Tuesday, February 19, 2008

ஐந்தும் ஆறும்

" சந்தியா, உங்கம்மா சொன்னது ஞாபகம் இருக்குல்லே. சும்மா அழுதுக்கிட்டு இருக்கக்கூடாது. சரியா? சின்ன சின்ன வேலை வேணா செய்யி. பத்து நாளுக்கு மெஸ்ல இருந்து சாப்பாடு வரும். நேரத்துல சாப்பிடு. டேப்ளட்ஸ் மறக்காம போட்டுக்கிட்டு நல்லா தூங்கு.. என்கிட்ட டூப்ளிகேட் சாவி இருக்கு. புரூட்ஸ், ஜூஸ் ப்ரிஜ்ல இருக்கு.. டாண்ணு அஞ்சு மணிக்கு வந்துடரேன். சரியா? நைட்க்கு மாவு இருக்கு. இட்லியோ தோசையோ செஞ்சிக்கலாம்" அருண் சொன்னதற்க்கு எல்லாம் தலையை ஆட்டிவிட்டு கதவைச் சாத்திட்டு, திரும்புபோது, எதிரில் இருந்த போஸ்டரைக் காணவில்லை. அருண் எடுத்துவிட்டிருப்பார்.

பாண்டிபஜாரில் ஆசையாய் வாங்கிய போஸ்டர். ஏழெட்டு குழந்தைகள், வரிசையாய் உட்கார்ந்திருக்கும். கைகள் என்னையறியாமல் அடி வயிற்றைத் தடவின. மூக்கால் சாணுக்கு வந்து விழுந்த நாற்பது நாள் ரத்த பிண்டம்! என் குழந்தை ஆணோ பெண்ணோ முதல் வாரிசு. கண்ணில் முட்டிக் கொண்டு வந்தது கண்ணீர். வந்தது. சமாளித்துக் கொண்டு எழுந்தால், சோபாவில் கிடந்த துணிகளை மடித்து அலமாரியில் வைத்தேன்.

அருண் ஓரளவு வீட்டை சுத்தமாகவே வைத்திருந்தார். ஜன்னலை திறக்கவே மாட்டாரா? திறந்ததும் மூன்றாவது மாடி, காற்று சுகமாய் அடித்தது. போன் அடித்தது. அம்மா! கேட்டதற்கு பதில் சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

சமையலறை கைத்துடைக்கும் துணியை அலசிவிட்டு, காயப்போட பால்கனி கதவை திறக்கும்பொழுது, விருட் என்று ஒரு காக்கா பறந்து போனது. அந்த வேகத்தில் அங்கு சாய்த்து வைத்திருந்த ஒட்டடை கொம்பு கீழே விழுந்தது. அதை நிமிர்க்கும் பொழுதுப் பார்த்தால், தேங்காய் நாரால் ஆன அந்த ஒட்டடை கொம்பில் பாதி நாரைக் காணவில்லை.

கொடியில் துணியைப் போட்டுவிட்டு, காக்காகள் கரையும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தால், பக்கத்தில் இருந்த அத்தனை தென்னை மரங்களிலும் புதியதாய் நிறைய கூடுகள். ஒரு கூடு மட்டும் நன்றாக தெரிந்தது. இது என்ன சீசனா? என்னை மறந்து சுவாரசியமாய் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் நன்றாக வித்தியாசம் தெரிந்தது. பெண்ணுக்கு கொஞ்சம்
சோகையான நிறம். எல்லா உயிரினங்களிலும் ஆண்தானே அழகு!

போன் சத்தம், அருணாக இருக்கும். அருணேத்தான். காக்கா கதையை
ஆரம்பித்ததும், அருண் சிரிப்பது கேட்டது. வழக்கமான அறிவுரைகள்., கொஞ்ச நேரம் தொலைக்காட்சி, புத்தகம் என்று நேரத்தைப் போக்கிவிட்டு. சாப்பிட்டு விட்டு, மாத்திரைப் போட்டுப் படுத்தால், கண்ணை திறக்கும்பொழுது மணி அஞ்சாயிருந்தது.

