Sunday, February 01, 2009

சர்க்கரை நோய்- சமாளிப்பது எப்படி?

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?
டாக்டர் எம். மருதுபாண்டியன்
எழுத்து வடிவம்: அய். ஜெயச்சந்திரன்
200 பக்கங்கள் விலை ரூ. 80
நீயூ ஹாரிசன் மீடியாவின் நலம் வெளியிடு.


சர்க்கரை நோய் வந்தால் எப்படி சமாளிப்பது என்பதை மிக தெளிவாய், விரிவாய் விளக்கியிருக்கிறார் டாக்டர் எம். மருதுபாண்டியன். அட்டையில் போட்டிருந்தப்படி
டயாபடீஸ் A to Z விளக்குகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாய் எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இணையத்தில் தேடி, சாப்பிடும் முறைகளையும், உடல்பயிற்சியின்
அவசியத்தை தெரிந்துக் கொண்டு, சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் சில பல சந்தேகங்கள்- முக்கியமாய் உணவுகளைக் குறித்து எப்பொழுது வரும்.

அந்நேரத்தில் இந்த புத்தகம் கிடைத்தது. நன்றி கிழக்கு பதிப்பகம், பத்ரி!

சர்க்கரை நோய்- இதைப் பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறார் மருத்துவர். உலகம் முழுவதும் 15 கோடி மக்களுக்கு இந்த வியாதி இருக்கிறது என்றால், இந்தியாவில்
இரண்டு கோடி பேர்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் ஏழ்மை நிலையில் வியாதியைப் பற்றி அறியாமல் இருப்பவர்கள் பலர் இருக்கலாம். உடல் எடை முக்கிய பங்கு என்றால், எனக்கு சொல்லப்பட்ட காரணம் தாயின் சீதனம்..

முதல் அத்தியாயத்திலேயே நம்பிக்கை தருகிறார். அதாவது மருத்துவரை நம்பியிருக்காமல், சர்க்கரை நோயைப் பற்றிய விழிப்புணர்வு, நீடித்த உடற்பயிற்சி, தீவிர உணவு கட்டுப்பாடு, உரிய காலஹ்தில் பரிசோதனைகள், உடல் பருமனைத் தவிர்த்தல். இந்த ஐந்தும் போதுமா, நோயின் தாக்கலில் இருந்து மீள என்றால் போதும் என்றுச் சொல்பவர் ஆறாவதாக ஒரு விஷயம்- மருத்துவ சிகிச்சை. குறைந்த மருந்தில் நிறைந்த சிகிச்சை. இதுவே சர்க்கரை நோய்க்கான சிறப்பான சிகிச்சை. (மேற்படி வரிகளை அப்படியே தந்துள்ளேன். அனாவசிய மருந்து மாத்திரைகள் வேண்டாம் என்கிறார் என்று நினைக்கிறேன்.

எடையைக் குறைக்க எளிய யோசனைகள் தந்துள்ளார். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் மிக உபயோகமாய் இருக்கிறது.

பத்திய உணவின் நிச்சய பலன் என்று ஒரு அத்தியாயம் இருக்கிறது. காலை, நன் பகல், மதியம், மாலை, இரவு என்று உணவு உண்ணுவதை ஐந்து முறையாய் பிரித்து என்ன உணவுகள் எவ்வளவு சாப்பிடலாம் என்று துல்லியமாய் கணக்கிட்டு சொல்கிறார். கலோரி கணக்கும், ரத்தத்தில் அதனால் சேரும் சர்க்கரை அளவையும் சொல்லியிருக்கிறார். உதாரணமாய் 200மி.லி நீர் மோர் குடித்தால் 10 மி.கி சதவீதம் வரை அதிகமாகலாம். 200 மி.லி சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி (பாதி பால்/ பாதி நீர்) குடித்தால் 40 மி.கி சதவீதம் அதிகரிக்கலாம். இதே சர்க்கரைப் போட்டு குடித்தால் 140 மி.கி வரை சர்க்கரை அதிகமாகுமாம்.

