Saturday, October 25, 2008

அட்மிஷன்- கல்கி தீபாவளி சிறப்பிதழ்

பிறப்பொக்கும்.. என்ற தலைப்பில் அனுப்பிய சிறுகதை, அட்மிஷன் என்ற பெயர்
மாற்றத்துடன் இந்த வார 2-11-2008 தீபாவளி சிறப்பிதழ் கல்கியில் அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுக்கதையாய் வெளிவந்துள்ளது
********************


அட்மிஷன்

தீபுவின் திறமையில் நம்பிக்கை இருந்தாலும், செய்தி உறுதியானதும் மகிழ்ச்சியில் மனம் நிறைந்தது. ஸ்டான்போர்ட் யூனிவர்சிட்டியில், எம்.பி.ஏ சீட். மகளை உடனே பார்க்க வேண்டும் என்று உடலும், உயிரும் துடித்தது ஆறுமுகராஜாவுக்கு. ''ஏங் கண்ணு, நாலு நாளு இந்தியா வந்துட்டுப்போகக்கூடாதா?" குரலில் ஏக்கம் வழிந்தது. தீபு மெல்ல சிரிப்பது
கேட்டது.


" ஏங் கண்ணு... சரிதான். கோய்ம்தூர் ஸ்லாங்க் திரும்ப வந்துடுச்சா? கமான் டாட்! எவ்வளவு வேலை இருக்குன்னு உங்களுக்கு தெரியாதா?''


''சரி மம்மிக்கு சொல்லிட்டீயா? சேலம் போயிருக்கா. உன் அம்மத்தாவுக்கு நாளைக்கு ஐ பரேஷன்''


''சொல்லி ஆச்சு'' என்றவள், '' உங்க புது வேலை எப்படி இருக்கு? ரெண்டே வருஷம், நானும் வந்துடரேன், சென்னைக்கு இல்லே, நேரா பொள்ளாச்சிக்கு. ஏழை குழந்தைகளுக்காக ஒரு இலவச அல்ட்ரா மாடர்ன் ஸ்கூல். ஸ்ரீலதா, ராகவ், ஜான், கெவின்னு எல்லாரும் பக்காவா பிளான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. உங்க பங்குக்கு எவ்வளவு தருவீங்க?" குரலில் உற்சாகம் வழிந்தது.


''பார்க்கலாம், பார்க்கலாம். நீ மொதல்ல புறப்பட்டு வா''


''எனக்கும் எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கு. ஐ வில் டிரை. அட்மிஷன் லெட்டர் உங்களுக்கும் ஒரு காப்பி மெயில் பண்ணியிருக்கேன் பாருங்க'' என்று சொல்லி போனை வைத்தாள்.


ராஜா அப்படியே உட்கார்ந்திருந்தார்.

குளிரூட்டப்பட்ட அறையின் கண்ணாடி தடுப்புகளைத் தாண்டி, அம்மா அழைக்கும் குரல் கேட்டு நினைவுலகத்து வந்தார். கதவைத் திறந்து எட்டிப் பார்த்தால், மாடிப்படி வளைவில் மூச்சு திணறலுடன் அவரின் தாய் வள்ளி நின்றிருந்தார்.


வேகமாய் படியில் இறங்கி, தாயின் கையைப் பிடித்து கீழே இறங்கிக் கொண்டே, ''ஆரூம் இல்லியா? நீங்க எதுக்கு மாடி ஏறுனீங்க? இன்னுமா காலிங்பெல் சுட்சு ரிப்பேர் செய்யலே? ரமேஷ் எங்கே?" சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுதே, வாசல் பக்கத்தில் இருந்து, ஐய்யன் குரல் பெரியதாய் கேட்டது.


''ஐயிரு ஒருத்தர், அவரு பேரனுக்கு காலேசு அட்மிசன்னு நேத்தும் வந்திருந்தாரு. நான் பேசி அனுப்பிட்டேன். இன்னைக்கு காலைல இருந்து, கேட்டு வாசல்ல நின்னுக்கிட்டு இருக்காரு. பாவம்! உங்கய்யன் ராவுடி பண்ணிக்கிட்டு இருக்காரு. வெசையா வா''


வேகமாய் வாசல் பக்கம் போனால், கேட்டு கதவைப் பிடித்துக் கொண்டு ஒரு கிழவரும், கூடவே ஒரு பையனும் நின்றிருந்தனர். ஏனோ அவரின் கால்கள் தயங்கின. யோசனையுடன் நடந்தார்.