அருண் வரும்பொழுது, நல்லவேளையாய் வெளிச்சம் இருந்தது. கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுப் போய் காக்கா கூடுகளைக் காட்டினேன். கூட்டை பார்க்க வேண்டுமே, பஞ்சு, சுள்ளிகள், ஒயர் பிறகு ஒரு ஹேங்கர் கூட தொங்கியது. துணி உலர்த்தும் கிளிப் கூட இருந்தது.

"வேடிக்கைப் பார்க்கிறென்னு சும்மா நிக்காதே சந்தியா. வீக்னஸ்ல காலு வலிக்கும்" தலையை ஆட்டினேன்.

மறுநாள் பார்த்தால் பால்கனியில் ஒரு நாற்காலி. அருணின் அக்கறை, மனசுக்கு இதமாய் இருந்தது. கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது பார்க்க, பார்க்க சுவாரசியமாய் இருந்தது.

சாயந்தரமானால் இவைகள் போடும் சத்தம் காதை பிளக்கும். இரண்டே நாட்களுக்கு பிறகு பார்த்தால் இந்த பக்கம், அந்த பக்கம் நகராமல் இருபத்திநாலு மணி நேரம் அடைக்காத்துக் கொண்டிருந்தது தாய். சில சமயம் தந்தையும் உட்காந்திருக்கும். லேசான சாம்பல் நிறத்தில் முட்டைகள் கண்ணில் பட்டன.

ஒரு நாள் பார்த்தால், சின்ன சின்ன சிவப்பு செப்பு வாய்கள். உடம்பே தெரியாமல் வாயைமட்டும் திறந்துக் கொண்டு செக்க சிவந்த வாய்கள். உள்ளே எத்தனை உருப்படிகள் என்று மட்டும் என்னால் கணக்கிட முடியவில்லை. அப்பனும் ஆத்தாளும் அப்படி என்னதான் பிள்ளைகளுக்கு கொண்டு வருமோ! நாள் முழுவதும் போகும் வரும், எதையாவது கொண்டு வந்து ஊட்டிக் கொண்டேயிருந்தன. அதைக் கொடுப்பதற்குள் ஒன்றுக்கு ஒன்று முண்டிக் கொண்டு ஓரே தள்ளுமுள்ளு.

சில நாளில், குஞ்சுகள் கொஞ்சம் பறவை உருவத்துக்கு வந்திருந்தன. ஒருநாள் பார்க்கிறேன், ஒன்று தட்டுதடுமாறி வெளியே வந்து தென்னம் ஓலையில் வந்து அமர்ந்திருந்தது. ஓலையோ வழுக்கிறது. மற்ற மரக்கிளை என்றால் உட்கார செளகரியமாய் இருக்கும். தென்ன ஓலையோ கீழ் பக்கமாய் சரிந்து இல்லையா இருக்கும்? இந்த குஞ்சு சர் என்று சருக்கிவிட்டு, திரும்ப தடுமாறிக்கொண்டு நடந்து மேலே போனது. அதன் உடம்பும் நீரில் நனைந்ததுப் போல ஈரமாய் இருந்தது.கீழே விழுந்து வைக்குமோ என்ற பயத்தில் எனக்கு பதட்டமாய் இருந்தது.

போதாக்குறைக்கு அதன் உடன்பிறப்புகள் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லுவதுப் போல அடித்துக் கொண்டு கத்தி தீர்த்தன. கீழே விழுந்துவிட்டால் தாய் திரும்ப சேர்த்துக் கொள்ளாது என்று பாட்டி சொன்னது ஞாபகம் வந்து என் வயிற்றை கலக்கியது. நல்லவேளையாய் ஓரே அட்டம்ண்ட்தான், திரும்ப கூட்டுக்குப் போய் விட்டது அந்த வாலு.

இரண்டு நாள் கழித்துப் பார்த்தால் வெளியே ரெண்டு நிக்குதுங்க! பழைய வாலு இந்த முறை ஸ்டடியாய் நின்றிருந்தது. புதுசுங்களுக்கு ஓரே தடுமாட்டம். மற்றவை வழக்கப்படி பத்திரமாய் கூட்டுக்குள் இருந்து கூச்சலிட்டுக் கொண்டு இருந்தன.

