா?

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 13&ம் தேதி இந்திய பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. அந்தக் கொடூர நிகழ்வின் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முகம்மது அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத் துவங்கிவிட்டன. அந்தத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களோ, தூக்கில் தொங்க விட்டு தண்டிப்பதே சரி என்று ஆவேசம் பொங்க கூறுகின்றன.



ஜனாதிபதியின் கைகளில் இருக்கும் கருணை மனுவில், அப்சலின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்க... இந்தியாவின் மிக முக்கியமான மனித உரிமை போராளியும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான வி.ஆர்.கிருஷ் ணய்யரை கேரளத்தின் எர்ணாகுளத் தில் இருக்கிற அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

முதுமையின் சுருக்கங்கள் உடம்பில் தெரிந்தாலும் மனதில் தளர்வு துளியும் இல்லை. இரண்டு பேரை கைத்துணையாக அழைத்துக்கொண்டு இப்பவும்கூட மனித உரிமை கூட்டங்களுக்கு போகி றார் கிருஷ்ணய்யர்.

ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு என்று நான் வழங்கிய சில தீர்ப்புகளில் குறிப்பிட்டிருக்கிறேன். இதைத்தான் இந்த தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன் என்றபடி நிறுத்தி நிதானமாகப் பேசுகிறார் கிருஷ்ணய்யர்.

நானும் நீதிபதியாக இருந்தவன். சுதந்திர இந்தியாவில் மக்களால் ஓட்டுச்சீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கேரள அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தவறிழைக்கவும் பாரபட்சமான தண்டனை வழங்கவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு கொலைக்கு தண்டனையாக அரசு இன்னொரு கொலையை நிகழ்த்துவது மகா பாவம்.

1957&ல் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட இந்தியாவின் முதல் கேரள அர சாங்கத்தில் ஈ.எம்.எஸ்&ன் தலைமையிலான அரசாங்கத்தில் நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது என்னிடம் சி.ஏ.பாலன் போட்ட மனு என்னிடம் வந்தது. அவருக்கு உச்சநீதிமன்றம் மரணதண்டனையை உறுதி செய் திருந்தது. ஜனாதிபதி அவருடைய கருணை மனுவை நிராகரித்திருந்தார். உயிர் வாழ்வதற்கான அவரது கோரிக்கை என்னிடம் வந்தபோது நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவருக்கு மரண தண்டனையில் இருந்து விடுதலை வாங்கி கொடுக்க முடிந்தது. அதே மாதிரி உச்சநீதிமன்றத்தில் என்னிடம் வந்த எடிகா அன்னம்மா வின்வழக்கையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இரண்டு இளம் பெண்கள் ஒரு ஆணை காதலித்தார்கள். அதில் எடிகாவும் ஒருத்தி. தன்னைவிட மற்றவளிடம் அவன் நெருக்கமாக இருப்பதாக எடிகா பொறாமைகொண்டாள். எடிகா சமயம் பார்த்து அந்த இன்னொ ருத்தியையும் அவளது குழந்தையையும் கொன்று போட்டாள்.

எடிகாவுக்கு அப்போது வயது 21 அல்லது 22 தான் இருக்கும். அவளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பாயத்தில் என்னோடு நீதிபதி சர்க்காரியாவும் இருந்தார். நான் அவரிடம், இந்த இளம் பெண்னை நாம் தூக்கிலிடகூடாது என்றேன். கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது என்று காந்தி சொன்னதை அந்த தீர்ப்பில் குறிப்பிட்டேன். மரண தண்டனையில் இருந்து தப்பிய பாலனும் சரி, எடிகாவும் சரி... அதன் பின்னர் பயம் தொலைந்து கொலை வெறியோடு அலையவில்லையே!

உலகின் நூற்றுக் கணக்கான நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. ராஜீவ் காந்தியைவிட வஞ்சகமான முறையில் மவுண்ட் பேட்டன் பிரபு கொல்லப்பட்டார். ஆனால், அவரைக் கொன்ற வருக்கு பிரிட்டன் மரண தண்டனை வழங்கவில்லை.

கொலை என்பது ஒருவன் ஆத்திரத்தில் தன்னை இழக்கிற கணத்தில், அவன் அறவே வேறு மனிதனாகி விடுகிற சூழ்நிலையில் நடப்பது. அப்போது எந்தத் தண்டனையைப் பற்றியும் யோசித்துவிட்டு அந்தக் கொடுமையை அவன் செய்வதில்லை. மூளைச் சலவை செய்யப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் இளைஞர் களுக்கும் இது பொருந்தும்.