" காலேஜூ அட்மிஷன் சமாசாரமாம். வூட்டு பக்கம் வரக்கூடாதுன்னா, ரெண்டு நாளாய் வந்துக்கிட்டு இருக்காரு" ஐயனின் குரல் புகார் கூறியது.


ஒல்லியான உருவம். உயரம் காரணமாய், கூன் விழுந்த உடல். கண்களில் ஒளி இல்லாமல், பஞ்சடைத்திருந்தது. கூட இருந்த பையனின் உருவத்திலும், உடையிலும் ஏழ்மை. கிழவனார் தடுமாற்றமாய் கையைக் கூப்பினார்.


ராஜா யோசனையுடன் அவர்களைப் பார்த்தவர், '' முந்தாள் காலைல நீங்க ரெண்டு பேரும் ஆடிட்டர் கோபாலகிருஷ்ணன் வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தீங்க தானே?" என்றுக் கேட்டார்.


கிழவர் தலையை ஆட்டிக் கொண்டே, ''இவன் என் பேரன். போன வருஷம் ஒரு
ஆக்சிடெண்டுல எம்பொண்ணும், மாப்பிள்ளையும் தவறிட்டாங்க. தொண்ணூத்து மூணு
பர்சண்டேஜூ வாங்கியிருக்கான். கவர்மெண்ட் கோட்டால உங்க காலேஜ்ல சீட் கெடச்சிருக்கு. ஆனா பணம் போறலை. எனக்கு புரோகிதம்தான் தொழில். அங்க இங்க உதவி கேட்டு, பாதி பணம் பொறட்டிட்டேன். ஆடிட்டர் மிஸஸ்தான், உங்களைப் பார்த்து பேசினா ஏதாவது வழிப் பொறக்கும்னு சொன்னாங்க''


''ஐயிருங்கதான் ஓஹோன்னு இருக்காங்களே. மோபெட் என்னா? மோட்டார் சைக்கிள்
என்னான்னு கொழிக்கிறாங்க. நீங்க பஞ்சம் பாடுறீங்க?" ஐய்யன் குரலில் நக்கல் வழிந்தது.


''எனக்கு சமஸ்கிருதம் எல்லாம் தெரியாது. ஏதோ நாலு மந்திரம் உருப்போட்டு, நல்லது கெட்டது செஞ்சி வைப்பேன். வயசாச்சு, யாரும் என்னைக் கூப்பிடுரதில்லை. இவன் அத்தை வீட்டுல இருந்து படிச்சிண்டு இருந்தான். பாவம், அவாளுக்கும் கஷ்ட ஜீவனம். இவன காலேஜ்ல சேர்த்துட்டா என் கடமை முடிஞ்சிது '' கிழவனார் தடுமாறி கீழே விழப்போனார். பேரன் அவரைப் பிடித்து ஓரமாய் உட்கார வைத்தான்.


துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டு, '' இவன் அம்மாவுக்கு பையனை இன்ஜினியர் ஆக்கணும் கொள்ள ஆசை. பாவம்! சொல்லிக்கிட்டே இருந்தா. ஏதோ கடைசியா உங்கக்கிட்ட முயற்சி செஞ்சி பார்க்கலாம்னு கெளம்பிட்டேன். நீங்க ஏதாவது பார்த்து செஞ்சா உண்டு" அப்படியே சாய்ந்து உட்கார்ந்தார்.


''சார்! சிஏ படிக்கலாம்னு இருக்கேன். ஸ்டைஃபண்டும் கிடைக்கும். செலவும் அதிகமில்லை. அப்படியே கரஸ்ல பீகாம் சேர்ந்துடுவேன். உங்கள தொந்தரவு செஞ்சதுக்கு சாரி சார்'' பையன் குரலில் தயக்கம்.

அவன் கையில் இருந்த சான்றிதழ்களை வாங்கிப் பார்த்தார் ராஜா.