கர்ருன்னு என்று ஒரு சத்தம். திரும்பிப் பார்த்தால் ஆத்தாவும் அப்பனும் இன்னும் சிலதுக்கூட ஒரு தென்ன ஓலையில் வரிசையாய் உட்கார்ந்திருந்தன. வாத்தியாருங்க போல! இந்த சிக்னலைக் கேட்டதும், இந்த வாலு சிறகை படபடவென்று அடித்துக் கொண்டது.
சினிமா கிளைமாக்ஸ் மாதிரி ரெண்டு நிமிடம் எந்த சத்தமும் இல்லை, சட்டுன்னு இது வீர்ன்னு பறந்து பக்கத்துவீட்டு மொட்டை மாடி சுவரில் போய் உட்கார்ந்தது. கொஞ்ச நேரம் கழிச்சி அதே மாதிரி விருட்னு ஒரு டைவ், திரும்ப பழைய எடத்துக்கு.

என்னாமா டிரெயின் கொடுக்குதுங்கன்னு என்னால ஆச்சரியத்த அடக்க முடியல! திரும்பி பார்க்கிறேன் இன்னும் ரெண்டு தள்ளாடிக்கிட்டு வரிசையா நிக்குதுங்க, தென்ன ஓலை வழுவழுன்னு இருக்குமில்லையா அதுதான் வழுக்குது பாவம்!

அருண் கிட்ட, இந்த கதைங்களைச் சொன்னதும், "சே! விடியோ காமிரா இருந்தால் பிடிச்சிருக்கலாம்." அங்கலாய்த்ததும் சரி என்ற அளவில் அவை அடிக்கும் லூட்டிகள் அத்தனை சுவாரசியமாய் இருந்தன.

அடுத்து அடுத்த நாளும் டிரெயினுங் தொடர்ந்தது. இப்ப இன்னும் கொஞ்ச தூரமாய் போயிட்டு வந்துதுங்க. பெருசுங்க கண் பார்வையிலதான் அத்தனையும். ஆனா எல்லாம் வெளிய வந்தாலும் ஒண்ணு மட்டும் வெளியே வராம கத்திக்கிட்டு கெடந்தது. கொஞ்சம் நோஞ்சான் போல தெரிஞ்சுது. மழையில நனைஞ்சா மாதிரி எப்போதும் இருக்கும்.

ஒரு நாள் நான் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, மொதல்ல வெளிய வந்த வாலு அப்படியே வானத்துல சிறகடிச்சி பறந்துப் போச்சு. புது கேர்ல் பிரண்டு, புது வாழ்க்கைன்னு அதோட வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டு போயிடுச்சுப் போல!

ரெண்டொருநாள் கழித்து, துணி எடுக்க பால்கனிப் போறேன், ஒரு பெரிய பறவை! பார்த்தா கருடனா, பருந்தான்னு தெரியல, கூடு பக்கத்துல உட்கார்ந்து இருந்துச்சு. அந்த நோஞ்சான் குஞ்சு தவிர மத்ததெல்லாம் வெளியே! குஞ்சுங்க கதறுதுங்க, அதைவிட அப்பனும் ஆத்தாளும் கிடந்து தவிக்குதுங்க. கதறிக்கிட்டே கூட்ட சுத்தி சுத்தி பறக்குதுங்க. அப்ப, அந்த பெரிய பறவை அலகுல குஞ்சு தலையில ஒரு கொத்து கொத்திச்சு. என் கையும், காலும் நடுங்க ஆரம்பிச்சுது.

பால்கனியில் இருந்து கையில் கிடைத்த துணிக்குப் போடும் கிளிப்புகளை வீசு எறிஞ்சேன். அதுக்குள்ள அந்த குஞ்சு தலையில நாலு வாட்டி போட்டுடுச்சு. நான் ஒட்டடைக் கொம்பை எடுத்து தட்டியதும் அந்த பறவை பறந்தோடியது.