200மி.லி உப்பிட்ட எலுமிச்சை , தக்காளி ஜூஸ் குடித்தால் 30 மி.கி சதவீதம் அதிகமாகும். இதே 200 மிலி பழரசம் , சர்க்கரை இட்டு குடித்தால் 250 மி.கி அதிகரிக்கும்.

பொதுவாய் பட்டியலில் இருப்பதைப் பார்த்து ரத்தத்தில் சர்க்கரையை 50 மி.கி சதவீதம் குறைவான அளவில் அதிகமாக்கும் பானங்களை பருகலாம் என்கிறார்.

காய்கறிகள், பழ வகைகளிலும் எதை சாப்பிட்டால் எவ்வளவு சர்க்கரை ரத்தத்தில் அதிகரிக்கும் என்ற பட்டியலும் இருக்கிறது. முக்கனிகள் எனப்படும் மா, பலா, வாழையை
தவிர்க்க சொல்கிறார். இதைத்தவிர அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுவகைகளில், அசைவம் உட்பட அனைத்து சத்துக்களின் (நூறுகிராமில்) நீண்ட பட்டியல் இருக்கிறது.

''வாழ்க்கை முழுவதும் உடல்பயிற்சியா, உணவுகட்டுப்பாடா என்று திகைத்துவிடாதீர்கள். அதுவே அன்றாட வாடிக்கையாய் மாற்றிக் கொள்ளுங்கள். போக போக
பழகிவிடும். பிறகு நீங்கள் அதற்கு அடிமையாகியும் விடுவீர்கள். பிறகென்ன பூரண ஆரோக்கியம்தான்''
- மருத்துவர் சொன்ன அறிவுரையில் ஹைலைட் இதுதான். நன்றி டாக்டர். இதை புரிந்துக் கொண்டாலே, சர்க்கரை நோயால் வரும் பல பிரச்சனைகளை, வராமல் தடை செய்யலாம். நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வமில்லையா?

புத்தகத்தில் எதை எடுத்து இங்கு சொல்வது, எதை விடுவது என்று தெரியவில்லை. ஒவ்வொரு வரிகளும் முக்கியமானவை. பொதுவாய் இத்தகைய மருத்துவ விழிப்புணர்வு
புத்தகங்களில் சொல்வதை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இதில் டாக்டர் எம். மருது பாண்டியன் அவர்களால் சொல்லப்பட்ட விஷயங்களை எழுத்தில் மிக அருமையாய் வடித்திருக்கிறார் அய். ஜெயச்சந்திரன் (எழுத்து வடிவம்). அவருக்கும் ஒரு வாழ்த்து சொல்லிவிடுகிறேன். தமிழ் படிக்க தெரிந்தவர் அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. அந்தளவிற்கு எல்ல்லார் வீடுகளிலும் சர்க்கரையும் நோய் புகுந்துள்ளதே :-(

Labels:

11 பின்னூட்டங்கள்:

At Sunday, 01 February, 2009, சொல்வது...

எல்லாரும் அதைத்தான் சொல்கிறார்கள். உணவும், உடல் பயிற்சியும் அவசியம்.

தாங்க முடியாமல் பசி போகும் வரை காத்திருக்கக்கூடாது. பசி வருவதற்கு முன்னாலியே வயிறு நிரம்பி இருப்பது போல் வைத்துக் கொண்டால் கண்டதைச் சப்பிடத் தோணாது.

 
At Sunday, 01 February, 2009, சொல்வது...

நன்றி வல்லி. நீங்கள் ஒருத்தராவது கமெண்ட் போட்டீங்களே :-) உணவு பழக்கத்தை மூன்று முறை சாப்பிடுவதை ஐந்தாறு முறையாய், கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட்டால் அதீத பசியும் வராது. சர்க்கரை குருதியில் ஏறுவதும் மட்டுப்படும்.