கையில் இருந்த செல் பேசியை எடுத்து எண்ணைத் தட்டியவர், '' குமார்! குருபிரசாத்துன்னு பேரூ. நம்ம காலேஜ்ல அட்மிஷன் கிடச்சிருக்கு. ஏழை பையன், ஆர்ஃபன் வேற. ப்ஃரீ சீட்ல அட்மிஷன் போட்டுடு.ஹாஸ்டலும்தான்! பையன் கிட்ட லெட்டர் தரேன்'' செல்லை அணைத்தவர், " ஐயா பெரியவரே, சந்தோஷம்தானே? கொஞ்சம் நேரம் இந்த பெஞ்சுல ஒக்காந்து இருந்துட்டு, நம்ம வண்டியிலேயே காலேஜ்க்கு போய் சேர்ந்துடுங்க. நல்லா
படிக்கணும் என்னா?"" என்று பையன் முதுகைத் தட்டிவிட்டு, தாயைப் பார்த்து'' பாலு மோரு ஏதாவது குடுங்கம்மா. டிரைவர இவங்களை காலேஜ்க்கு கூட்டிக்கிட்டு போயி, அப்புறம் அவங்க வீட்டுல டிராப் செய்ய சொல்லு. '' என்றார். கிழவனார் கையெடுத்து கும்பிட்டவர்,ஆகாயத்தைப் பார்த்தும் வணங்கினார். பையன் முகம் மலர்ந்தது.


வீட்டில் நுழைந்த கவுண்டரின் முகம் கோபத்தில் கொதித்தது. ஆறுமுக ராஜா, தந்தையை சமாதானப்படுத்தும் வகையில் புன்னகைப் பூத்தார்.


''இதெல்லாம் நல்லா இல்லே. பணம் கட்டி சேர முடியலைன்னா, இவுங்களுக்கு எதுக்கு நம்ம காலேஜ்ல ஸ்காலஷிப், ப்ரீ ஹாஸ்டல் எல்லாம்? இந்த காலேஜ் ஆரம்பிச்சதே, நம்ம சாதி சனம் முன்னேறணும்னுதான்னு எம்.எல்.ஏ சொல்லலை? அவுரு காதுல விழுந்தா தப்பா நெனைக்கப் போறாரு"


''நா இந்த காலேஜ் நடத்த முழு பொறுப்பு எடுக்கும்போதே, என்னோட எந்த செயல்லையும் குறுக்கே வர மாட்டேன்னு சொல்லியிருக்காரூ. ஏழையில சாதி எதுங்கையா? அப்படி அவர் ஏதாவது சொன்னா, எம் பணத்துல கொடுக்கிறேன்''


''அப்ப காலக்காலமாய் ஐயிருங்க படிச்சி முன்னேறினா போதுமா?" ஐய்யனின் குரலில் கோபம் குறைந்து, ஆதங்கம் தெரிந்தது.


'' ஐயா! படிப்பு எந்த சாதிக்கு மட்டும் சொந்தமானதில்லே. ஆணு பொண்ணு, சாதி, மதம், இனம்னு எந்த பாகுப்பாடும் இல்லை. படிக்க ஆர்வம் இருந்தா யாரு வேணா படிக்கலாம். பெத்தவங்க, ஸ்கூலுன்னு ஊக்கம் தந்தா போதும். இப்பத்தான் உங்க பேத்திக்கிட்ட இருந்து போன் வந்துச்சு. அமெரிக்காவுல ஒன் ப் த பெஸ்ட் யூனிவர்சிடில, எம் பி ஏ படிக்க இடம் கெடச்சிருக்கு. இப்ப சொல்லுங்க, படிப்பு சாதி சார்ந்த விஷயமா? அந்த அனாதை பையன் இடத்துல யாரு இருந்தாலும் அதைத்தான் செஞ்ருப்பேன்''


"அப்ப இந்த இட ஓதுக்கீடு வேணாங்கிறீயா? அப்படி இல்லாம இருந்திருந்தா, அந்தக்காலத்துல அண்ணா யூனிவர்சிட்டில சேர்ந்து படிச்சிருக்க முடியுமா?"


''இல்லைன்னு சொல்லலையே. ஐயா, நீங்க எலிமெண்டரி ஸ்கூல்ல ப்யூன், கையெழுத்து போட தெரியும் அவ்வளவுதான் படிப்பு. ஆனா இன்னைக்கு எம் புள்ளைக்கு சாதி பேரு சொல்லி சீட் வாங்குறது சரியா? கையும் காலும் நல்லா இருந்து ஒழைக்க தெம்பும் இருக்கிறவன் பிச்சை எடுத்து சாப்பிடுவதுபோல இருக்கும். இது நான் சொல்லலை, தீபு ஒரு முறை, இந்த இட ஒதுக்கீடு பேச்சு வந்தப்போ சொன்னது'. இட ஒதுக்கீடு ரொம்ப அவசியம். ஆனா, நம்ம மாதிரி நல்லா முன்னேறியவங்க, இன்னும் ஒதுக்கீடு கேட்பது சரியா?''