அப்பனும், ஆத்தாளும் குஞ்ச பொறட்டி போட்டுதுங்க. ஆனா அந்த ஒத்த குஞ்சு அப்படியே கெடக்கு. மத்துங்க மெளனமா ஓலைல ஒக்காந்திருக்குதுங்க. பெத்தது ரெண்டு சுத்தி சுத்தி வருதுங்க, அலகால அத தொடுதுங்க, கதறலா கீச்சுகீச்சு சத்தம் என் கண்ணுல தண்ணியே வந்துடுச்சு.ப்ளூ கிராஸ்க்கு போன் போடலாமா, காக்காகுஞ்சுக்கு எல்லாம் வைத்தியம் பார்ப்பாங்களான்னு யோசனையா இருந்துச்சு. மத்தவைகளும் சுத்தி உட்கார்ந்துக்கிட்டு ஓரே ஓலம்.

அப்புறம் எல்லாம் வந்து கிளையில அங்கங்க ஒக்காந்துதுங்க. அவைகளின் மெளனம், குஞ்சு செத்துப் போச்சுன்னு எனக்கு புரிஞ்சிப் போச்சு. அப்ப பெருசு ஒண்ணு பறந்துப் போய் செத்த குஞ்சு தலைய கொத்த ஆரம்பிச்சுது. மத்ததுங்களும் சேர்ந்துக்கிச்சுங்க. சில குஞ்சுகளுக்கு ஆத்தாவும், அப்பனும் அத எடுத்து ஊட்டவும் ஆரம்பிச்சுதுங்க.

என்னால பார்க்க முடியலை! அவ்வளவுதானா! இதுதான் ஐந்தறிவு ஜென்மங்களுக்கும் ஆறறிவு மனுஷங்களுக்கும் இருக்கிற வித்தியாசமா? நான் அப்படியே நின்றிருந்தேன்.

"பெல் அடிச்சிப் பார்த்தும் கதவ தெறக்கலே. இந்த நேரத்துல என்ன தூக்கம்ன்னு பயந்துட்டேன். டூப்ளிகேட் சாவிய போட்டு திறந்தா, காக்கா குஞ்சுகளைப் பார்த்துக்கிட்டு இருக்கே? சந்தியா...., நீ ஆஸ்பிடலில மூணு நாளு இருந்த இல்லே, அந்த எக்ஸ்பென்சஸ் கிளைம் பண்ணலாமாம். மிஸ்கேரேஜ் ஆனதுக்குக்கூட ரீ எம்பர்ஸ்மெண்ட் இருக்குன்னு தெரியாது. இந்த எடத்துல சைன் பண்ணு" சில தாள்களை நீட்டியதும் என்னால் தாங்க முடியவில்லை.

வேகமாய் அவர் கையில் இருந்த பேப்பர்களை பிடுங்கி கிழித்து எறிந்ததும், அதிர்ந்துப் போன அருண், " என்ன ஆச்சுமா?' என்று என்னை உலுக்க, நான் அப்படியே அவர் மீது சாய்ந்து அழ ஆரம்பித்தேன்

***
யுகமாயினி,
பிப்ரவரி, 2008

Labels:

32 பின்னூட்டங்கள்:

At Tuesday, 19 February, 2008, சொல்வது...

இரண்டு இழையையும் இணைத்த விதம் அற்புதம் உஷா..பறவைக் குடும்ப வர்ணனைகள் கண்கள் கொண்டு பார்த்தது போல்...கச்சிதம். பாராட்டுகள்

 
At Tuesday, 19 February, 2008, சொல்வது...

கதை மனதைக் கனக்க வைத்தது..ஐந்தாவது ஆறாவது...நம்ம அறிவு எல்லாம் இப்படித்தான் எங்கேயோ ஒரு சுயநலம்..கொஞ்ச நாளைக்கு இந்தக் கதையை மறக்க முடியாது..

 
At Tuesday, 19 February, 2008, சொல்வது...

அப்படியே பால்கனி வழியா பார்க்கிற மாதிரி இருந்தது.
உஷா, காக்கைகளில் இப்படிக்கூட வழக்கம் உண்டா.