 
At Monday, 02 February, 2009, சொல்வது...

நீங்கள் குறிப்பிட்டவை யெல்லாம் இரண்டாம் வகை சர்க்கரை நோயிற்கு (type 2 diabetes) சரி.முதல்வகைக்கு இன்சுலின் ஊசியை விட்டால் வழியில்லை.ஏனென்றால் அவர்களது கணையம் இன்சுலின் சுரப்பதே இல்லை:(

உணவில் நார்ச்சத்து சேர்த்துக்கொண்டாலும் சர்க்கரை குருதியில் சடுதியில் சேராது. அதற்குள் இரண்டாம்வகைக் காரர்களுக்கு மெதுவாக சுரக்கும் இன்சுலின் வந்து கவனித்துக் கொள்ளும். அதேபோல எளிதாக சர்க்கரை உடைபடும் மாவுச்சத்து பொருட்களைவிட (மைதா மாவு) சீக்கிரம் செரிக்காத கடினமான மாவுச்சத்து (complex carbohydrate)(முழு கோதுமை மாவு/ தீட்டப்படாத அரிசி) சீனி அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும்.

காலையில் வெறும்வயிற்றில் முளைகட்டிய வெந்தயம் சாப்பிட்டுவாருங்கள்.நல்ல பலன் இருக்கும்.

 
At Monday, 02 February, 2009, சொல்வது...

மணியன், தப்பு தப்பு :-) டைப் ஒன் டயாப்படிஸ், குழந்தைகளுக்கு வரும் டைப் ஓன் என்று எல்லாவற்றையும் விளக்கியிருக்கிறார். எனக்கு தேவையில்லை என்பதால் என்னையறியாமல் அதை படித்தும் இங்கு குறிப்பிட தவறிவிட்டேன்.

 
At Monday, 02 February, 2009, சொல்வது...

அவசியமான பதிவு மேடம்.. Thanks

 
At Wednesday, 04 February, 2009, சொல்வது...

நன்றி நர்சிம்

 
At Thursday, 05 February, 2009, சொல்வது...

நல்லதொரு புத்தகம் பற்றிய விமரிசனம். நிச்சயம் அனைவரும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியதொரு புத்தகம். மிக்க நன்றி சகோதரி.

 
At Thursday, 05 February, 2009, சொல்வது...

திரு. வெ. இராதாகிருஷ்ணன், கட்டாயம் வாங்குங்கள். மிக தைரியமாய் சிபாரிசு செய்கிறேன்..


ஐயா, உங்களைப் போன்று வேறு சிலரின் கமெண்டுகளை, அந்த சிறுகதை விவகார பதிவில்
நிறுத்திவிட்டேன். பின்னுட்ட பெட்டி மூட பட்டது என்ற அறிவிப்பையும் பார்த்திருப்பீர்களே?
அறிவிப்புக்கு பிறகு வந்த பின்னுட்டங்களை என் தனிப்பட்ட பார்வைக்கு மட்டும் வைத்துக்
கொண்டேன். நன்றி

 
At Thursday, 05 February, 2009, சொல்வது...

மிக்க நன்றி சகோதரி, ஆம் பார்த்தேன். இருப்பினும் கருத்தினைத் தங்கள் பார்வைக்கு அனுப்பினேன். :)

 
At Thursday, 19 March, 2009, சொல்வது...

நானும் இந்த குருப்பு தான்.

அக்யூ செக் மாதிரி டெஸ்டிங் டிவைஸ் பற்றி எழுதியிருக்காங்களா ?

 
At Monday, 20 May, 2013, சொல்வது...

Buy this Books @ MyAngadi.com

http://www.myangadi.com/sarkkarai-noi-samaalippathu-eppadi-nalam-publications

 

Post a Comment

<< இல்லம்