அவர் பதில் சொல்லவில்லை.


"ஐயா..." அவர் குரல் தழதழைத்தது. " ரெண்டு நாளு முன்னாடி இவங்க ரெண்டு பேரும் ஆடிட்டர் வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தாங்க. எதுக்குன்னு அன்னைக்கு தெரியலை. இன்னைக்கு தெரிஞ்சதும், இதே மாதிரிதானே முப்பது வருஷத்துக்கு முன்னாடி, பியூசி ரிசல்ட் வந்ததும் நீங்களும்தானே என்னை இழுத்திக்கிட்டு வீடு வீடா போனீங்க. எல்லா அவமானங்களையும் தாங்கிக்கிட்டு, அம்மா கழுத்துல இருந்த தாலியைக் கூட வித்து என்னை பி.ஈ சேர்த்தீங்க. பி.ஈ க்கு அப்புறம், மேல் படிப்புக்கு அமெரிக்கா போயி, நல்ல வேலைல சேர்ந்து, பணம் அந்தஸ்துன்னு வாழ்க்கையில இந்தளவு உயர்ந்ததுக்கு உங்க முயற்சிதானுங்க காரணம். வயசான காலத்துல உங்க கூட இருக்கணும்னு இருபத்தி அஞ்சு வருஷ அமெரிக்கா வாழ்க்கைய விட்டுட்டு வந்தாச்சு. இன்னைக்கு இவுங்க ரெண்டு பேரையும் பார்த்ததும், ஏதோ முன் ஜென்ம ஞாபகம் மாதிரி பழசு எல்லாம் நினைவுக்கு வந்து மனசு என்னமோ மாதிரி ஆயிடுச்சு'' குரல் தழும்பியது.


பிரமைப் பிடித்ததுப் போல இருந்த ஐய்யன், '' வள்ளி, ரெண்டாயிரம் ரூபா பணத்தை எடுத்து அந்த பையன் கைல குடு. காலேஜ்க்குப் போகும்போது, நல்ல பேண்டு சட்டை வாங்கிக்கட்டும்'' என்றார்.


"அதை நீங்களே எடுத்து தரக்கூடாதா'' எழுந்த வள்ளியம்மை குரலில் ஒரு பெருமிதம்.

Labels:

28 பின்னூட்டங்கள்:

At Saturday, 25 October, 2008, சொல்வது...

Hi Nice Story!

I reminds me of multiple stories that I have written in my blog over the last 2 months.

Appreciate your inputs on them!

Regards
Ramesh

 
At Saturday, 25 October, 2008, சொல்வது...

உளம் கனிந்த வாழ்த்துகள் உஷா, கதையின் கருவுக்கு மட்டுமில்லாமல் நம்பிக்கைக் கீற்றைக் காட்டியதுக்கும் சேர்த்து, தீபாவளிக்குமாய்ச் சேர்த்து. வாழ்த்துகள்.

 
At Saturday, 25 October, 2008, சொல்வது...

//படிப்பு எந்த சாதிக்கு மட்டும் சொந்தமானதில்லே. ஆணு பொண்ணு, சாதி, மதம், இனம்னு எந்த பாகுப்பாடும் இல்லை. படிக்க ஆர்வம் இருந்தா யாரு வேணா படிக்கலாம். பெத்தவங்க, ஸ்கூலுன்னு ஊக்கம் தந்தா போதும். //

நல்லா இருக்கு!

வாழ்த்துக்கள் அக்கா :)

 
At Saturday, 25 October, 2008, சொல்வது...

உஷா அவர்களுக்கு,
வாழுத்துக்கள் !

கதையின் உரைநடை நன்றாக இருந்தது. அசட்டுத்தனம் இல்லை
அதுதான் என்னை மறுமொழி எழுத தூண்டியது கதை கருதான் ?
கரு தெரிந்ததுதான் .கல்கியில் வரும் முத்திரை அல்லது கல்கி நூற்றான்று சிறு கதைகள் "பிரசார நெடி" அடிக்கும் ."உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான்" பாணி . அது அவர்கள் பாலிசி .நாம் ஒன்றும் செய்ய முடியாது... நானும் கல்கியில் கதைகள் (ஒரு காலத்தில்????) எழுதியுள்ளேன் .