இன்சுரன்ஸ் விஷயம் நெருடல்தான்.
பெரிய இழப்புக்குப் பணம் ஈடாகுமா.

 
At Tuesday, 19 February, 2008, சொல்வது...

என்னையறியாமல் கண்ணில் நீர் திரண்டு வ்ழிந்தது.மிகச் சிறந்த கதை.
அன்புடன் அருணா

 
At Tuesday, 19 February, 2008, சொல்வது...

நீங்க எழுதியதா? இல்ல மண்டபத்துல யாரோ எழுதியதா?

சொல்லமுடியாத உணர்வுகளை எழுத்தில் வடித்த மாதிரி இருக்கு. நச்சுனு ஒரு கதை போட்டிக்கு இதை மாதிரி அனுப்பி இருக்கலாமே? :)

 
At Tuesday, 19 February, 2008, சொல்வது...

சிறுகதை நல்லா இருக்கு உஷாக்கா!

 
At Tuesday, 19 February, 2008, சொல்வது...

பாசமலர், படைப்பாளி சொல்ல வருவதை, வாசகன் சரியாய் கணிக்கும்பொழுது, கிடைக்கும் திருப்தி இருக்கிறதே .. நன்றி
நன்றி!

வல்லிமா! ஆம் காக்காகுஞ்சு மேட்டர் உண்மை சம்பவம்

அருணா, பினாத்தல் நன்றி

அம்பி! அப்படி எல்லாம் எழுதி தர, நேக்கு பெரிய எழுத்தாளர் யாரை தெரியும்??? (தேம்புகிறேன்)

 
At Tuesday, 19 February, 2008, சொல்வது...

ரொம்ப நல்லா வந்திருக்குங்க. இயல்பா எழுதி இருக்கீங்க. அங்க நடப்பதுதான் இயற்கை. அதை நாம் தடுப்பது சரி இல்லை.

வல்லிம்மா, என்ன செய்ய நடக்கிறது நடந்து போச்சு. நம்ம கொஞ்சம் கொஞ்சமா நடக்கப் போவதை கவனிக்க வேண்டாமா? இதுவும் இயற்கைதானே!

 
At Tuesday, 19 February, 2008, சொல்வது...

முடிச்சு போட்ட விதம் அருமை. கதைன்னாலே காலடி தூரம் ஓடுற என்னை கட்டி இழுத்தது காக்கா கதை. உணர்வு சார்ந்து இருந்ததால் இன்னும் கூடுதல் அழகு. பாராட்டுக்கள் ஆசிரியரே!

 
At Tuesday, 19 February, 2008, சொல்வது...

உஷா........மனசைக் கட்டிப் போட்டுட்டீங்க.

இப்படி அடிபட்ட ஒருத்தனை/ஒருத்தியை வச்சுக் காப்பாத்தி இருக்கேன்.

 
At Tuesday, 19 February, 2008, சொல்வது...

உண்மைதான் கொத்ஸ்.

யாருக்காக எதை நிறுத்த முடியும்.?

''ஆகே படோ''
தொடர்ந்து செல்,

இந்த வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
உங்கள் சொல்லுக்கு வலிமை தரும் குணம் இருக்கிறது. நன்றி.

உஷா , வெகு அருமையாக துளி சிதறாமல் வரைந்துவிட்டீர்கள்.
வாழ்த்துகள்.

 
At Tuesday, 19 February, 2008, சொல்வது...

உஷா...படபடப்புடன் படிச்சேன்...
நமக்கும் ஐந்தறிவு உயிரனங்களுக்கும் பெருசா வித்தியாசம் இல்லை...ம்ம்ம்

 
At Tuesday, 19 February, 2008, சொல்வது...

உங்கள் படைப்புகளில் சிகரமாக விளங்குகிறது இந்தக் கதை.
கதையின் கரு, நடத்திச்சென்ற விதம்,இழையோடும் ஒற்றுமை, உணர்ச்சி வெளிப்பாடுகள் என மிக முழுமையாக இருந்தது என்பதைவிட என் கண்களின் நீர் எழுதவிடாமல் தடுப்பதே சரியான பாராட்டு !!