நான் மரண தண்டனைதான் வேண்டாம் என்று சொல்கிறேனே தவிர, குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளே வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஏனென்றால் நானும் இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சியை ஏற்று வாழும் குடிமகன்தான். மரண தண்ட னையோ, கண்ணுக்கு கண். பல்லுக்கு பல் என்ற பிற்போக் குத்தனம் கொண்டது!

அப்சலின் மரண தண்ட னைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தேசத்துரோகிகள் என்று ஒரு சாரார் கூறுகிறார்களே?

நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது என்று ஒரு தீர்ப்பில் எழுதி னேன். அதைத்தான் இப்போதும் கூறுகிறேன்.

காந்தியடிகள் இன்று உயிரோடு இருந்திருந்தால் அப்சல் மட்டுமல்ல யாரையுமே தூக்கிலிட அனுமதித்திருக்க மாட்டார். அவர் மீது அப்சலுக்கோ, தீவிரவாதிகளுக்கோ ஆதரவானவர் என்று முத்திரை குத்த முடியுமா?

நீங்களெல்லாம் சொல்கிற அளவுக்கு, மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் மக்களிடமிருந்து எழவில்லையே? மக்களின் மனநிலை வேறாக அல்லவா இருக்கிறது?

மக்களிடம் மரண தண்டனைக்கு ஆதரவான சிந்தனைப் போக்கு இருக்கிறது என்பதற்காக நானும் அதை ஆதரிக்க முடியாது. எல்லா நேரமும் மக்கள் மிக நியாயமாக யோசிப்பார்கள் என்றோ நல்ல தீர்ப்பையே கொடுப் பார்கள் என்றோ எப்படிச் சொல்ல முடியும்? மக்களை மந்தைகளாக நினைத்து ஏமாற்றப் பார்க்கிற அரசியல் தலைவர்கள் வேண்டுமென்றால் மக்களின் இந்தக் குறிப்பிட்ட கருத்துடன் பின் செல்லட்டும். நான் மக்களுக்கு நல்ல மேய்ப்பனாக இருக்க விரும்புகிறேன்.

நான் சொல்வதெல்லாம் இதுதான்... அன்பை பளிங்கில் பதித்திடுங்கள்... காயங்களை தூசியைப்போல துடைத்திடுங்கள் என்கிற பாரசீக பழமொழியை நினைவில்கொள்வோம். ஏனென்றால் அன்பு எல்லாவற்றையும் பெற்றுத் தரும். சமாதானத்தையும் நிம்மதியையும் தரும் என்றார் உருக்கமாக!


நன்றி- ஆனந்தவிகடன்,
25- 10- 2006

15 பின்னூட்டங்கள்:

At Monday, 23 October, 2006, சொல்வது...

இப்பொழுதுதான் இன்னொரு பதிவில் அப்ஸலுக்கு மரண தண்டனை சரிதான் என்று எழுதி விட்டு வந்தேன்.

கிருஷ்ணைய்யர் சொல்லும் படி, அரசே மற்றவர் உயிர் எடுப்பது தவறல்லவா?
civilized society யில் இப்படி விடலாமா என்பதெல்லாம் சரிதான்?

ஆனால், உள்ளூரில் ஒரு உத்வேகத்தில் செய்யும் கொலை, கற்பழிப்புகளுக்கு வேண்டுமானால், மரணத்திர்க்கு பதில் ஆயுள் தண்டனையாக கொடுக்கலாம்.

ஆனால், தேச அமைதியை குலைக்கும் எந்த செயலுக்கும்/துரோகிக்கும் மரண தண்டனை சரிதான் என்பதே அடியேனின் எண்ணம்.

 
At Tuesday, 24 October, 2006, சொல்வது...