எந்த நெடி இல்லாமலும் நீங்கள் டிரை பண்ணலாம்.அதில்தான் உங்கள் திறமை வெளிப்படும் . என் சிறுகதைகள்/கட்டுரைகள் /கவிதைகள் raviaditya.blogspot.com
வந்து வாழ்த்தலாம் அல்லது சாத்தலாம். நான் ரெடி

 
At Saturday, 25 October, 2008, சொல்வது...

வாழ்த்துகள் :-).

கதையிலே க்ரீமி லேயர் நெடி கொஞ்சம் தூக்கலா இருக்கு.

 
At Saturday, 25 October, 2008, சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா. பழைய நினைவுகளை தூண்டிய கதை.

 
At Saturday, 25 October, 2008, சொல்வது...

இடஒதுக்கீட்டின் பின் உள்ள சோகங்களை அழகாகச் சொல்லியிருக்கிறீகள். தத்தமது பிரிவினரை மட்டுமே முன்னேற்றிக் கொண்டு போகவேண்டும் என நினைக்கிறவர்கள் சமூகத்தில் ஏராளம் பேர். திறமை வறுமை இரண்டும் கணக்கில் எடுக்கப் பட வேண்டும் எனக் காட்டியிருப்பது அருமை.

என் மனமார்ந்த பாராட்டுக்கள் உஷா.

 
At Saturday, 25 October, 2008, சொல்வது...

Interesting view point :)

 
At Saturday, 25 October, 2008, சொல்வது...

ரமேஷ், கீதா, ஆயில்யன் நன்றி

ரமேஷ், லிங்க் கொடுங்க. உங்க கதைகளைப் படித்துவிட்டு சொல்கிறேன்.

கீதா,இட ஒதுக்கீடு பற்றிய ஆரோக்கியமான விவாதங்களே இக்கதை எழுத தூண்டின.

ஆயில்! படிப்பு இந்த சாதிக்குதான் வரும் என்பதில் எனக்கு உட்ன்பாடு இல்லை. வாய்ப்பு தந்தால் படிச்சிட்டு போறாந் கர்ம வீரர் சொன்னது.

 
At Saturday, 25 October, 2008, சொல்வது...

கல்கியில் கதை சிறப்பு அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது. AND IT DESERVES TOO. வாழ்த்துக்கள்.

 
At Sunday, 26 October, 2008, சொல்வது...

Congratulations. Hope to read more and more of your stories.

 
At Sunday, 26 October, 2008, சொல்வது...

ரவிசங்கர்,
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இது என் முதல் கதை கல்கியில். நான் எழுத ஆரம்பித்தே, சில வருடங்கள்தான் ஆயிற்று. கொஞ்சம் ஒழுங்காய் எழுத வேண்டும் என்ற பிடிவாதம். அதிகம் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதில்லை. ஆனால் அனுப்பினால் ஓரளவு பிரசுரம்
ஆகிவிடுகிறது.கடைசியில் மனம் திருந்துவது போன்ற கதைகள் எனக்கும் அலர்ஜி. இக்கதை கொஞ்சம் சென்சிடீவ்வான மேட்டர்
என்பதால் அதை எழுத்தில் கொண்டுவர கொஞ்சம் சிரமப்பட்டேன். கடைசி வரியை, "ஐய்யன் ஒன்றும் பதில் சொல்லாமல் எழுந்துப் போனார்" என்று முடித்திருக்கலாம் என்று நண்பர் சொன்னார்.
உங்கள் படைப்புகளின் லிங்க் கொடுங்கள், படித்துவிட்டு சொல்கிறேன்.

கே.வி. ஆர்! நன்றி!
//கதையிலே க்ரீமி லேயர் நெடி கொஞ்சம் தூக்கலா இருக்கு// அப்படியா :-)

 
At Sunday, 26 October, 2008, சொல்வது...

பத்மா, ராமலஷ்மி, ரத்னேஷ்,கிருஷ்ணன் நன்றி.

ச.சங்கர்! இங்க பிளாக்குல படிச்சீங்களா இல்லாட்டி கல்கி வாங்கி படிச்சீங்களா :-)

பத்மா, நினைவலைகள் எழுதுங்களேன்

 
At Sunday, 26 October, 2008, சொல்வது...

நன்றி,

பழைய மறு மொழியிலேயே கொடுத்துள்ளேன்.