 
At Tuesday, 19 February, 2008, சொல்வது...

இலவசம், வல்லிமா! இந்தக்கதையை என் கணவரிடம் சொன்னப்பொழுது, இரண்டையும் முடிச்சு போட்டது சரியில்லை என்றார்.ஒருவேளை இது ஆண்களின் மனப்பான்மையோ என்று இலவசத்தின் பின்னுட்டத்தைப் பார்த்ததும் தோன்றுகிறது :-)

//நமக்கும் ஐந்தறிவு உயிரனங்களுக்கும் பெருசா வித்தியாசம் இல்லை...ம்ம்ம்//
மங்கை அதேதான் சொல்ல வந்தது.

காட்டாறு, ஆக என் கதைகளுக்கு இன்னும் ஒரு வாசகி கிடைத்துவிட்டாள்.

துளசி, பதிவு போட்டதும் உங்க நினைவுதான் வந்தது.

மணியன், நன்றி என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் சொல்ல தோணலை.

 
At Thursday, 28 February, 2008, சொல்வது...

உஷா.

கதையின் முதல் பகுதியைப் படிக்கும் போது 2005ல் நாங்கள் இருவரும் கழித்த அந்த இரு மாதங்கள் நினைவிற்கு வந்தன. இரண்டாவது பகுதியைப் படிக்கும் போது 'அடடா. என்ன அருமையாகக் கவனித்து எழுதியிருக்கிறார். அற்புதம்' என்று தோன்றியது. மூன்றாவது பகுதியில் முதல் இரண்டையும் இணைக்கும் போது சட்டென்று எங்கே இணைகிறது என்று புரியவில்லை. ஒரு திகைப்பிற்குப் பின்னர் புரிகிறது. பெண்ணாக இருந்தால் உடனே புரிந்திருக்குமோ என்னவோ?

 
At Friday, 29 February, 2008, சொல்வது...

:(((((((

கதை மனசுலயே தேங்கிடுச்சி அக்கா.

 
At Saturday, 01 March, 2008, சொல்வது...

மிக நன்றாய் சொல்லி இருக்கின்றீர்கள்.

மருத்துவமனை செலவை கம்பெனி தருவதற்கு காகம் இறந்த தன் குஞ்சை உணவாக்குவதோடு முடிச்சு போடுறீங்களே?

 
At Monday, 03 March, 2008, சொல்வது...

காயத்ரி நன்றி.

குமரன், உங்கள் பின்னுட்டம் நினைவுபடுத்திய விஷ்யம்- மிஸ்கரேஜ் ஆகி எதிர் வீட்டு பெண் பட்ட பாடு. தன்னை விட,
கணவன் மிகவும் மனதால் பாதிக்கப்பட்டான் என்றாள்.

சுல்தான், இறப்பை ஏதோ ஒரு தேவைக்கு பயன்பட்டது இல்லையா?

 
At Monday, 03 March, 2008, சொல்வது...

அருமையான கதை.

பல நேரங்களில் ஆறறிவு மனிதனைவிட ஐந்தறிவு ஜீவன் பரவாயில்லை.

 
At Tuesday, 04 March, 2008, சொல்வது...

பாராட்டுக்கள்; மிக நன்று..பறவையின் பறப்பைப் பற்றிய விபரிப்பு; எனக்கு ஆறுமுகநாவலரின் " முதற்பறப்பு எனும் கட்டுரையில் வந்த விபரிப்பை ஞாபகப்படுத்தியது.சுமார் 40 வருடங்களுக்கு முன் பாடசாலையில் படித்தது.

 
At Tuesday, 04 March, 2008, சொல்வது...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க உஷா.. உண்மை தான்.. பெண்கள் இது போன்ற சமயங்களில் யோசிப்பது இப்படித்தான் இருக்கும்..

 
At Tuesday, 04 March, 2008, சொல்வது...