மரணதண்டனை என்பது அரசு நிகழ்த்தும் கொலை என்பதும் மனித உரிமை அத்துமீறலுக்கு வழிகோலும் என்பதும் சரியே. அதனை பாராளுமன்றம் குற்றவியல் சட்டங்களிலிருந்து எடுத்துவிட சட்டமியற்ற வேண்டும். அதுவரை நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மரியாதை தர வேண்டும்; சட்ட ரீதியான தீர்வுகள் அணுகப் பட வேண்டும். குடியரசுத் தலைவர் ஆய்வில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் எல்லா குடியாட்சி அமைப்புகளையும் கலைத்துவிட்டு மக்களை, ஊடகங்கள் பரிந்துரையில் , கைதூக்கச் சொல்லி தண்டனைகள் கொடுக்கலாம் :((

 
At Tuesday, 24 October, 2006, சொல்வது...

//ஆனால், தேச அமைதியை குலைக்கும் எந்த செயலுக்கும்/துரோகிக்கும் மரண தண்டனை சரிதான் என்பதே அடியேனின் எண்ணம்.// என

bad news என்ற பெயரில் ஒரு good news பின்னூட்டமாக இட்டுள்ளார்.

தேச அமைதியைக் குலைத்த பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு, மும்பைக் கலவரம், குஜராத் கலவரம் ஆகியவற்றில் ஈடுபட்ட அனைவருக்கும் இது பொருந்தும்.

 
At Tuesday, 24 October, 2006, சொல்வது...

உஷா,

கணப்பொழுதில் நிகழ்ந்த தவறுக்கும்...திட்டமிட்டு செய்யப்படும் கொலைக்கும் வித்தியாசம் உண்டு...அதே போல் வயது,கல்வி,சூழ்நிலை அனைத்தும் கனக்கில் கொள்ளப்பட வேண்டும்...நீங்கள் குறிப்பிட்ட நில்லி குற்றம் இழைத்த சிறுவனின் குற்றத்தோடு திட்டம் போட்டு பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த ஒத்துழைத்தவனோடு ஒப்பிடக்கூடாது..அப்ஸல் படித்த பின்விளைவுகள் என்ன என்று தெரிந்த, ஒரு இயக்கம் சார்ந்த, கள்லத்தனமாக அந்நிய நாட்டிற்கு சென்று பயிற்சி பெற்று வந்த ,அது பற்றி எந்த குற்ற உணர்வும் இல்லாத ஒரு ஆள்...தூக்கு/மரண தண்டனை தரக்கூடாது என கிருஷ்ணையர் நினைப்பது அவர் கருத்து...அனைவருக்கும் அவரவர் கருத்து உண்டே...

 
At Tuesday, 24 October, 2006, சொல்வது...

katavulE !

 
At Tuesday, 24 October, 2006, சொல்வது...

கடவுளே !

:(

 
At Tuesday, 24 October, 2006, சொல்வது...

உஷா,

பில்லா ரங்காவினை தூக்கில் போட்டதற்கும் சமீபத்தில் வங்காளத்தில் சட்டர்ஜியை தூக்கில் போட்டதற்கும் ஒரே காரணம்தான்...என்னவென்று நினைக்கிறீர்கள்?

 
At Tuesday, 24 October, 2006, சொல்வது...

உஷா, பின்னூட்டத்தில நீங்க குறிப்பிட்ட வெங்காயம் - எந்த வரைட்டி? :) பெரியார், சொன்னாரு, சொன்னாருன்னு சொல்றாங்களே அந்த வெங்காயமா? (ஆனா என்ன விஷயம்னு கரெக்டா இன்னும் தெரியாது எனக்கு! :) ...) இல்ல, பட்டினத்தார் மாதிரி, 'காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா'ன்னு, காமம் தோன்றும் காயம் - வெங்காயம் அப்படின்னு தத்துவம்ஸா? இல்ல, "காயமே திரியாய் - காயத்ரி" மந்திரம் சொல்லி ஜோதி வடிவ கடவுளை தேடும் விஷ்வாமித்ர ஆத்திக "வெங்காயமா?" இல்ல, 'மதினி, சொம்மா ரீல் ரீலா விடுறியே கடைசியில என்னதான் சொல்லுற ஒண்ணுமே இல்லையே அப்படின்னு எல்லாமே வெங்காயம்' அப்படின்னு கலக்கல் பின்னூட்டமா?
எதுனாலும் சரி, "குறுகத் தரித்த குறள்" மாதிரி நச்சுன்னு இருந்தது பின்னூட்டம் - நன்றி! :)

 
At Tuesday, 24 October, 2006, சொல்வது...

உஷா,

கொசு மருந்தடிப்பது சீவகாருண்யம் அல்லதான். ஆனால் என் செய்வது நோய் வராமல் தடுக்க வேண்டியிருக்கிறதே.