//சிறுகதைகள்/கட்டுரைகள் /கவிதைகள் raviaditya.blogspot.com
வந்து வாழ்த்தலாம் அல்லது சாத்தலாம். நான் ரெடி//

 
At Wednesday, 29 October, 2008, சொல்வது...

உஷா அவர்களுக்கு

உங்க கதையை படித்தேன்.
மொழி நடையும், தர்க்கரீதியான உரையாடல்களும் தெளிவாக அமைந்திருந்தது.
ஆனால் கதையின் தனமையை, உங்கள் கருத்தை சொல்வதற்கான முயற்சி ஒவர்டேக் செய்து விட்டது போல இருக்கிறது.
இன்னும் தலைமுறை தலைமுறையாக பள்ளிக்கூடம் வாசம் இல்லாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்னும் சித்திரமும் தெளிவாக்கப்பட்டிருந்தால கதை இன்னமும் சிறப்பாயிருந்திருக்கும்.
ஆனாலும், முதல் கதை வெற்றிதான்.
தொடர்ந்து எழுதுங்கள்.

 
At Wednesday, 29 October, 2008, சொல்வது...

ரவி, பிளாக் முகவரியைச் சொல்லவில்லை. தேட சோம்பல் பட்டுக்கொண்டு, கதை, கட்டுரைகளின் லிங்க் கேட்டேன்

 
At Wednesday, 29 October, 2008, சொல்வது...

த்ரு.மாதவராஜ்,
கதையைக் குறித்த உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி. இட ஒதுக்கீடு விஷயங்கள் என்னை மிகவும் யோசிக்க வைத்த ஒன்று.
பிராமண பிள்ளைகளுக்கு, படிப்புடன் கொஞ்சம் புத்திசாலிதனமும் இருந்துவிட்டால், வாழ்வில் முன்னேற வழி கிடைக்கும். அதையே கதையில் குருபிரசாத், பி.ஈ கிடைக்கவில்லை என்றால் கரஸ்ஸில் பி.காம் படித்துக் கொண்டே, சி.ஏ சேர்ந்துவிடுகிறேன் என்கிறான். இதற்கு சாதியை ஏன் மேற்கோள் காட்டினேன் என்றால், அவர்களின் சுற்றங்கள், நட்புகள் காசு பண உதவி செய்யாவிட்டாலும், விஷய தானம் நன்கு செய்வார்கள் :-)

ஆனால் இங்கு சொல்ல வந்தது, கிழவனார் தன் பேரனை கையில் பிடித்துக் கொண்டு வீடு வீடாய் அலைந்தது, ராசாவுக்கு தன் தந்தையும் இப்படிதானே தன்னை கல்லூரியில் சேர்க்க அலைந்தார் என்பது நினைவுக்கு வந்துவிட்டது. அதன் காரணமாகவே ஏழைக்கு ஏது சாதி என்று தன் கல்லூரியில் இடம் தருகிறார். படிப்பு என்பது குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் சொந்தமில்லை, தானும் தன் மகளும் சாதிக்கவில்லையா என்ற தன்னம்பிக்கையையும் கதையில் கொண்டு வர நினைத்து, தோல்வி அடைந்துவிட்டேனோ என்று நினைக்கிறேன் :-)

 
At Friday, 31 October, 2008, சொல்வது...

//கடைசியில் மனம் திருந்துவது போன்ற கதைகள் எனக்கும் அலர்ஜி.//

:))

 
At Friday, 31 October, 2008, சொல்வது...

கதை போட்டாச்சா உஷா. வாழ்த்துகள்.

 
At Friday, 31 October, 2008, சொல்வது...

உஷா,

'சோம்பல் பட்டுக்கொண்டு"
சற்று நெருடுகிற்து.

லிங்க் கொடுத்துள்ளேன்.கிழ் உள்ள தலைப்புகளில் தேடலாம்.
1.முதல் முத்தம் யார்
2.ஸ்பேம் மெயில் கவிதைகள்
3.வைக்காத பொண்ணு மேல
4. ஆள் இல்லாத ரயில்வே
நன்றி.

 
At Saturday, 01 November, 2008, சொல்வது...

//ச.சங்கர்! இங்க பிளாக்குல படிச்சீங்களா இல்லாட்டி கல்கி வாங்கி படிச்சீங்களா :-)//

நாங்கள்ளாம் தன்மானத் த.....சொன்னா சொன்னதுதான்.காசு குடுத்து கல்கி வாங்கிப் படிச்சேனாக்கும் :)

 
At Saturday, 01 November, 2008, சொல்வது...