மங்களூர் சிவா, உங்க பின்னுட்டத்தை இப்ப எல்லாம் எதிர்ப்பார்ப்பது வழக்கமாய் போய்விட்டது. நன்றி

யோகன், நன்றி. சில விஷயங்கள் மனதில் ஆழமாய் பதிந்துவிடுகிறது.

ஆமாம் முத்துலட்சுமி அதற்கு பெயர்தான் தாய்மை உணர்வு.

 
At Tuesday, 04 March, 2008, சொல்வது...

//
ramachandranusha(உஷா) said...

மங்களூர் சிவா, உங்க பின்னுட்டத்தை இப்ப எல்லாம் எதிர்ப்பார்ப்பது வழக்கமாய் போய்விட்டது. நன்றி
//

தமிழ்மணத்தில் பதிவரின் பெயரை பார்த்ததும் ஓடிப்போய் பார்க்கும் மரியாதைக்குறிய எழுத்தாளர்களில் ஒருவர்.

பின்னூட்டம் கொஞ்சம் முன்ன பின்ன லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும்!

நன்றி.

 
At Wednesday, 05 March, 2008, சொல்வது...

சான்ஸே இல்லை !! ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க!! காக்கா குஞ்சுகள் வர்ணனையில் வரும் பேச்சுத் தமிழ் யாரோ நேரில் பார்த்து சொல்வதை போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. பாராட்டுக்கள்!!

// எல்லா உயிரினங்களிலும் ஆண்தானே அழகு! //

அப்படியா சொல்றீங்க?!! :)


//ப்ளூ கிராஸ்க்கு போன் போடலாமா, காக்காகுஞ்சுக்கு எல்லாம் வைத்தியம் பார்ப்பாங்களான்னு யோசனையா இருந்துச்சு//

அணில் பிள்ளையை காக்கா கூட்டம் கொத்துதுனு சொன்னதுக்கே ப்ளூ கிராஸ் லேர்ந்து வந்தாங்க. ஆனால் மனிதனே சைவப் பிராணி இல்லை. கசாப்பு கடைகளில் சென்று நாம் உயிர் வதைகளை தடுப்பதும் இல்லை. இதில் காகத்தின் உணவை பறித்தது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி என் மனதில் எழாமல் இல்லை.

 
At Wednesday, 05 March, 2008, சொல்வது...

ம.சி புல்லரிக்குது :-)

வந்தியதேவன், ஒரு போஸ்டர் நினைவுக்கு வருகிறது. பூச்சியை தவளை தின்னும், தவளை- பாம்பு-பறவை- மனிதன் என்ற சுழற்சி. இயற்கை என்றாலும், காக்கை குஞ்சியில் இறந்த தன் குழந்தையைப் பார்த்தாள். இதுவும் இயல்பான ஒன்று.
பிறகு ஆம் எல்லா உயிரினங்களிலும் ஆணே அழகு. மனித இனத்தில் பெண் தன்னை அழகாய் காட்டிக் கொள்ள முயலுகிறாள் :-)))))))))

 
At Thursday, 06 March, 2008, சொல்வது...

உஷா மேடம், தாய்மை வலி இங்கு கழுகு விரட்டியது. அதை நான் குறிப்பிடவில்லை. அது நியாயமாகவே படுகிறது. நான் குறிப்பிட்டது அணிலை காப்பற்ற நான் காகம் விரட்டியத்தை.

புத்தரிடம் ஒருவர் கேட்டாராம். "விட்டில் பூச்சியை பல்லி தின்ன வருகிறது, நான் விட்டில் பூச்சியை காப்பற்ற வேண்டுமா?" என்று. அதுக்கு புத்தர், "நீ அங்கு இல்லாமல் இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்குமோ அதை நிகழ விடு" என்றாராம். உடனே இன்னொரு கேள்வி எழுகிறது. ஒரு மனிதனை புலி தின்ன வருகிறது. அப்போது என்ன செய்வது? அதே பதில் பொருந்துமா? மனிதன் கூட புலியின் உணவு தானே!

எது இயற்கை? எது இயற்கை இல்லை?