பாலியல் கொடுமையாலும், தீவிரவாத்த்தினாலும் தலைமுறை பாதிப்படையும் சராசரி மனிதனை நினைத்து பாருங்கள். அவனது அதிக பட்ச ஆசையே வேலை போய் வீடு வந்து பெண்டு பிள்ளைகளோடு உண்டு உறங்கும் நிம்மதியே. எவருடைய அரிப்புக்கோ இவனது நிம்மதி களப்பலியாக்கப்படும் போது என்ன செய்ய சொல்கிறீர்கள்.

 
At Tuesday, 24 October, 2006, சொல்வது...

Bad news India, Tamil reber, மணியன், புதுச்சுவடி, ச. சங்கர், சில கேள்விகள், ரவியா, பிரபு உங்கள்
கருத்துக்களை சொன்னதற்கு நன்றி.

அரசியல் பிரச்சனையில் என்றுமே வன்முறை தீர்வாகாது. குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வேண்டும் என்றேனே தவிர, மன்னிப்பு விடுதலை என்று நான் சொல்லவில்லை. இருபக்கமும் பரஸ்ப்ர நம்பிக்கையுடன், பிரச்சனையை தீர்க்க
வேண்டும் என்ற விருப்பத்துடன் அமைதி பேச்சு ஆரம்பித்தால் இப்பிரச்சனைகள் தீரலாம் என்பது என் எண்ணம். இதெல்லாம்
நடக்குமா என்று கொலைக்கு கொலை, ரத்தத்துக்கு ரத்தம் என்று ஆரம்பித்தால் முடிவேது?

அமெரிக்காவில் செப்டம்பர்11, அன்று உயிரிழந்தவனின் தாய் சொன்னதுதான் இங்கும்- இந்தளவு வெறியாட்டம் நடந்ததற்க்கு
என்ன காரணம்? நாங்கள் ஏதோ ஒருவகையில் அவர்களை இந்தளவு செய்ய தூண்டியிருக்கிறோம் என்று கண்ணில் நீருடன்
சொன்னதுதான் நினைவில் வருகிறது.

பிரபு, நீங்கள் சொல்வது புரியவில்லை, தனஜ்சய் சட்டர்ஜி செய்த குற்றமும், பில்லா, ரங்கா செய்ததும் வேறு வேறு
என்கிறீர்களா? இந்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள்- படிக்க ஆவலாய் உள்ளது.

ரவியா, இது என்ன இரண்டு கடவுளே? தெய்வமே... தெய்வமே (ஹை பிட்சில்) போலவா இது :-)

மதுரா, பதிவுக்கு சம்மந்தமில்லாத பின்னுட்டத்தைக் கடுமையாய் ஆட்சேபிக்கிறேன் :-) இதை அங்கிட்டே போட்டு இருக்கலாம்
இல்லையா?????

 
At Tuesday, 24 October, 2006, சொல்வது...

சில கேள்விகள் ஐயா!
கொசு மருந்தடித்து தற்காலிகமாய் கொசுவைக் கட்டுப்படுத்தலாம். கொ. மருந்து உங்கள் உடல் நலத்துக்கு கேடு
விளைவிக்கலாம். அதற்கு பதில் வீட்டையும், சுற்று புறத்தையும் சுத்தமாய் வைத்திருங்கள். அதுவே நிரந்தர, பாதுகாப்பான
வைத்தியம் :-)

 
At Tuesday, 24 October, 2006, சொல்வது...

///எவருடைய அரிப்புக்கோ இவனது நிம்மதி களப்பலியாக்கப்படும் போது என்ன செய்ய சொல்கிறீர்கள்.
///

http://www.cnn.com/US/9608/29/castration/.

 
At Sunday, 29 October, 2006, சொல்வது...

ரவியா, நன்றி. இத்தகைய குற்றங்களை கட்டுபப்டுத்த முடியுமே தவிர முழுக்க ஒழிக்க முடியாது இல்லையா?

 
At Monday, 30 October, 2006, சொல்வது...

Bad news india & Puduchchuvadi are correct.

 
At Thursday, 02 November, 2006, சொல்வது...

உஷா உங்கள் அனுமதியுடன் விளம்பரம் இங்கே http://madhumithaa.blogspot.com/2006/10/2_30.html

 

Post a Comment

<< இல்லம்