//ஆனாலும், முதல் கதை வெற்றிதான்.
தொடர்ந்து எழுதுங்கள்.//

மாதவராஜ் , உஷா அவர்கள் ஏற்கனவே நிறைய கதைகள் எழுதி பத்திரிக்கைகளிலும் வந்தாகி விட்டது.ஒரு வேளை இன்னும் (கதை எழுதுவதில்)தேர்ச்சி பெறவில்லை என்பதினை இப்படி நாசுக்காக சுட்டிக் காட்டுகிறீர்களோ ?:)

 
At Saturday, 01 November, 2008, சொல்வது...

மது,நன்றி

ரவியா, அதே பதிலும் அடுத்த வரிகளையும் படிச்சீங்க இல்லே :-), அந்த கமெண்ட் தட்டும்பொழுது, சிலரோட நினைவு வந்தது.
:-)))

ரவிசங்கர், சில சமயங்கள் அதிகம் இணையம் பக்கம் வர முடியாத நிலைமை எல்லாருக்கும் வரதானே
செய்யும்? தகவலுக்கு நன்றி. படித்துவிட்டு சொல்கிறேன்.

வாங்க தன்மான சங்கரய்யா! எம் மனசுக்கே இது சுமாரான கதைதான்.நான் இன்னும் என் சிறந்த கதையை எழுதவில்லை
என்று ஒரு இலக்கிய தோஸ்த் சொன்னாங்க. ஒருவேளை அப்படி எழுதிட்டா, ரிடையர் ஆயிடணுமோன்னு, அவுங்க
சொன்னதை இன்னும் செயல்படுத்தவில்லை :-)

 
At Monday, 03 November, 2008, சொல்வது...

உஷாஜி,

இடஒதுக்கீடு / க்ரீமி லேயர் பத்தி நான் என் வலைப்பதிவில் நிறைய எழுதியிருக்கேன் (வாசித்து இருக்கிறீர்களா? நீங்க பெரிய எழுத்தாளினி, டைம் இருக்காது, இருந்தாலும்:)), அது பத்தியெல்லாம் இப்ப எதுவும் பேசப்போறதில்ல ...

கதையை (நீங்க அனுப்பி) ஏற்கனவே வாசித்திருந்தாலும், மறுபடியும் வாசிச்சபோது, ஏனோ நெகிழ்ச்சியா இருந்தது, கண் கலங்கிட்டேன், நான் எஞ்சினியரிங் சேரும்போது, இதே மாதிரி ஒருத்தர் உதவி (எதுவும் எதிர்ப்பார்க்காம) செஞ்சார், அவர் இப்ப உயிரோட இல்ல :(

சிறுகதை வாசிக்கறவரை (ஏதோ ஒரு வகைல)பாதிக்கணும், அதான் மேட்டர், உங்க கதை பாதிச்சது !!!

எ.அ.பாலா

 
At Monday, 03 November, 2008, சொல்வது...

எ. அ. பாலா,
நன்றி. நீங்கள் எழுதியது நினைவில்லை என்றாலும், இட ஒதுக்கீடு பற்றி யார் எழுதினாலும் படித்துவிடுவேன். முன்பே
தனிமடலில் உங்களிடம் சொன்னதுதான், முகமூடியின் இட ஒதுக்கீடுகான ஒரு பதிவில் கொங்குராசா சொன்ன பதிலே
கதைக்கு இன்சிபிரெஷன்
கதையைக் குறித்த உங்கள் விமர்சனத்துக்கு நன்றி

 
At Saturday, 20 December, 2008, சொல்வது...

கதை நல்லா இருக்குங்க உஷா. எனக்கு இன்னிக்கி தான் உங்க வலைப்பூ அறிமுகமாச்சு. வாழ்த்துகள்

 
At Sunday, 21 December, 2008, சொல்வது...

நன்றி மின்னல்

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

I was the first to post a comment, even clearly telling about, that it "reminds me of multiple stories that I have written in my blog over the last 2 months."

For that you asked

//ரமேஷ், லிங்க் கொடுங்க. உங்க கதைகளைப் படித்துவிட்டு சொல்கிறேன்.//

For that I posted a comment immediately, giving my blog URL.

 

Post a Comment

<< இல்லம்