நாற்பது வயதுக்கு மேல் வாழ்வது கூட இயற்கைக்கு விரோதமானது என்று எங்கேயோ படித்திருக்கிறேன். மனிதன் தனக்கென்று புது உலகம் அமைக்காமல் காடுகளில் திரிந்திருந்தால் அவனது சராசரி ஆயுட்காலம் நாற்பது வருடங்கள் தானாம். இயற்கைக்கு மாறாக வாழ்வது / செயல்படுவது கூட மனிதனின் இயற்கை.

கடைசியில் இயற்கை என்றால் என்ன என்பதே கூட ஒரே குழப்பமாக இருக்கிறது! :)

இந்த பின்னூட்டம் உங்கள் கதை கிளப்பிய ஒரு சிந்தனை என்பதால் இங்கு எழுதி விட்டேன். ஆனால் இந்த சிந்தனையை கிளப்ப நீங்கள் இந்த கதையை எழுதவில்லை என்று தெரியும்! :)

ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் அழகாகத் தெரிவது கூட இயற்கையோ ? :))

 
At Friday, 07 March, 2008, சொல்வது...

வந்தியதேவன் எண்ணங்களை கிளறிவிட்டு விட்டது உங்கள் பின்னுட்டம். இன்றைய காலக்கட்டத்தில் ஒன்றோ இரண்டோ பெற்றுவிட்டு, இடம் கிடைக்கும் கல்லூரி விடுதிக்கு அனுப்பிவிட்டு, பிறகு வேலை, தங்கள் வாழ்க்கை என்று உலகின் வேறு ஒரு கோடியில் செட்டில் ஆகும் பிள்ளைகள். காதல் திருமணம் அதிகமாகி அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போக, நாற்பது வயதில் இருந்தே தனிமை ஆரம்பித்துவிடுகிறது. நீண்ட ஆயுள் கொடுமை இல்லையா?
பாட்டி, பூட்டி, பேரன், கொள்ளுபேர பிள்ளைகள் என்று ஆலமரமாய் பரந்து விரிந்த குடும்ப அமைப்பு காணாமல் போனதால்
நீண்ட ஆயுள் கொடுமையே

 
At Friday, 07 March, 2008, சொல்வது...

வந்தியத்தேவன் சொன்னதுபோலத்தான் இங்கே பழங்கால குடிமக்கள் அந்தக் காலத்துலே 40 வயசு வரை வாழ்வதே அதிகமாம்.

இப்போ நவீன மருத்துவமுறைகள் எல்லாம் வந்து மனிதனுடைய ஆயுளை நீட்டி வச்சுருச்சு.

40 என்பது இப்போதைக்கு ரொம்பக் குறைச்சல். நாம்வேணுமுன்னா 65 ன்னு ஆக்கிக்கலாமா?

இங்கே முதியோர்கள் இல்லத்தில் 'கடவுளுக்காகக் காத்துக்கிடப்பவர்கள்' எல்லாம் 80 வயசைக் கடந்தவர்கள்.

 
At Friday, 07 March, 2008, சொல்வது...

துளசி, நாற்பது ரொம்ப குறைவு. எனக்கும் அறுபத்தி ஐந்து ஓ.கே. பிறகு வானபிரஸ்தம் போயிடலாமா :-)

 
At Thursday, 10 April, 2008, சொல்வது...

-"இது என்ன சீசனா? என்னை மறந்து சுவாரசியமாய் பார்த்துக் கொண்டு இருந்தேன்.."-

wow.......

-"இதுதான் ஐந்தறிவு ஜென்மங்களுக்கும் ஆறறிவு மனுஷங்களுக்கும் இருக்கிற வித்தியாசமா?"-

புல்லரிக்குது!!!! ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.
welldone ..keep - it -up

 
At Sunday, 13 April, 2008, சொல்வது...

திரு. எஸ்.ரவி, ரசித்தற்கு நன்றி

 
At Sunday, 13 April, 2008, சொல்வது...

வானப் பிரஸ்தம்னா எங்க போறது உஷா:)

குலு மணாலி????

 

Post a Comment

<< இல்லம்